Monday, June 30, 2008

ஒரு சாமியார் உருவாகிறார்!

(வீரபாண்டியன் ஒரு பிரம்மச்சாரி. தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் அவன் லாட்ஜ் வாடகை கட்டுப்படியாகாமல்.. தனக்குத் தெரிந்த தரகர் ஒருவரிடம் சிறிய வீடொன்று பார்க்கச் சொல்லியிருக்க... அது பற்றி விசாரிக்க அந்த தரகர் வீட்டிற்குச் செல்கிறான்)



காட்சி - 1



இடம்: தரகர் வீடு



பாத்திரங்கள்: அண்டா, குண்டா.. ச்சே.. தரகர் தங்கமணி, வீரபாண்டி.



தரகர்: அடடே! வாங்க வீரபாண்டித்தம்பி!



வீ.பா: நான் வீரபாண்டி தம்பி இல்ல. வீரபாண்டியே நாந்தான்.



தரகர்: கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா! சும்மா பாசமா தம்பி'ன்னு கூப்பீட்டேன்..



வீ.பா: வேணாம். கூப்பிடாதீங்க. சொத்துல பங்கு கேட்டுடுவேன்.. (சுற்றிலும் பார்த்து) எங்க உங்க சம்சாரத்தைக் காணோம்?



தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!



வீ.பா: யோவ்.. வீட்ல இல்லியான்னு கேட்டேன். சரி.. வீடு பாக்கச் சொன்னேனே.. என்னாச்சு?



தரகர்: வீடு இருக்கு தம்பி. சின்னதா ஒரு ரூம். பாத்ரூம்.. டாய்லெட்.. அவ்ளோதான். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து நேராப் போய் ரைட்ல கட் பண்ணினா வீடு வந்துடும்..



வீ.பா: வீடு வந்துடுமா? என்னய்யா.. நடமாடும் வீடா? வாடகை எவ்ளோ? வீட்டுக்க்காரர் யாரு?



தரகர்: வாடகை ரொம்பக் கம்மிதான். ஹவுஸ் ஓனர் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. ரொம்ப நல்லவரு. கறை படியாத கைக்காரர்!



வீ.பா: ஏன்.. இங்க் பேனாவே யூஸ் பண்ண மாட்டாரா?



தரகர்: லஞ்சமே வாங்க மாட்டாருன்னேன்பா..



வீ.பா: இப்ப யாருமே லஞ்சம் வாங்கறதில்ல.. ஒன்லி `அன்பளிப்பு'தான்!



தரகர்: எல்லாத்தையும் விட தண்ணி கஷ்டமே இல்ல..



வீ.பா: பககத்துலயே டாஸ்மாக்கா? சரி.. எப்ப அங்க போலாம்?



தரகர்: கிளம்புங்க.. இப்பவே போலாம்.



காட்சி - 2



இடம்: புதிய வீடு



பாத்திரங்கள்: வீட்டுக்காரர், அவரது மகள், வீரபாண்டி & தரகர்



(தரகர் கதவைத் தட்டுகிறார்)



தரகர்: என்னங்க.. சார்.. ஹலோ..



வீ.பா: போதும்யா.. விட்டா மைக் டெஸ்டிங் மாதிரி பேசிட்டே போற..? பொறு.. வருவாங்க..



(கதவு திறந்து ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் நிற்கிறாள் ஒரு இளம்பெண்)



பெண்: யாருங்க வேணும்?



வீ.பா: வீட்டுக்காரர் இல்லையா?



(அவள் வெட்கமாய் நெளிகிறாள்)



வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..



பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..



வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?



தரகர்: (இடைமறித்து) உங்க வீட்டுக்காரர் இல்லீங்க.. ஹவுஸ் ஓனரைக் கேட்டோம்..



பெண்: ஓ! அப்பாவா?



வீ.பா: அது எனக்கெப்படிங்க தெரியும்?



தரகர்: (வீரபாண்டியிடம்) அடி வாங்காம போகமாட்ட போல..



பெண்: உள்ள வந்து உட்காருங்க.. (சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, இருவரும் சோபாவில் அமர்கிறார்கள்)



வீ.பா: யாருய்யா இந்தப் பொண்ணு? மாதாஜி திவ்யாதேவி மாதிரி?



தரகர்: ஐயோ.. அந்த மாதிரி இல்லிங்க.. கொஞ்சம் பக்தி ஜாஸ்தி.



(வீட்டு ஓனர் வருகிறார்)



ஓனர்: வீட்டைப் பாத்தீங்களா?



வீ.பா: பாத்துட்டோங்க.. அதுசரி.. ஏன் வீட்டு வெளி சுவத்துல பூரா காவி அடிச்சிருக்கு?



ஓனர்: அதுவா? மொதல்ல அங்க ஒரு சாமியார் இருந்தார்..



வீ.பா: சாமியாரா? அப்ப இந்நேரம் வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருக்குமே?



ஓனர்: அந்த மாதிரி இல்ல. ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின ஒரிஜினல் சாமியார்.. சரி.. எப்ப பால் காய்ச்சுவீங்க?



வீ.பா: தினமும் காலைல பால்காரன் வந்ததும் பால் காய்ச்சுவோம்



ஓனர்: யோவ்.. வீட்டுக்கு எப்ப குடி வர்ற-ன்னு கேட்டேன்..



வீ.பா: நாளைக்கே வந்துட்டா போச்சு!



காட்சி: 3



(புதிய வீட்டிற்கு குடி போன ஒரு வாரத்தில் வீரபாண்டியின் வேலை போய்விடுகிறது. வெறுத்துப் போய் அவன் அமர்ந்திருக்க கமிஷன் பணத்திற்காக தரகர் வருகிறார்)



தரகர்: தம்பி.. உங்க கம்பெனிக்கு போயிருந்தேன்.. வேலையை விட்டு நிறுத்தீட்டாங்களாமே.. ஏன் தம்பி?



வீ.பா: ஆங்? எல்லாரும் தூங்கும்போது, நான் மட்டும் வேலை செஞ்சேன்னுதான். நீ வேற ஏன்யா! டெம்பரவரி தானே.. வேணாம்னதும் வீட்டுக்குப் போடான்னுடாங்க..



தரகர்: சாப்பாடு, வாடகையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?



வீ.பா: அதான் யோசிக்கறேன். இருக்கறத வெச்சு ஒருமாசம் ஓட்டிடுவேன்.. (இந்த நேரத்தில் வெளியே ஒரு கிராமவசியின் குரல் கேட்கிறது)



கி.வாசி: சாமி.. சாமி..



வீ.பா: (வெளியே வந்து) யாரு வேணும்?



கி.வாசி: சாமி.. நீங்கதான் இந்த வீட்ல இருக்கற சாமியாரா? சாமி.. என் பசுமாடு ஒண்ணு காணல.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க சாமீ..



வீ.பா: யோவ்.. என்னய்யா இது என்னை பேச விடாம.. நானே வேலை தேடீட்டு இருக்கேன்.. இதுல இவன் மாட்டை வேற தேடணுமாம்.



கி.வாசி: சாமி.. எப்படியாச்சும் மனசு வைங்க சாமி..

வீ.பா: (எரிச்சலோடு) போய்யா மொதல்ல.. (என்று கிராமவாசியைத் துரத்த அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான்) போய்யான்னா.. (என்று கத்தியபடி கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்து எறிகிறான் வீரபாண்டி) இனிமே இந்தப் பக்கம் வந்தே... அவ்வளவுதான்..

தரகர்: தம்பி.. நம்ம கமிஷன்...

வீ.பா: நீ வேற கமிஷன், கமிஷன்னுகிட்டு.. என் ஃப்ரண்டு ஒருத்தன் எனக்குப் பணம் தரணும். ரெண்டு பேருமா போலாம். அதை வாங்கி உனக்குத் தர்றேன்
(மறுபடி வெளியே கிராமவாசியின் குரல் கேட்கிறது)

கி.வாசி: சாமீ.. சாமீ..

வீ.பா: இன்னும் போகலியா இவன்.. இவனை... (கோபமாய் வெளியே வர கிராமவாசி பசுமாட்டுடன் நிற்கிறார்)

கி.வாசி: சாமீ... எங்க கிராமத்துல சொன்னாங்க.. சாமியார் எதையுமே குறிப்பாத்தான் சொல்லுவாருன்னு. நீங்க கல்லைத்தூக்கி எறிஞ்சீங்களா.. சரீன்னு அந்த திசைலயே போனனா, என் பசுமாடு கெடச்சுடுச்சு! என் கூட வந்த பயலுக எல்லாம் உங்களைப் பாத்ததே இல்லியாமே.. பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கானுவ.. உங்களுக்கு பூஜை போடணுமில்லா.. இருங்க கூட்டியாரேன்.. (சொல்லிவிட்டு ஓடுகிறான். வீரபாண்டி தலையிலடித்தபடி உள்ளே போகிறான்)

தரகர்: தம்பி.. போலாமா உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு?

வீ.பா: இருய்யா.. குளிச்சுட்டு வரேன்


காட்சி: 4

(குளித்துவிட்டு வந்த வீரபாண்டி தலைசீவி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் வைக்கப் போக, வெளியே ஏதோ குரல் கேட்கிறது. விபூதிக் கையுடன் வெளியே வருகிறான். அங்கே கிராமவாசியும், அவன் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறு கூட்டமாய் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன் தரகர் அமர்ந்திருக்கிறார்)

தரகர்: நம்ம வீரபாண்டிச் சாமி ரொம்ப அடக்கமானவரு.. தான் கடவுளோட மறு அவதாரம்கிற கர்வமே இல்ல..

வீ.பா; (கோபமாய்) கர்வப்பட இதென்ன கலெக்டர் வேலையா? போங்கய்யா.. நான் சாமியாருமில்ல.. ஒண்ணுமில்ல...

கூட்டத்தில் ஒருவர்: என்னா அடக்கம்.. என்னா அடக்கம்..

மற்றொருவர்: `நான்' கிறது ஒண்ணுமில்ல ன்னு எவ்ளோ எளிமையா சொல்றாரு!!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

வீ.பா: சும்மா கத்தாதீங்க. நான் சாமியாரே (அதற்குள் தரகர் அவனது வாயைப் பொத்தி, காதில் கிசுகிசுப்பாய்..)

தரகர்: தம்பி.. சும்மா இருங்க.. இதை விட்டா சூப்பர் பிஸினசே இல்ல! (கூட்டத்திடம்) நீங்க சொல்லுங்க..

கூட்டம்: வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!

(இந்த நேரத்தில் வீட்டு ஓனரின் மகள் கையில் ருத்திராட்ச மாலையுடன்
வர.. கூட்டம் அவளப் பார்த்து..)

“சிஷ்யாதேவிக்கு ஜே! ஜே!”

வீரபாண்டி வெறுப்புற்றவனாய் `என்னமோ பண்ணுங்க' என்று கையை உதற கையிலிருந்த விபூதி சிதறுகிறது.. அதைப் பார்த்த தரகரும், வீட்டு ஓனரின் மகளும் கூட்டத்தினரோடு சேர்ந்து கோஷமிடுகிறார்கள்..

“வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!”

(வீரபாண்டி திகைத்து நிற்கிறான்)



பின்குறிப்பு: இன்றைக்கு புதிதாய் எழுத மூடு வராததால் (தப்பிச்சீங்க!) 1995 அக்டோபர் மாதம் உங்கள் ஜூனியர் மாத இதழில் நான் எழுதிய இந்த நாடகம் சின்ன சின்ன திருத்தங்களோடு..

”இதுக்கு நீ தர்ற ஊசிப்போன அவியலோட மொக்கையே பரவால்லியேடா”- ங்கறவங்கல்லாம் கையைத்தூக்குங்க'

அப்படியே இருங்க! இனி நான் அவியல் போடறப்பதான் கையை இறக்கணும்!

Sunday, June 29, 2008

அவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..!)

”பாரு அப்பாவை.. ஒரு வாரமா வீட்ல இல்லாம வீடு பூரா கச கசன்னு இருக்கு.. கூடமாட ஏதாவது ஹெல்ப் பண்லாம்-னு இல்லாம வந்ததும் வராததுமா கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்துட்டாரு” என்ற உமாவின் வாழ்த்துக்களோடு... வந்துட்டோம்ல!

*********************

மாப்ள சுப்பு @ கிரேசி கிரி

என் சொந்தக்காரர்களில் இவன் ஒரு சூப்பர்ஸ்டார். பொள்ளாச்சி கல்லூரி ஒன்றில் லைப்ரரியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் மாப்பிள்ளை (அம்மாவின் அண்ணன் மகன்) சுப்பிரமணி. இழவு வீட்டில் கூட எங்காவது எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அங்கே இவன் இருப்பான் என்று அர்த்தம். எங்கள் குரூப்பின் கிரேசி மோகன் இவன். கிரி என்பது இவனை கூப்பிடும் பெயர் என்பதால் கிரேசி கிரி என்று செல்லமாகச் சொல்லுவோம். அவ்வப்போது இவன் சொன்னவற்றை பகிர்ந்து கொள்ளும் ஐடியா இருக்கிறது.. இப்போதைக்கு...


அப்பாவுக்கான காரியங்கள் எல்லாம் முடிந்து கடைசி நாளில் நவக்கிரக ஹோமம். தீபாராதனை காட்டும் போது கலந்துகொள்ள என் மகள்களையும் அழைக்கச் சொன்னார் பண்டிதர்.


”மீரா....” நான் அழைத்தபோது பண்டிதர் கேட்டார்..

“என்னடா.. பாட்டி... இல்லைன்னா அம்மா பேரெல்லாம் வைக்கலியா?”

“இல்ல மாமா”

”என்னமோ போடா.. சரி கூப்பிடு.. சின்னவ பேரென்ன? த்ரிஷாவா... ரம்பாவா?”

உடனே கேட்டான் நம்ம கிரேசி கிரி..

“மாமா.. உங்களுக்கு அம்பாளைப் பத்தி மட்டும்தான் தெரியும்னு நெனச்சோம்.. ரம்பாவப் பத்தியும் தெரிஞ்சிருக்கே...”

இப்படி நக்கல் நையாண்டி மட்டுமல்ல.. அறிவார்ந்த விஷயங்கள் பேசுவதிலும் கிரி தேர்ந்தவன்.

ஒரு நாள் யாரோ வந்து அவனிடம் “சோறு தின்னாச்சா?” என்று கேட்டுவிட்டார்கள்.

“தின்னாச்சா-ன்னு கேக்கக்கூடாது. சாப்பிட்டாச்சா-ன்னு கேளுங்க”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் கிரி?” என்று கேட்டேன் நான்.

“சோறை நாம தேடிப்போய் சாப்பிடக் கூடாது. அதுக்குப் பேர்தான் `திங்கறது'. மிருகங்கள்தான் தனக்கான உணவைத் தேடிப் போகும். அதுனாலதான் `இரை தின்றது' -ங்றாங்க. உணவு நம்மளைத் தேடி வர நாம உட்கொண்டா அது சாப்பிடறது. பாரதியார் கூட இத சொல்லிருப்பார் `தேடிச் சோறு நிதம் தின்று' ன்னு”

உணவுக்காக மட்டும் அலையக்கூடாது-ங்கறதுதான் இதுக்கு அர்த்தம். அதுக்காக, சாப்பிடக் கூப்பிடும்போது ஹால்ல உட்கார்ந்து `சாப்பாடை இங்க கொண்டு வா' -ன்னு அதிகாரம் பண்ணி வாங்கிக் கட்டிக்கிட்டா நான் பொறுப்பில்ல!

*********************************

இயக்குனர் சீமானின் ஆவேசமான பேச்சை கிரி எனக்குக் குடுத்த ஒரு சி.டி ஒன்றில் கேட்டேன். அதில் கருப்பாக இருப்பதால் தன்னை ஒதுக்கும் தன் காதலியைப் பார்த்து, காதலன் சொல்வதாக கிராமங்களில் சொல்லப்படும் ஒரு சொல்லாடலை அழகாகச் சொல்லியிருந்தார் அவர்.

“என்னோட கருப்பு உன் உச்சந்தலையில இருக்குடி. ஆனா உன்னோட செவப்பு என் உள்ளங்கால்ல இருக்கு. என் கருப்பு உன் உடம்புல எங்கியாவது இருந்தா அத மச்சம்-ன்னு கொண்டாடுவாங்க. அதே உன்னோட செவப்பு என் உடம்புல இருந்தா அது தேமல்!”

***********************************

எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்று - ட்டி.பாலசுப்பிரமணியம்.

குழந்தையின் அழுகையை
நிறுத்தப்பார்.
அப்புறம்
அலையின் கூச்சலை
ரசிக்கலாம்.

ஜூலை 1991 - கணையாழி.

Thursday, June 26, 2008

அவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)


என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரு பதிவை ஆரம்பிப்பது இதுதான் முதல் முறை! வலையுலகில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காமல் நேரடியாக அவியல் எழுத உட்கார்ந்து விட்டேன்!


********************************************

இன்றுதான் பார்த்தேன். நேற்று நான் எழுதியது ஐம்பதாவது பதிவு! ஐம்பதாவது பதிவிற்கு பிரபல பதிவர் "பைத்தியக்காரன்" எழுதிய மாதிரி ஏதாவது உருப்படியாக எழுத வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்து, கடைசியில் ஞாபகமே இல்லாமல் போய்விட்டது! ஆனால் ரொம்ப மொக்கையாக இல்லாமல், ஓரளவிற்கு உருப்படியான பதிவென்றுதான் நினைக்கிறேன்..

*************************************************
இன்றைக்கு வந்து தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது.. அங்கங்கே நமீதாமயமாகி இருந்தது! என்னதான் இருக்கிறது நமீதாவிடம் என்று பார்க்க அவரது சில புகைப் படங்களைப் பார்த்தேன். (இல்லீன்னா ஒண்ணுமே தெரியாது!!) மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.. ஏதோ இருக்கிறதல்லவா அவரிடம்?



***********************************


எனக்கு பின்னோட்டம் இடுபவர்கள் அளிக்கும் ஊக்கம் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.. (உடனே எல்லாரும் நிறுத்தீடாதீங்க!! கவிஞர் வாலி (எனக்கு புடிச்ச கவிஞர்! இவரைப் பத்தி தனியே ஒரு பதிவு போடப் போறேன்!) ஒருமுறை சொன்னார்..


"ஊக்கு விற்பவனையும்
ஊக்குவித்தால்
அவன் ஒருநாள்
தேக்கு விற்பான்!"


சூப்பர் இல்ல?

***********************************

ஊருக்கு வந்ததில் இருந்து இங்கே ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களின் "இப்போ பத்திரிகைக்கு கதை, கவிதை எழுதிப் போடறியா?" என்ற கேள்விக்கு, "இப்போ BLOG ஆரம்பிச்சு அதுல எழுதிட்டிருக்கேன்" என்றால் அடுத்ததாக வரும் கேள்வி..

"ஒரு படைப்புக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்பதுதான்..

இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!
"எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் சிரிக்கிறார்கள்!

*************************************

எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்றைய கவிஞர் "கல்யாணராமன்".

இவரது ஒரு சின்ன கவிதை (ஹைக்கூ என்று சொல்லலாமா? ம்ஹூம்!) அவ்வப்போது என் மனதில் வந்து போகும்..


"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"

Wednesday, June 25, 2008

எங்கே இந்தக் கவிஞர்கள்?

என்னுடய ஒரு பதிவிற்கு ரமேஷ் வைத்யா என்கிற ஸோமா வனதேவதா பின்னூட்டமிட்டிருந்தார். திங்கள் இரவு ஊருக்கு புறப்படும் நேரம் அவரது பின்னூட்டத்தைப் பார்த்ததும் மனது பழைய நினைவுகளில் மூழ்க.. நான் எப்போதோ எழுதி வைத்திருந்த "என்னைக் கவர்ந்த கவிதைகள்" என்ற நோட்டை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்.

ரவி சுப்பிரமணியன், கல்யாண்ஜி, ஸோமா வனதேவதா என்று ஆரம்பித்து அவ்வப்போது எழுதும் எல்லாரது கவிதைகளும் அதில் இருந்தது. சிலரது கவிதைகளைப் படிக்கும் போது, இவர் இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்கிறார், ஏதாவது தொகுப்பு வெளியிட்டிருக்கிறாரா என்று பலப்பல கேள்விகள் மனதில்.


எனக்கு கவிதைகளுடன் பெரிய பரிச்சயம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. எதோ லைட் ரீடிங் என்பதாகவே என் வாசிப்பு இருந்திருக்கிறது.

கீழே உள்ள கவிதையைப் பாருங்கள்..


"நீ என்னை நானுன்னை நினைக்கின்ற நேரங்கள்

வேறில்லை ஒன்றெனினும் வேறாவோம் நாம் என்பேன்

நீயின்னும் என்றன்னை நீயற்ற நானாக

வேஎண்ணும் காரணத்தால்"


இது தீபப்பிரகாசன் என்பவர் கணையாழியில் எழுதிய கவிதை. எப்போதும் என் நினைவில் மனப்பாடமாக இருக்கும் இந்தக் கவிதை வந்த ஆண்டு என்ன தெரியுமா? 1971 டிசம்பர்! (நான் பொறக்கவே இல்லை!)

இந்த கவிஞரின் வேறு கவிதைகள் யாருக்காவது தெரியுமா? ஏதாவது தொகுப்பு வெளியிட்டிருக்கிறாரா?


ரவி சுப்பிரமணியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் அவ்வப்போது வருகிறது.. அவரது பல கவிதைகளின் வெறித்தனமான ரசிகன் நான். சொல்லப் போனால்...

கடிதம்

கவிதை

எழுத்து

எல்லாந்தான் இருக்கு நல்லா,,

வயிறடங்குமா

பாராட்டில் பட்டயத்தில்.

எழுத்துக்கு சரஸ்வதி

சோத்துக்கு..?

என்ற அவரது கவிதையைப் படித்துவிட்டு என் சென்னைக் கனவை மூடி வைத்துவிட்டு வேலை தேட ஆரம்பித்தவன் நான்.. ! அவரது கவிதைகள் இன்றும் எனக்கு டானிக் போல!

சரி இப்போது எனக்கு பிடித்த இன்னொரு கவிதை..


இதை எழுதியவர் இராசரத்னா. இவர் யார் இப்போது எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது!

அவ்வளவுதான்


தனியே சிரிக்கலாம்

தூங்காது

இரவு முழுவதும்

கனவு காணலாம்

கொஞ்சம்

கவிதை மாதிரி எழுதலாம்

பொய்.. பொய்யாய்ப்

புரட்டிப் புகழலாம்.

எப்போதாவது

தொட்டுக் கொள்ளலாம்.

முடிவில்

தாடி வளர்க்கலாம்.

வேறு

என்ன இருக்கிறது

.

.

.

காதலில்?

(அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்.. எல்லாரும் தயாராக இருக்கலாம்!!)

Monday, June 23, 2008

அவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்

இப்போது மணி இரவு எட்டரை... 23.06.08

இரண்டு நாட்களாய் அவியல் எழுத முடியவில்லை. (வந்துட்டாண்டா ஆயதத்தோட!) நேற்று எதிர்பாராத திருப்பம் என்றொரு கதை எழுதப்போய் நிஜமாகவே எதிர்பாராத திருப்பமாய் நானே முடிவை மாற்ற வேண்டியதாய்ப் போயிற்று. ஆனால் அது ஒரு சுவையான சவாலாக இருந்தது!
அதில் ஜெயித்தேனா, தோற்றேனா தெரியவில்லை. ஆனால் மனதுக்கு நிறைவாக உணர்ந்தேன்.


-------------------------


இதற்கு முந்தைய அவியலில் கிசுகிசுவில் சொல்லியிருந்த அந்தப் பதிவர் லதானந்த். சனிக்கிழமையன்று நான் குசேலன் பட விமர்சனம் பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது... கீழே ‘மௌனம் கலைகிறது’ என்று அவரது பதிவு வந்திருந்தது. உடனே குஷாலாகி, அதற்கு பின்னூட்டம் போட்டுவிட்டு.. கம்ப்யூட்டரை அணைத்து விட்டு அலுவலகம் கிளம்பிக் கொண்டே அவரை அழைத்தேன்.


“அங்கிள்.. நான் கிருஷ்ணகுமார்”


“ஆங்.. சொல்லுங்க பரிசல்”


“மறுபடியும் எழுதினதுக்கு நன்றிகள்”


“ஓ.. பாத்துட்டீங்களா?”


“ஆமாங்க. நான் குசேலன் விமர்சனம் எழுதி பதிவேத்தம் பண்ணீட்டு பாத்தா..”


“என்னது? குசேலன் விமர்சனமா?”


“ஆமா அங்கிள்.. ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேக்கறீங்க?”


“பரிசல்.. நான் இப்பொதான் `நான் கடவுள்’ விமர்சனம் எழுதி அப்லோடு பண்ணினேன்”


அடக்கடவுளே! உலகமே இந்தக் கோயம்பத்தூர்காரனுங்களப் பாருடான்னு எங்களை சொல்லப் போகுதுன்னு நெனச்சுகிட்டேன்!

-------------------------------

போற போக்குல சில பேர் சொல்ற டயலாக் அவ்வளவு ரசிக்கற மாதிரி இருக்கும்.. சனிக்கிழமை காபி வித் அனு-ல கிரேசி மோகன் சொன்னார்.


“இப்பொவெல்லாம் கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கறதே கூட்டுக் குடும்பம்ன்னு ஆகிப் போச்சு!”


அத மாதிரி நம்ம ஈரோட்டு பதிவர் – நண்பர் நந்துகிட்ட (f/o நிலா) புகைப்படங்களைப் பத்தி நேத்து பேசிகிட்டிருந்தபோது அவர் சொன்னார்.


“போட்டோங்கறது காமிரா எடுத்த போட்டோவா இருக்க கூடாது கிருஷ்ணா. நம்ம எடுத்த போட்டோவா இருக்கணும்”

--------------------------------



லீவு லெட்டர்

இன்று இரவு சொந்த ஊருக்கு (உடுமலைப்பேட்டை) செல்கிறேன். எனது தந்தையின் முதலாமாண்டு நினைவு தின சடங்குகள், சம்பிரதாயங்களுக்காக. நேரம் கிடைத்தால் ஏதேனும் பிரவுசிங் சென்டர் போய் மொக்கையைத் தொடர முடியும். ஆனாலும் எல்லோரது பதிவிலும் போய் பின்னூட்டமிட நேரமிருக்காது என்று நினைக்கிறேன். நண்பன் செந்தில் வீட்டுக்கோ, குணா வீட்டிற்கோ சென்று இணையத்தில் உலவினால் பின்னூட்டமிட முடியும். இல்லையென்றால்..


திரும்ப ஞாயிறன்று மதியம்தான் இங்கு வருவேன். என்னமோ உற்ற நண்பர்களை விட்டு விட்டு செல்வது போல ஒரு உணர்வு. இப்போதும் ஊருக்கு கிளம்பும் நேரத்திலும் உங்களுக்கு இப் பதிவை அளித்துவிட்டுப் போகவே அவசர அவசரமாய் வந்தேன்.



ஆகவே.. என் பின்னூட்டங்கள் இல்லையெனினும் தவறாது என் வலைப்பூவிற்கு வருகை தந்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்! (நாலு நாளைக்கு தொல்லை விட்டதுடா-ங்கறீங்களா??!!)

------------------------------------------

ஒரு மாதிரி மனது கனமாக உணர்வதால் ஒரு ஜோக்குடன் முடிக்கிறேன்..


பஸ்ஸில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் ஒருத்தன் டிக்கெட் எடுக்காமல் சட்டைப் பை, ஜாமெட்ரி பாக்ஸ் என்று எல்லாவற்றிலும் எதையோ தேடுவதைப் பார்த்த கண்டக்டர் கேட்டார்.


”ஏன்ப்பா என்னாச்சு?”

“டிக்கெட் எடுக்க அப்பா அஞ்சு ரூபா குடுத்திருந்தாரு. அதக் காணோம்”


கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவான் போலப் பேசினான்..


இரக்கப்பட்ட கண்டக்டர் கேட்டார்..


”சரி விடு தம்பி.. நீ எங்க போகணும்னு சொல்லு. டிக்கெட் தர்றேன்”


அவன் ஸ்டாப் பேரைச் சொன்னான்.


கண்டக்டர் நான்கு ரூபாய்க்கான டிக்கெட்டை கிழித்து அவனிடம் கொடுத்தார்.


வாங்கிக் கொண்ட அந்தச் சிறுவன் கேட்டான்..


“பாக்கி ஒரு ரூபா?”


(உடனே post commentக்கு போய் ரிப்பீட்டேய்’ன்னு வாரக் கூடாது. இதுவரைக்கும் கேக்காதவங்க ரசிக்கட்டுமே!)

சிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)


தன் எதிரில் பட்டவர்களுக்கெல்லாம் சலிக்காமல் கை கூப்பி ”வணக்கம்.. வணக்கம்” என்றவாறே அந்த ப்ரிவ்யூ தியேட்டருக்குள் நுழைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உள்ளே உலக நாயகன் கமலஹாசனும், கே.எஸ்.ரவிகுமாரும் அவரை எழுந்து நின்று வரவேற்க..

“நோ..நோ.. உக்காருங்க. லேட்டாயிடுச்சா?”

” இல்ல ரஜினி. என்னிக்கு நீங்க லேட்டா வந்திருக்கீங்க? படத்தை போட்டுடலாமா”


“ஓயெஸ்.. ஓயெஸ்..”


அனைவரும் தயாராக சூப்பர்ஸ்டாருக்காக தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டப்பட்டது.


டம் முடிந்ததும் எழுந்து கமலை கட்டிக் கொண்டார் ரஜினி.


“கிரேட்.. கிரேட்..! எப்டி எப்டி இவ்ளோ திங்கிங்க், இவ்ளோ ஸ்ட்ரெய்ன்..”


“ஆக்சுவலி, நான் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி நடிச்சது கோவிந்த் கேரக்டர்தான். ஏன்னா மத்த எந்த கேரக்டரோட சாயலும் இல்லாம நான் என்னை மாதிரியே நடிக்கணுமே.. அதான் எனக்கு கஷ்டமா இருந்தது..”


“ஹஹ்ஹஹ்ஹஹா.. யு ஆர் ரைட்! அந்த மாதிரி தசாவதாரம் ங்கற பேருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும்..”



“நான் சொல்றேன் சார்” இடைமறித்தார் கே.எஸ்.ரவிகுமார்.


“அதாவது தசாவதாரம்ன்னு பேர், பத்து வேஷம்.. எல்லாம் சரி. அந்த வேஷங்களுக்கும் விஷ்ணுவோட பத்து அவதாரங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கணும்ன்னு நெனைச்சோம்”


“இண்ட்ரஸ்டிங்க்!”


“உதாரணமா நம்பி கடல்ல மூழ்கும்போது மீனைக் காட்டி அந்த ஷாட்டை முடிச்சிருப்போம்”


“மச்சாவதாரம்?”


“யெஸ். அப்புறம் கோவிந்த். ஒரே பொண்ணு பின்னாடி சுத்துவாரு. ராமர்! பேரே கோவிந்த் ராமசாமிதான்! ஜப்பானிய கேரக்டர் வில்லனை கையாலயே வதம் பண்ணுவார். நரசிம்ஹ அவரதாரம். அதுமில்லாம அவர் பேரே ஸிம்ஹ நரஹசி-ன்னு வெச்சிருந்தோம். Infact ஜப்பான்ல அப்படி ஒரு பேர் இருக்கு ”


”யா யா ஐ நோ”.


“அப்புறம் தாடி வெச்சிருக்கற அவதார் சிங் – பரசுராமன். பரசுராம அவதாரம் தாடியோட இருக்கும். மூணு அடி உயர பாட்டி - வாமனன். பலராம் நாயுடு - பலராமன். எட்டடி உயர கலிபுல்லா – கல்கி. கல்கிதான் பெரிய அவதாரம். அதுனால எட்டடின்னு உருவகம் பண்ணிகிட்டோம். பூவராகன் கருப்பா இருப்பார்.. கிருஷ்ணாவதாரம்”


“ஆல்சோ.. அசினை சந்தானபாரதி துகிலுரிக்கும்போது அவர் வருவாரு.”


“ஆமா சார்”


“வாவ்.. வாட் எ வொர்க்.. வாட் எ டெடிகேஷன்!”


“கமல் சார் பத்து வேஷத்துல படத்துல நடிச்சிருக்காரு. அதில்லாம அசோஷியேட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டயலாக் ரைட்டர்-ன்னு பல அவதாரங்கள் ஸ்கீரீனுக்கு வெளில பண்ணிருக்கார்”

”யு ஆர் ரைட் ரவிகுமார்!.. இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு ஒண்ணுமே குடுக்காம இங்கிருந்து போறதா” என்ற ரஜினி தன் உதவியாளரை அழைத்து...


“ஸ்வீட் என்னாச்சு?”


“சார் ஜிலேபிதான் இருந்தது”


“ஒகே.. ஒகே” என்றபடி ஒரு ஜிலேபியை எடுத்து கமலுக்கு கொடுக்கப் போக..


“முதல்ல குசேலனுக்குதான்” என்று கமல் கூறி ஜிலேபியை கையில் வாங்குகிறார்.


"குசேலனா..? அவரு இன்னும் சிவாஜிதான் சார். ரிலீசானாத்தான் குசேலனா மாறுவாரு” என்கிறார் ரவிகுமார்.


"அப்படியா? அப்ப இந்தாங்க சிவாஜி வாயிலே ஜிலேபி யைப் போடுங்க” என்றபடி ரஜினிக்கு கமல் ஊட்டப் போக அந்த இடமே கலகலப்பானது.


-------------------------------------

பின் குறிப்பு 1: சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பிலான ரிலே ரேஸில் என்னையும் சேர்த்துக் கொண்ட (நீயா கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு டயலாக்கப் பாரு!!) கயல்விழி முத்துலட்சுமி மேடத்துக்கு என் நன்றிகள்.



பின்குறிப்பு 2: ஜெயா மற்றும் விஜய் டி.வியில் தசாவதாரம் பட விமர்சனம் செய்யப்பட்டபோது கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சில விஷயங்களை பதிவாக எழுத நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் இந்த ரிலேரேஸ் வாய்ப்பு வர, இரண்டையும் கலந்து கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதினேன்.


பின்குறிப்பு 3: எனக்குப் பிறகு இதை நான் யாரிடமாவ்து தள்ள வேண்டும். அவரை விட்டால் வேறு யார் எனக்கு.. ஆகவே திருவாளர் லக்கிலுக் அவர்களே.. சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்!

Sunday, June 22, 2008

எதிர்பாராத திருப்பம்


எனக்கு பதட்டமாக இருந்தது..

அவரை நான் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது.. இதுவரை இப்படி ஒரு நாளை நான் சந்தித்ததில்லை..

அப்படி என்னதான் நடந்தது..?

"நாளைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு" என்று கூறி நேற்று நேரத்திலேயே அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.

நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு.. படுக்கைக்கு சென்றபோது.. மணி பத்தரை ஆகி விட்டிருந்தது.. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். படுத்த சிறிது நேரத்திலேயே அலாரம் வைக்க மறந்தது ஞாபகம் வர.. என் செல்போனைத் தேடினேன். ஹாலிலேயோ, சமையலறையிலேயோ வைத்து விட்டேன் போல. எழுந்து போக சலிப்பாய் இருக்கவே, தலை மாட்டில் அவரது போன் இருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. சரி.. அதிலேயே அலாரம் வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்தேன்..

அலாரம் வைத்ததோடு நின்றிருக்கலாம்.. ஸ்க்ரீனில் ஏதோ சிம்பல் தெரியவே அது என்னவென்று பார்த்தேன். அடுத்த நாளைக்கான ஒரு ரிமைண்டர் வைத்திருந்தார்..

"Meeting at Hotel Chalukya - Room No. 205 - To go with Sudha" என்று சொன்னது அந்த ரிமைண்டர். அதற்குப் பிறகு நான் தூங்கவேயில்லை.

யார் இந்த சுதா? அது என்ன ஹோட்டலில் மீட்டிங்?

அவர் எப்போதுமே எதிர்பாராத ஆபீஸ் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை. அதனால் எப்படி இதைக் கேட்பது என்று தயக்கம்.. பயம்.

இன்று காலை எப்போதும் போல வழக்கமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் பாட்டுக்கு கிளம்பி விட்டார்.

"ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க அபி?" என்று என்னைக் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.. கேட்கவே இல்லை.

யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் செல்போனை எடுத்தேன்..

ரமணியிடம் உதவி கேட்கலாம்..

"ரமணி.. ஒரு உதவி வேணும் உன்கிட்ட”

“சொல்லு அபினயா”


அவ்வளவுதான்.. ரமணியின் குரலைக் கேட்டதும் நான் உடைந்து விட்டேன். என்னையும் அறியாமல் குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன்.


“ஏய்.. ஸ்டுப்பிட்.. சும்மா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்காதே. ஆபீசுக்கு போன் போட்டு அவர்கிட்டயே கேளு.. மனசுல வெச்சுக்கறதுதான் உன்னைமாதிரி பொண்ணுகளோட பெரிய தப்பு”



ரமணி சொன்னது சரியோ என்று தோன்றியது.


எதற்கு மனதில் போட்டு குழப்பிக் கொண்டு? அவரிடம் நேரடியாகவே பேசிவிடலாம்.


அவரின் செல்போனை டயலினேன்.


தொடர்ந்து ரிங் போய் கட்டானது.


என் மனக் குரங்கு மறுபடி கிளை தாவ ஆரம்பித்தது.


வேறு ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் வரும் முன்.. அவரது அலுவலகத்தில் அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக எண்ணுக்கு போன் செய்தேன்.


நான்காவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.


வேறு யாரோ எடுத்தார்கள். ஆண் குரல்தான்.. யாரது..


“ஹலோ.. ராகவ் சார் இல்லயா?”


“சார் வாஷ் ரூம் போயிருக்காருங்க மேடம். நீங்க?”


“நான் அபினயா.. அவர் மனைவி”


“வணக்கம் மேடம்”


“நீங்க?”


“நான் சுதாகர் மேடம். சாரோட பி.ஏ”


”எ..என்ன பேர் சொன்னீங்க?”


“சுதாகர்”


“இன்னைக்கு ஹோட்டல் சாளுக்யால மீட்டிங்.....”


நான் முடிக்கும் முன்..


“நானும் சாரும்தான் போறோம் மேடம்...”


ச்சே.. என்ன பொண்ணு நான்.. சுதாகரை சுதா என்று அவர் ரிமைண்டரில் வைத்திருந்ததால் குழம்பி..


“சரி சுதாகர்.. ஒண்ணுமில்ல சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும்”


“எப்படியும் ஒம்பது பத்து மணியாயிடும் மேடம்.. வீட்டுக்கு போய்தான் சாப்பிடணும்னு சொல்லீட்டிருந்தாரு”


“ஒக்கே.. நான் போன் பண்ணினதா சொல்ல வேண்டாம்.. அப்புறமா அவர் மொபைல்ல பேசிக்கறேன்”


“சரிங்க மேடம்”

போனை வைத்ததும் எனக்கு ரிலாக்ஸாக இருந்தது. இரவு வரும் அவருக்காக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

-----------------------------------

பரிசல்காரன்: என்னடா உங்களுக்கு வேற வேலையே இல்லயா? ட்விஸ்ட்.. ட்விஸ்ட்ன்னு இந்த மாதிரி எத்தனை கதைடா எழுதுவீங்க என்று சலித்துக்கொள்கிறவர்கள் மட்டும் கீழே படிக்கவும்..

-----------------------------------------


ராகவின் அலுவலகத்தில்...


“என்னப்பா.. போன் அடிச்ச சத்தம் கேட்டது? யாரு?”


“உங்க மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. நீங்க கணிச்சது சரிதான் சார். நான் நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேன். என் பேருக்காகத்தானே என்னை வேலைலயே வெச்சிருகீங்க..”


“வெரிகுட்.. நீ போய் மார்க்கெட்டிங்ல இருக்கற சுதாராணிய என் காருக்கு வரச் சொல்லு. சாளுக்யா போகணும்”

------------------------------------------------------


மீண்டும் பரிசல்காரன்: என்னடா கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ஏமாத்தறதா கதய முடிச்சுட்டியே.. அவ மட்டும் என்ன இளிச்சவாச்சியா?’ ன்னு வருத்தப் படறவங்க மட்டும் கீழே படிக்கவும்..

------------------------------------------


அபினயாவின் வீட்டில்:


ராகவின் அலுவலகத்திற்கு பேசிய பின் அபினயா ரமணிக்கு போன் போட்டாள்..


“ரமணி.. நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமில்ல.. அந்த சுதா, சுதாகர். அவரோட பி.ஏ.”


“எனக்கு தெரியும்.. நீதான் மனசப் போட்டு குழப்பிக்கற”


“சரி.. அவரு வர எப்படியும் ஒம்பது மணி ஆயிடுமாம்”


“ஏய்.. ஏய்.. என்ன?”


“ப்ளீஸ்டா.. உன்னைப் பாத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. வாடா”


“சரி அபி.. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்” என்றான் ரமணி.

--------------------------

மீண்டும் மீண்டும் பரிசல்காரன்:- "இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவிர்க்கவும்” என்று உரிமையோடு கடிந்து கொண்ட வடகரைவேலன்.. ‘என்னய்யா குடும்பம் இது’ என்று ஆதங்கப்பட்ட அகரம்.அமுதா, ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன்.. எல்லாத்துக்கும் மேல `கேஸ் வரப் போகுது’ என்று பயமுறுத்திய வெண்பூ ஆகியோரது பின்னூட்டங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட முடிவு..

---------------------------------------


அபினயாவிடம் வருவதாய் சொல்லிவிட்டு போனைத் துண்டித்த ரமணி காரில் ஏறி நேராக செலுத்தினான். காரை நிறுத்திய இடம்..


ஹோட்டல் சாளுக்யா!


நேராக ரிசப்ஷன் நோக்கி நடந்தவன் தூரத்தில் வந்த ராகவ்-வின் இன்னோவாவைப் பார்த்ததும் ஹோட்டலின் வாயிலிலேயே நின்றான்..


காரை விட்டிறங்கிய ராகவ், ரமணியைப் பார்த்ததுமே முகம் வெளிறினான்.


”ர.. ரமணி.. நீ எங்க இங்க?”


“ராகவ்.. நீ எல்லை மீறிப் போய்ட்டிருக்க. ஒரு நல்ல நண்பனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அபி உன்னைப் பத்தி விசாரிக்க எங்கிட்ட சொன்னா. உனக்கும், சுதாராணிக்கும் இருக்கற லேசான பழக்கம் தெரிஞ்சும் வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லாத, திறமைசாலியான உன்னை மாத்திடலாம்ன்னு நம்பி உன்கிட்டயே அதப் பத்தி கேட்டேன். நீ ”அப்படியெல்லாம் இல்ல. சும்மாதான் பழகறோம்” ன்ன. ஆனா கல்யாணமாகி இவ்வளவு நாள் கட்டுப்பாடோட இருந்த நீ, இப்போ இப்படி..”


“ரமணி.. நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல”


“சும்மா இருடா. உனக்காக பொய் சொல்ற சுதாகர் ஆயிரம் ரூபா குடுத்தா உன்னைப் பத்தி என்கிட்டயும் சொல்லுவான்னு புரிஞ்சுக்கோ. இப்பவும் நீ வர லேட்டாகும், போரடிக்குதுடா.. வீட்டுக்கு வா”ன்னு உரிமையோட அபி என்னைக் கூப்பிடறா. நீ சுதாராணிகிட்ட பழகறமாதிரி நான் அபிகிட்ட..”


“ரமணி... ப்ளீஸ்.. என்னை கொல்லாதே”


“அட.. நீங்க மட்டும் என்ன வேணா பண்ணலாம். அப்படித்தானே?”


“இல்ல ரமணி. ஏதோ ஒரு நொடி பிசகினதுல இப்படி ஒரு தப்பு பண்ண இருந்தேன்.. இனி இந்த மாதிரி நினைச்சுக்கூட பாக்க மாட்டேன். உன் கார் இங்கயே இருக்கட்டும். வா ரெண்டு பேருமா இதுலயே வீட்டுக்கு போலாம்” என்ற ராகவ் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய சுதாராணியைப் பார்த்து சொன்னான்..

“நாளைக்கு அக்கவுண்ட்ஸ்ல போய் உன் கணக்கை செட்டில் பண்ணிக்கம்மா”

Saturday, June 21, 2008

குசேலன் - முதல் விமர்சனம்!!

படம் ஆரம்பித்ததுமே எப்போது சூப்பர் ஸ்டார் வருவார் என்கிற ஆவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது..

படத்தில் ரஜினிக்கு இணையாக நாம் பாராட்ட நினைப்பது பசுபதியின் கேரக்டர்.. அந்த கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யாரையும் நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை! முடிவெட்டும் தொழிலாளியாய் வாழ்ந்திருக்கிறார். தனது தொழில் கொஞ்சம் சுணக்கம் அடையும் போது, மனசுக்குள் வருந்துவதை முகத்தில் காட்டாமல் மனைவியிடம் நடிக்கும் காட்சிகளில் நான் மனதில் பதிகிறார். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் மருகும் போதும், தனது ஊருக்கு வரும் பால்ய நண்பர் சூப்பர் ஸ்டாரிடம் உதவி கேட்க தயங்கி போகாமலே விடும்போதும் தனது கூத்துப் பட்டறை அனுபவ நடிப்பால் எல்லோரையும் கலங்கடிக்கிறார். சபாஷ் பசுபதி..

ரொம்ப நாளைக்குப் பிறகு மீனா!! இவ்வளவு நாள் ஏன் இந்த அழகான.. திறமையான நடிகையை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் சினிமா என்று நினைக்க வைக்கிறது.. நிச்சயம் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல செகண்ட் இன்னிங்க்சை துவக்கும்..

ரஜினி! படத்தில் இவர் வந்த பிறகு படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்! அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் நிச்சயம் அவரது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாய் வசனங்கள் அமைத்திருப்பது பி.வாசுவின் சாமர்த்தியம்!

இறுதிக் காட்சியில் பள்ளியில் அவரது உரையை முடித்துக் கொண்டு பசுபதியை தேடுவதும், பசுபதியை அவரது வீட்டிற்கே சென்று சந்திப்பதும் நாம்மை நெகிழ வைக்கும் காட்சிகள்..

இசை.. ஜி.வி.பிரகாஷ்குமார்! சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற பதட்டமிலாமல் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்! ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்ட "சினிமா சினிமா சினிமாதான்" பாடலின் இசையும், வரிகளும் (வாலி!!) நம்மை கட்டிப் போடுகின்றன. அந்தப் பாடலை தியேட்டரில் சரியாக கேட்கவே முடிவதில்லை! விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் , த்ரிஷா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரைப் பிளக்கிறது!

மொத்தத்தில்.. ரஜினி நடித்து பி.வாசு டைரக்ஷனில் வெளிவந்திருக்கும் பசுபதி படம்!

(இப்போ என்ன பண்ணுவீங்க??)

Friday, June 20, 2008

எதிர் வீட்டு தாவணி

எனக்கு ரொம்ப நாளாய் அந்த எதிர் வீட்டு தாவணி மேல் ஒரு `கண்'...

அவள் அப்பா, அம்மா இல்லாத சமயமாய் போன வாரத்தில் ஒரு நாள் போய் அவளிடம் பயமின்றி நேரடியாகவே கேட்டும் பார்த்து விட்டேன். ம்ஹூம்! அவள் ஒத்துக் கொள்ளவில்லை. மிரட்டினால் பெற்றோரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பேசாமல் வந்து விட்டேன்..

இன்று என் அப்பா, அம்மா ஒரு கல்யாணத்திற்காக கோவை சென்றிருக்கிறார்கள். தங்கையும் அவர்களுடன் சென்றிருக்கிறாள். எதிர்வீட்டிலும் யாருமில்லை.. அவளைத் தவிர..!

முடிவு செய்து விட்டேன் நான்.. இந்த சந்தர்பத்தை விட்டால் மறுபடி வராது..

விடு விடுவென அவள் வீட்டிற்குள் போனேன்.. வீதியில் யாரும் பார்க்கவில்லை..

எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியோடு எழுந்தாள்..

"ஏய்.. ஏய்.. என்ன வேணும்? உம்பாட்டுக்கு உள்ள வர்ற?"

"ப்ரியா.. இன்னைக்கு நீ தப்ப முடியாது" கூறிக்கொண்டே அவள் தாவணியைப் பிடித்தேன்..

அவள் திமிறியபடி..

"விடு.. ஐயோ... விடு" என்று கத்த ஆரம்பித்தாள்..

"ஏய்.. கத்தாதே.. இப்போ தாவணிய கழட்டப் போறியா இல்லியா?" நான் கொஞ்சம் கோபமானேன்..

"என்ன திவ்யா இது.. நம்ம ரெண்டு வீட்டுக்கும் பகையா இருக்கு.. நீ என்னடான்னா காலேஜ் பங்க்ஷனுக்கு டிராமால நடிக்க இந்த தாவணிதான் வேணும்ன்னு தினமும் அடம்புடிக்கற.. ஒரு நாள் இது வீட்டுல இல்லீன்னாலும் அம்மா கண்டுபிடிச்சுடுவாங்கடி.." என்று மறுக்க "ப்ளீஸ்டி.." என்று கெஞ்ச ஆரம்பித்தேன் நான்..

Thursday, June 19, 2008

முன்குறிப்புகள் (என்கிற) அவியல்

"நேற்று ஒரு நாள் எந்தப் பதிவும் போடவில்லை. அப்பப்பா.. எத்தனை மெயில்கள்.. எத்தனை ஃபோன் கால்கள்.. என் வலைப்பக்கத்திற்கு இத்தனை வரவேற்பா.. என்று பிரமித்துப் போனேன்" என்றெல்லாம் எழுத ஆசைதான். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. வழக்கம் போல சூரியன் கிழக்கே உதிப்பதில் தொடங்கி எல்லாரும் எல்லா அன்றாடப் பணிகளை செய்து கொண்டு நேற்றும் ஒரு நாளாய் எல்லாருக்கும் கழிந்தது. எனக்குதான் ‘என்னடா இது நாம இன்னைக்கு ஒண்ணுமே எழுதலியே.. உலகம் சுத்தாதுன்னு நெனச்சா எல்லாம் சுமூகமா எப்பவும் போல நடந்துட்டிருக்கே’ன்னு அதிர்ச்சியா இருந்தது. ம்..ம்..உங்களையெல்லாம்.. கார்த்திக் முதலமைச்சராகட்டும்.. அப்புறம் வெச்சுக்கறேன்!
--------------------------------------

இந்த வார கிசு கிசு

வலையுலகத்திற்கு வந்த குறுகிய காலத்தில் தனது பத்திரிகையுலக அனுபவ எழுத்தால் பலரையும் கவர்ந்த ‘அந்த’ப் பதிவர் இனி வலைப்பூவில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாராம். இது வெறும் ‘இடைவேளை’யாக இருக்கட்டும்.. சீக்கிரம் எழுதுங்கள் என்று அவரது நண்பர்களும், வாசகர்களும் அவரை நச்சரித்துக் கொண்டிருப்பதாய் தகவல்.
"ஏனுங்ணா.. நீங்க இப்படிப் பண்லாமுங்களா?"
--------------------------------------


போன வருடம் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம்..
எங்கள் முதலாளி வடக்கத்தியர் என்பதால் தமிழ் அரைகுறைதான். அதுவும் எண்கள் அவருக்கு ஆங்கிலத்தில்தான் சொல்லப்படவேண்டும்.
சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒரு ஊழியர் அவரிடம் விடுமுறை கேட்பதற்காக வந்தார்..


"வர்ற கார்த்திகை ஒம்பதாம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டறேன்.. ஒரு வாரம் லீவு வேணும்"

"எப்போ போறிங்க?"

"கார்த்திகை ஒம்பது"

"இங்க்லீஷ்ல சொல்லுப்பா"

அவர் கொஞ்ச நேரம் யோசித்து.. "டிசம்பர் இருபத்தி மூணுங்க"

"ஐயோ.. இங்க்லீஷ்ல சொல்லுப்பான்னேன்"

"இங்லீஷ்லதான்.. டிசம்பர் இருபத்தி மூணு"

இப்படியே கொஞ்சநேரம் கடந்தது.. பிறகு நாங்கள் "கமிங் ட்வொண்டி த்ரீ" என்று புரியவைத்தோம்!

(பி.கு: உடனே காலண்டர் எடுத்து போன வருஷத்தில் கார்த்திகை ஒன்பது டிசம்பர் இருபத்தி மூணுதானா-ன்னெல்லாம் பாக்கப்படாது.. ஏதோ எழுதிட்டேன்..விடுங்க)
--------------------------------------

இருதினங்களுக்கு முன் எழுதிய குட்டிக் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு. (இதுவரைக்கும் ஒரு செருப்படிகூட இல்ல!!) அதுனால இதோ இன்னும் ரெண்டு.. (இவனையெல்லாம் சும்மா விட்டது தப்பா போச்சு!)

எனது காதலியின்

திருமணப் பத்திரிகையில்

என் பெயர்..

முகவரிப்பகுதியில்!

****
சங்கிலியை இழுங்கள்

நிற்கட்டும் ரயில்

அழகான கடல்.
--------------------------------------


முன்பு நான் எழுதிய பழமொழியின் உண்மையான அர்த்தங்கள் பதிவில் இது விட்டுப் போய்விட்டது..


பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

இது பந்தியில முன்னாடி போய் உக்கார்ந்துடணும்.. சண்டைன்னா பின்னாடி போயிடணும்-ங்கற அர்த்தத்துல உலவி வருது. உண்மையான அர்த்தம் என்னான்னா..


ஏதாவது விருந்து.. பந்தின்னா உக்காந்து சாப்பிடும்போது உங்க கை உடம்புக்கு முன்னாடிதான் வருது...அதே போர்ப்படையில இருக்கும்போது வில்லை எடுத்துப் போராடணும். வில்லை எடுத்து அம்பு விடும்போது (நாண் இழுக்கையில்) உங்க கை எப்படிப் போகுது? பின்னாடி போகுது! அந்த அர்த்தத்துல தான் பந்திக்கு முந்து.. படைக்கு பிந்துன்னாங்க பெரியவங்க. சரியா?
------------------------------------

‘குசேலன்’ ஸ்டில்ஸ் இன்றைய தினகரனில்... இரண்டு ஸ்டில்ஸ் கலக்கலாக இருந்தது. ஒரு பாடலுக்கு விஜய், அஜித், சூர்யா தலைவருடன் நடனமாடுகிறார்களாம். ஜூன் 30 பாடல்கள் வெளியீடு.. ஜூலை மாதத்தில் படம் வெளியீடு. வலைப்பதிவர்கள் எல்லாம் அடுத்த கும்மிக்கு தயாரா இருங்க!!

Tuesday, June 17, 2008

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...


உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.


உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!


நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.


உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?


ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!


உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.


ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.


என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?


என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!


வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!


நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...

இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!


அன்புடன்...

உன் அப்பா.

Monday, June 16, 2008

குட்டி கவிதைகள்

பங்களா கட்டி முடித்து
குடிசைக்குள் நுழைந்தார்
மேஸ்திரி.

சுடச் சுடச் தோசைசுட்டு
ஆறியபின் தின்கிறாள்
மனைவி.

ரோஜாவுக்காக தினமும் நீரூற்றுகிறேன்
எண்ணிக்கையில் என்னமோ
முட்களே முந்துகின்றன.

தீவைத்தேன் சிகரெட்டுக்கு
எரியத் தொடங்கியது
என் உயிர்.

கறுப்பு துரதிர்ஷடம்
புத்தகத்தில் படித்தேன்
கறுப்பெழுத்தில்.

ஒருவகைப் பூவைமட்டுமே
சூடிக்கொள்ள முடிகிறது
வருத்தப்பட்டது பூச்செடி!

கண்டுபிடித்தவனுக்கு பாராட்டு
பயன்படுத்தியவனுக்கு கைவிலங்கு
துப்பாக்கி.

நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது கால்செருப்பு.

ஏழைகள் குறை கேட்க
எம்.எல்.ஏ. வருகிறார்
அகற்றுங்கள் குடிசைகளை.

Sunday, June 15, 2008

தசாவதாரம்-ஒரு விரிவான விமர்சனம்

பிளாக் எழுதும் எல்லோருமே தசாவதராம் விமர்சனத்தை எழுதாவிட்டால் ஏதோ நாடு கடத்திவிடுவார்கள்போல. இதோ நானும்.. (கதையை கேட்காதீர்கள்.. எனக்கு கோர்வையா சொல்ல வராது!)

முதலில் ஒரு ராயல் சல்யூட்-வசனகர்த்தா கமலுக்கு! ஏனென்ற விளக்கம் பின்னால்..

சோழர்காலத்தில் துவங்கி, சுனாமியில் முடியும் படத்தில் எல்லா இடங்களிலும் ஹாலிவுட் வேகமும், கமலின் விவேகமும் தெரிகிறது.
சோழர் காலத்தில் ஆரம்பிக்கும் படத்தில் வைணவ இளைஞன் நம்பி கதாபாத்திரத்தில் டேக் ஆஃப் ஆகும் கமல் எங்கும் நிற்காமல் புகுந்து விளையாடியிருக்கிறார்!

விஷ்ணு சிலையை கடலில் தூக்கிப் போடும் முன், அந்த சிலைக்கு முன் நின்று "அரங்கநாதா.. உனக்கே இந்த கதியா?" என்று பார்வையிலேயே கேட்கும் கமலில் நடிப்பு கண்ணை விட்டு அகல மறுக்கிறது. (சோழமன்னனாக வரும் நெப்பொலியனின் தமிழ் உச்சரிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை!) கல்லை மட்டும் கண்டால் பாடலில் வாலி தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார். சிவனைவிட, விஷ்ணுவே உயர்ந்த கடவுள் என்று ஹரிஹரன் குரலில் கமல் பாடும் அந்தப் பாடலில் "ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்.. அந்த ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்" என்றொரு வரி. கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்ஷ்மி-ஸ்ரீனிவாசன்! அட.. இப்படியெல்லாம் எழுத வாலியை விட்டால் யார் என்று நாம் பாராட்ட நினைக்கையில் - அடுத்த வரி.. "நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான், ராஜனுக்கு ராஜனிந்த ரங்கராஜன்தான்!" வாலியின் இயற்பெயர் - ரங்கராஜன்! நீங்கள் சத்தியமாக பாட்டெழுதும் ராஜர்களுக்கெல்லாம் ராஜன்தான் வாலியண்ணா! படத்தில் ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் எத்தனை கமல் இருக்கிறார்கள் என்று பார்க்கும் சுவாரஸ்யம் தமிழ்-சாரி-இந்திய.. ஏன் உலக சினிமாவிற்கே புதியதாகத்தான் இருக்கும்! அதிலும் இண்டர்வெல்லுக்கு மேல் வரும் ஆஸ்பிட்டல் காட்சியில் கலிபுல்லாகான், வில்லன் ப்ளெட்ச்சர், அவ்தார் சிங், விஞ்ஞானி கோவிந்த், உளவுத்துறை அதிகாரி நாயுடு என்று எல்லாருமாய் அதகளம் பண்ணியிருக்கிறார் கமல்!

வின்சென்ட் பூவராகன் - நம்மை நிமிர வைத்து இறுதியில் நெகிழ வைக்கும் பாத்திரம். இந்த கதாபாத்திரத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வில்லன் கமல் - இந்தியன் தாத்தா பாடிலேங்வேஜோடு இருக்கிறார். வயது முதிர்ந்த பாட்டி அவ்வை சண்முகியை நினைவுபடுத்துகிறார் என்றெல்லாம் கூறுவது குறை அல்ல. எல்லா பரீட்சார்த்த முயற்சிகளையும் ஏற்கனவே செய்துவிட்ட ஒரு கலைஞனுக்கு இந்த மாதிரி விமர்சனங்கள் சகஜம்!
ஒவ்வொரு கமலுக்கும் நடையிலும் கூட வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் கமலுக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்காவிட்டால், கமிட்டியில் அரசியல் விளையாடுவது நிரூபணமாகிவிடும். விருதுகளுக்கு அப்பாற்பட்ட இந்தக் கலைஞனுக்கு, அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது!

வசனகர்த்தா கமல்! என்ன கூர்மையான வசனங்கள்.. எவ்வளவு ஹ்யூமரான வசனங்கள்! சாம்பிளுக்கு..
## விஷ்ணு சிலையை கடலில் போட உத்தரவிட்டு, வைஷ்ணவ நம்பி கமலைப் பார்த்து சோழ மன்னனாக வரும் நெப்போலியன்.."உன்னை சிவமந்திரம் சொல்ல வைக்கும் சூழ்ச்சியும் யாமறிவோம்.. " என்று ஆரம்பித்து யாமறிவோம், யாமறிவோம் என்று சில வசனங்கள் பேச.. நம்பி "பார்.. சிவனடியான உன்னையே எத்தனை முறை "அரி-ஓம்" சொல்ல வைத்துவிட்டான் என் ஹரி"
## உளவுத்துறை அதிகாரி நாயுடு, தனது அஸிஸ்டெண்ட் அப்பாராவுடன், கூரியர் இளைஞன் நரசிம்ம ராவையும் போகச்சொல்லும் போது.. "ராவோடு ராவா போய்..."
## போராட்ட தலித் இளைஞன் பூவராகனை மணல் மாஃபியா சந்தானபாரதி சாந்தப்படுத்தும் விதமாக தொடும்போது, சட்டென விலகி "உங்களுக்கு வேணும்னா தொடுவீங்க.. வேணாம்னா தொடமாட்டீங்க"
## "உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா?"

"அழகிய சிங்கர்னா.. மடோனாவா?"

## தனது அம்மாவுக்கு ரத்தம் தரவிருக்கும் விஞ்ஞானி கமலிடம், எட்டடி கமல்.. "நீங்கதான் ரத்தத்தின் ரத்தமாகப் போறிங்களே.." "நானா.. எப்போ.. யாரு சொன்னா?"

## எட்டடி கமலிடம் உளவுத்துறை அதிகாரி நாயுடு "இவ்ளோ உயரமா ஏணி மாதிரி இருக்க? உன் பேர் பின்"லேடனா"?
"இல்லீங்க.. கலிபுல்லாகான்"
"ஓ.. அதுதான் ஃபுல்லா இருக்கியா?"

## அமெரிக்க வில்லன் ஜப்பானிய கமலிடம்" "ரிமெம்பர் ஹிரோஷிமா" ஜப்பானிய கமல் உடனே "யு ரிமெம்பர் பேர்ல் ஹார்பர்"

தொழில்நுட்பத்தில் இனி தசாவதாரத்தை மிஞ்சும் படம் பண்ண, எல்லாருக்கும் சவால் விடப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொரு கமலுக்கும் ஒவ்வொரு முறை பார்க்கவேண்டும்!
மொத்தத்தில் "உலகமெங்கிலும் உன்னை விஞ்சிட யாரு..உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!"
முக்கியமான பின் குறிப்பு: நான் அக்மார்க் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன்!

Saturday, June 14, 2008

முன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்

என்னுடைய நான்கு கேள்விகளுக்கும் புயல் வேகத்தில் பதில் சொன்ன நண்பர் கோவி.கண்ணனுக்கு நன்றிகள்.. லக்கிலுக் பற்றிதான் நான் கேட்டிருந்தேன்.. அவர் என்னைப் பற்றி சொல்லி மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்! (பிளான் பண்ணி பண்ணுறாங்க-ன்னு யாரும் நினைக்க வேண்டாம்!)

சிங்கப்பூர் பற்றி கேட்டதற்கு காரணம்: - எனக்கு யாரோ சொன்னார்கள், அல்லது எங்கோ படித்தேன்.. பெட்ரோல் கட்டுப்பாட்டிற்காக அங்கே ஒரு சட்டம் இருக்கிறதாம்.. ஒரு மகிழ்வுந்தில் ஒருத்தர் தானியாகப் போகக் போகக் கூடாதாமே? அப்படியா?
---------------------------------
பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லையென்றால் அந்தப் பதிவு அதிக வாசகர்களை கவரவில்லை என்று அர்த்தமா அல்லது பதிவின் தரம் அதனால் நிர்ணயிக்கப் படுகிறதா? பத்திரிகைகளுக்கு அனுப்பிய படைப்புகள் திருப்பி அனுப்பும்போது "இதுவே உங்கள் படைப்புகள் குறித்த இறுதி முடிவல்ல" என்பது போல ஒரு கடிதம் கூட வரும்.. ஒவ்வொரு நாளும் அதிக பின்னூட்டம் பெரும் படைப்பு குறித்து பின்னூட்ட சுனாமி உண்மைத்தமிழன் (அப்பா நாங்கெல்லாம் டுப்ளிகேட்டா?) ஆராய்ச்சி நடத்தலாமே? உண்மைத்தமிழனுக்கு ஒரு கேள்வி.. உங்க பேருக்கு பின்னால இருக்கற எண்கள் நீங்க மொத்தமா போட்ட பின்னூட்டமா? அல்லது ஒரு நாளைக்கு நீங்க போடற பின்னூட்டமா?
அப்புறம் கோவியாரின் கேள்விகளுக்கு பதில்களை சொல்லிவிட்டு லக்கிலுக் "டோண்டு சாருக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளும் கேள்வி" களைக் கேட்டிருக்கிறார்.. நான் யாரையாவது நாக்கை பிடுங்கிக் கொள்ளும் கேள்வி கேட்டிருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பேன்.."உங்கள் நாக்கில் ஏதெனும் நோய் வந்து அதை எடுத்தால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?" (ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு!)
------------------------------------------------
போன வார ஆனந்தவிகடனில் அடுத்த சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷின் பேட்டி படு நக்கலாக இருந்தது.. நம்ம எல்லாம் அவரைப் பத்தி கிண்டலடிக்கறது பத்தாதுன்னு அவரே, அவர அடிச்சுகிட்டு இருக்கார்! சாம்பிளுக்கு சில..

  • கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். (அவரது முதல் படம்) நான் சின்ன வயசுல எத்தனையோ படம் பார்த்து கிண்டல் பண்ணியிருக்கேன். கடசீல நாலு பேரு என்னைப் பார்த்து கிண்டல் பண்ணற மாதிரி முதல் படம் அமைஞ்சு போச்சு! (இதுல சில பிழைகளை சொல்லணும் - கடைசீல இல்ல முதல்லையே கிண்டல் பண்ற மாதிரி ஆயிடுச்சு. அப்பறம்.. நாலு பேரு இல்ல, அத்தனை பேரும் இன்னும் கிண்டல் பண்ணிட்டுதான் இருக்காங்க.. படத்துக்காக கூட இல்ல , உங்க அலப்பரைக்காக!)

  • (கலைஞருக்கு அந்தப் படம் போட்டு காட்டினீரா என்று கேட்டதற்கு..) உடம்பு சரியில்லாத நேரத்துல அவரது ஏன் தொந்திரவு பண்ணீட்டு-ன்னு போட்டுக் காட்டல. எனக்கு தெரியாத என் படம் எப்படி இருக்கும்-ன்னு?


எல்லாம் சரி.. நாயகன், தளபதி-ன்னு தலைப்பு வைக்கறதை தாங்க முடியல!

-------------------------------------------------

இன்னைக்கு மொக்கை இவ்வளவுதான்.. நேரமாச்சு.. கிளம்பறேன்!

Friday, June 13, 2008

முன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு

நண்பர் கோவி. கண்ணன் ஒரு அருமையான பணியைத் துவக்கியுள்ளார். (பார்க்க அவரது பதிவு) இது தொடர வாழ்த்துக்கள்! என் சார்பாக கண்ணனுக்கு சில கேள்விகள்.. அவரது முறை வரும்போதோ, அல்லது உடனேவோ பதில் சொல்லலாம்.. பதில் சொல்லும் பொது தெரிவித்தால் மகிழ்வேன்..

## கிருஷ்ணகுமாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

## உங்கள் பதிவுகளைப் படிக்கிறவர்கள், உங்களிடம் பொதுவாக சொல்லும் விஷயம் (உங்கள் பதிவு பற்றி) என்ன?

## பெட்ரோல் விலை உயர்வால் நாங்கள் படும் பாட்டை விட்ட.. சிங்கப்பூர்ல எப்படி சமாளிக்கறாங்க தெரியுமா என்று நிறைய பேர் நிறைய கதை சொல்கிறார்கள்... என்ன செய்யுறீங்க அங்க?

## உங்களை வலையுலகத்துக்கு அழைத்து வந்த புண்ணியவான் யார்?

-------------------------------

என்னுடய நேற்றைய முன்குறிப்புகளில் சரியா தப்பா என்று ஒரு கம்யூனிக்கேஷனில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு வேலை கொடுத்ததை சொல்லியிருந்தேன். இப்போது என்னடாவென்றால், கொஞ்சம் பேசத்தெரிந்த அக்காளுக்கு புரொடக்ஷன் பிரிவிலும், பேசக் கூச்சப்படும் தங்கைக்கு யாரிடமும் அதிகம் பேச வேண்டிவராத ஒரு பிரிவிலும் வேலை கொடுத்திருக்கிறார்கள் HRD யில். விசாரித்ததில் `நான் வேண்டாம்னா ஆள இவன் சொல்லி எடுத்திருக்காங்க' என்கிற ஈகோவில் ஒரு சீனியரின் வேலை இது என்று தெரிந்தது. (திருப்பூரில் நடக்கும் இந்த சீனியர்களின் அட்டகாசத்திற்கு ஒரு தனி பதிவு போடவேண்டும்! - பத்து வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணி புரியும் நான் இதை எழுதலாம் தானே? ) உண்மையாகப் பார்த்தால் கம்யூனிக்கேஷனில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் தங்கைக்கு நிறைய பேர் இருக்கும், புரொடக்ஷன் பிரிவில் வேலை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொறுமையாக இருக்கிறேன்.

--------------------------------------------------

வரும் ஞாயிறு கோவையில் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. ஒருமாதிரி எதோ புதுசா காலேஜ் போகப்போற பீலிங் இருக்கு. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. லதானாந்து அங்கிளை நம்பி போறோம்.. நிறைய படம் காட்டுவாரு-ன்னு நம்பறோம். (படம்ன்னா, அவரு சினேகா, ரஞ்சிதான்னு நிறைய பேர் கூட படம் எடுத்துருக்காரில்ல.. அந்தப் படம்..!) முதல்லையே நிறைய பதிவர் சந்திப்புகள்ல கலந்துகிட்டவங்க பதிவர் சந்திப்பு விதிமுறைகள்-ன்னு எதாவது பதிவு போடலாமே? (லக்கிலுக் ஜி, ஆரம்பிக்கலாமே?) காட்டுக்குள்ள கெஸ்ட் ஹவுஸ்ல நடக்கற முதல் பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன்! முடிச்சுட்டு நாங்க எழுதப்போற சந்திப்பு பத்தின பதிவுகளைப் படிச்சுட்டு, எத்தனை பேர் வயித்தெரிச்சல் படப் போறாங்களோ!

-------------------------------------

தசாவதாரம் ரிலீசாகிவிட்டது! ஞாயிறு பதிவர் சந்திப்பு வேறு இருப்பதால் பார்க்க முடியாது. மிரட்டியிருப்பதாக கேள்வி! ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


Thursday, June 12, 2008

முன்குறிப்புகள்

நான் சமீபத்தில் ரசித்துப் படித்த தானே கேள்வி! தானே பதில்!! (இதை எழுதியவர் யாரென்று தெரிகிறதா?)

கேள்வி: என்னது.. நீங்களும் ‘தானே கேள்வி தானே பதில்’ ஆரம்பிச்சுட்டீங்க?பதில்: நம்மளையெல்லாம் யாரு கேள்விகேட்கப்போறாங்க’ன்னு தைரியம்தான்!
------------------------------------------
கேள்வி: ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்’ என்று சட்டம் வந்துவிட்டதைப் பற்றி?
பதில்: அந்த சட்டத்தை குப்பையில் கொட்டி, அந்தக் குப்பையை ரோட்டில் கொட்டிவிடுவார்கள் நம்மவர்கள்.
-------------------------------
கேள்வி: பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாதாமே?
பதில்: அவரவர் உதட்டில் தானே பிடிக்கிறார்கள்? அது பொது இடமா? Jokes apart.. இந்த சட்டத்தால் பலருக்கு உள்ளுக்குள் புகைகிறதாய் கேள்வி!
-----------------------------
கேள்வி: ஐ.பி.எல்-லை ராஜஸ்தான் வென்றது குறித்து..பதில்: வாழ்த்துக்கள். ஆயினும் சென்னையைத் தவிர வேறு எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், ஷேன் வார்னேவை இப்படி கடைசி பந்து வரை மிரட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே!
-----------------------------------------------
கேள்வி: தசாவதாரம் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது?
பதில்: எடிட்டிங் செய்யும் போது, நீளம் அதிகம் என்று வேண்டாத சிலர் நடித்த பல பகுதிகளை வெட்டி விட்டார்களாம். கடைசியில் கமல் ப்ரிவ்யூ பார்த்து ‘நான் நடித்த சில பாத்திரங்கள் காணவில்லையே’ என்று கேட்ட பிறகுதான் வெட்டிய பல பகுதிகளில் இருந்தது கமல் என்று தெரிந்ததாம். இப்போது மறுபடி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
--------------------------------------------
கேள்வி: நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா?
பதில்: நானேதான் அழுதேன். ‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு! படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்!
-----------------------------------------
கேள்வி: போதைமருந்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் கைது செய்யப்பட்டது பற்றி?

பதில்: ஆ..! ச்சீப்!
***********************************
முந்தைய அவியலில் இந்த மாதிரி மிக்ஸ் பண்ணி எழுதும் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாமென்று கேட்டிருந்தேன். எக்கச்சக்கமான ஐடியாக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்த உள்ளங்களுக்கு நன்றி! (நற..நற) `முன்குறிப்புகள்' ஓக்கேவா? வேறு யாராவது இந்தத் தலைப்பில் எழுதுகிறார்களா? தெரியல.. தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கறேன்!
-----------------------------
சரியா.. தப்பா?


அந்த முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கேட்டு அவ்விரு பெண்களும் வந்திருந்தார்கள்.. இருபது, இருபத்தி ஒன்று வயது. நல்ல சிகப்பு. கேரளாவை சேர்ந்த இருவருக்குமே தமிழ் சுத்தமாக தெரியவில்லை. அக்கா போல இருந்த ஒரு பெண் அழகாக இருந்தாள். தங்கை சுமார்தான். நிறுவனத்தின் எம்.தி. இன்டர்வியூ நடத்தினார். ஐயோ பாவம்.. இருவருக்கும் ஆங்கிலமும் அவ்வளவாகத் தெரியவில்லை. உடனே அவர் அவ்விரு பெண்களையும் மலையாளம் தெரிந்த மற்றொரு சீனியரிடம் அனுப்பி வைத்தார். அவர் நேர்முகத்தேர்வு நடத்தி அக்கா மட்டும் செலக்ட் ஆனதாக எம்.டி.இடம் சொன்னார். எம்.டி. கையெழுத்து போடும் சமயம் அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் "pls you once see the applicants. He's telling only one selected. Anyhow we need freshers now" என்று அப்பிளிக்கேஷனை என்னிடம் கொடுத்தார். நான் இருவரிடமும் பேசியதில் (மலையாளத்தில்தான்) அந்த சீனியர் சொன்னது சரிதான் என்று தெரிந்தது. ஆனால் முடியும் சமயம் ஒன்றாக அழைத்து தங்கையிடம் `உன் அக்காவுக்கும் அவ்வளவாக தமிழ் தெரியவில்லை.. ஆனால் நீ ஏன் உனக்கு உன் அக்கா மாதிரி இல்லாமல் நெர்வசாக இருக்கிறாய்?' என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் பேசாமலே தலை குனிந்து நின்றாள். அப்போது அக்காள் அவள் தங்கையை "நீ ஏன்பா இப்படி இருக்க?" என்பது போல கண்ணில் நீர் கோர்க்க ஒரு பார்வை பார்த்தாள் பாருங்கள்.. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனே இருவரது அப்ளிகேஷனிலும் `செலக்டட்' என்று கையொப்பமிட்டு HRDக்கு அனுப்பி விட்டேன்!
----------------------------------------------
ஒரு ஜோக்..

நம்மாளு ஒரு பார்க்குல, பெஞ்சுல படுத்திருக்காரு. ஒருத்தர் வந்து ஸ்டைலா இங்கிலீசுல "ஆர் யூ ரெஸ்டிங் ?" னு கேட்டிருக்காரு. நம்ம ஆளு நம்மளை மாதிரி (என்னை சொல்லிகிட்டேன்) அரைகுறையா இருக்கறதால புரியாம "நோ.. நான் கருப்பசாமி" ன்னிருக்காரு. கேட்டவரு மண்டைய சொறிஞ்சிகிட்டு போய்ட்டாரு. திரும்ப பத்து நிமிஷத்துல வேறொருத்தர் வந்து அதே மாதிரி "ஆர் யூ ரெஸ்டிங் ?" ன்னு கேட்க, இப்பவும் நம்மாளு "நோ.. நான் கருப்பசாமி" ன்னுட்டாரு. திரும்ப ஒரு அரை மணி நேரத்துல நாலஞ்சி பேர் அதே கேள்விய கேட்டிருக்காங்க. நம்மளும் அதே பதிலா சொல்லி இருக்காரு! அப்பறம் வெறுத்துப் போய் எழுந்து கொஞ்ச தூரத்துல இருந்த என்ச்சுள் படுத்துட்டு இருந்தவர் கிட்ட போய் "ஆர் யூ ரெஸ்டிங்?" னு கேட்டிருக்காரு. அவரும் "எஸ்.. ஐயாம் ரெஸ்டிங்"ன்னுருக்காரு. கோவம் வந்தது பாருங்க நம்மாளுக்கு.. "யோவ்.. உன்னை எல்லாரும் அங்க தேடிட்டு இருக்காங்க.. நீ என்னய்யா இங்க வந்து ஜாலியா படுத்து போஸ் குடுத்துட்டு இருக்க?" ன்னு புடிச்சு வாங்கிட்டாரு!
---------------------------------------
முதல் மரியாதை பட முதல் நாள் ஷூட்டிங்.. சிவாஜி வர, மாலை - மரியாதைகள் முடிந்து பாரதிராஜா பணிவாக நடிகர் திலகத்திடம் சென்று.. "உங்களையெல்லாம் பார்துதாங்க நானும் மாத்திக்கறேன்சென்னை வந்தேன்" என்கிறார். பட்டென கேட்டார் சிவாஜி..

"ஏன்.. உங்க ஊர்ல கண்ணாடியே கிடையாதா?"
--------------------------------------
முதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்!

Tuesday, June 10, 2008

அவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்

எல்லாத்தையும் கலந்துகட்டி எழுதும் இந்தப் பகுதிக்கு `அவியல்' என்று பெயர் வைத்தது பலருக்கும் புரியவில்லை போல.. எனது நண்பர்கள் சிலரே கூப்பிட்டு `ஏன்டா, சமையல் குறிப்பெல்லாம் எழுதறயா?' என்று கேட்கிறார்கள். முதலில் இது போல எழுதியதற்கு, `நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்' என்று தலைப்பிட்டிருந்தேன். அது கொஞ்சம் பெரியதாக இருந்ததால் இப்படி மாற்றினேன். வேறு எதாவது தலைப்பு வைக்கலாமா என்று யோசிக்கிறேன்.. எனி ஐடியா?
------------------------------------------------------
என்னங்க நடக்குது இங்கே?

இன்றைய தினகரனில்....

‘மருத்துவமேற்படிப்பு பிரச்னை-டாக்டர்கள் சாலை மறியல்’
‘என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் ஸ்டிரைக் நீடிப்பு’
‘விசைத்தறியை காக்க வலியுறுத்தி பல்லடத்தில் உண்ணாவிரதம்’
‘விதை உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் இன்று துவக்கம்’
‘சிஎன்சியை அரசு கல்லூரியாக்கக் கோரி சுமை தூக்குவோர் வேலை நிறுத்தம்’
‘நூல் விலை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு ஜவுளி ஆலைகள் இன்று வேலைநிறுத்தம்’
‘விளையாட்டு மைதான பிரச்சினை-போராடக் குவிந்த மாணவிகளை போலீசார் விரட்டியடித்தனர்’

என்ன கொடுமை சார் இது?
-----------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போயிருந்தபோது எடுத்த பொருட்களுக்கு பில் போட க்யூவில் நின்றிருந்தேன். கொஞ்சம் நீண்ட க்யூவானதால் ஒரு ஒரு பொருளை எடுத்திருந்த ஒரு பெண்மணி அவரது பையனை (பத்து வயதிருக்கலாம்) முன்னே சென்று கொடுக்க சொன்னார். க்யூவில் வராமல், முன்னேயே கொஞ்ச நேரம் நின்று சரியாக என் முறை வந்த பொது, எனக்கு முன் அந்தப் பொருளை நீட்டினான். பணியாளர் பில் போட்டுக் கொண்டிருந்தபோது நான் விளையாட்டாக அவனிடம் பேசினேன்..

"க்யூவில் வரலியா?"
அவன் ஒரு மாதிரி ஆகி என்னைப் பார்த்து இல்லை என்பதாய் தலை ஆட்டினான்..

"அந்நியன் படம் பாக்கலியா?" என்றேன் நான் அடுத்து. அதற்கும் இல்லை என்றான். நான் சிரித்துக் கொண்டே "பயப்படாத.. சின்னத் தப்புதான்.. ஆனாலும் தப்பு!" என்றேன்.

பிறகு நான் பில் போட்டுவிட்டு, பில்லுடன் பணம் கட்ட வேறொரு க்யூவில் நின்ற போது, எனக்கு முன் அந்த சிறுவன் நின்றிருந்தான். எங்கிருந்தோ வந்த அவனது அம்மா அவனை 'பத்து ரூபா தானே.. முன்னாடி போய் குடு' என்றார். அவன் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்து "போம்மா" என்று அகலாமல் நின்றான். எனக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அடுத்து நடந்தது... ?

அந்த அம்மாள் அவனிடமிருந்து பில்லை பிடுங்கிக் கொண்டு எல்லோருக்கும் முன் சென்று பணத்தைக் கட்டிவிட்டு சென்றார். இப்போது அந்த சிறுவன் என்னைப் பார்த்த பார்வைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை..
----------------------------------------------------------------
ஒரு மொக்கை கற்பனை..

‘நான் என்ற எண்ணத்தை அழியுங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு அரசியல்வாதியைப் பேசச் சொன்னபோது..

"என் பொன்னான மக்களே, என் உடன்பிறவா உடன்பிறப்பே.. இந்த அருமையான தலைப்பிலே என்னைத்தவிர யாரும் பேசமுடியாதென்பதால் என்னைப் பேச அழைத்திருக்கும் விழாக்குழுவினரே.. அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

நான் எனது ஐம்பத்திரெண்டு வருடகால வாழ்விலே எதையும் என்னுடையது என்று கூறிக்கொண்டது கிடையாது என்பது என்னை அறிந்த உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். (மேடையில் அமர்ந்திருப்பவர் ஒருவரிடம் ‘யோவ்.. என் சோடா என்னாச்சுய்யா?) எதுவும் எனது என்றில்லாமல் எல்லாமே நமது என்று எண்ணுபவன் நான்! என்னுடைய இந்த எண்ணத்தினால் தான் நமது கட்சியும் நானும் இவ்வளவு பேரோடும், புகழோடும் இருக்கின்றோம். மறைந்த நமது தலைவர் கூடக் கூறுவார் என்னைப் போல பரந்த மனப்பான்மை வேறு எந்தக் களவாணிப் பயலுக்கும் இல்லை என்று. அவர் என்ன சொல்வது.. நானே சொல்கிறேனே என் போல வேறு யார்?

அதே போல நான் எப்போதுமே எனக்கென்று எதையும் ஒதுக்கிவைத்துக் கொண்டதில்லை. என்பொருளைக் கூட அடுத்தவருக்காக விட்டுக்கொடுப்பவன் நான். (மேடையில் சோடா கொண்டு வரும் சிறுவனிடம் ‘டேய்.. மொதல்ல எனக்கு குடுடா’) ஆகவே மக்களே.. என்னைப் பாருங்கள்.. என் வாழ்க்கையைப் பின்பற்றுங்கள். எனது எண்ணம் போல உங்களையும் தூய்மையானதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

Monday, June 9, 2008

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!

முன் குறிப்பு:- பிஞ்ச செருப்பு, அழுகின முட்டை, தக்காளி ஆகிய பொருட்களுக்கு அனுமதி இல்லை..!

ஐயா பெரியோர்களே.. தாய்மார்களே.. வாக்காளப் பெருங்`குடி' மக்களே..

நம்ம பதிவர்களுக்காக கொங்கு மாநகரம் கோவையில் லதானந்த் அங்கிள் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிருக்காரு அதைப்பத்தி இந்த லிங்க்ல போய் படிச்சுட்டு 'இது பதிவர் சந்திப்பாஇல்ல குன்ஸா வேற எதுனா பண்றிங்களான்னெல்லாம் கேக்கப்படாது! (அப்படியும் கேகக்கணுமானாஅங்கிளையே கேட்டுக்கோங்க!) நான் சொல்ல வந்தது இன்னான்னா, எல்லாரும் வந்துடுங்க.. கூட்டா கும்மியடிக்கலாம். கும்மிக்கு தேவையான கோல் எல்லாம் அவிங்கவிங்க எடுத்தரோணும்.. (சரிதானே வாத்தியாரே!)

நட்பில் ஏனிந்த பொய்கள்?

‘என் இனிய நண்பன் விஜய்க்கு

நலமே.. நலமா? என்று சம்பிரதாயமாக இந்தக் கடிதத்தை ஆரம்பிக்க முடியவில்லை..

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மெயிலிலும், தொலைபேசியிலும் வளர்ந்துவரும் நம் நட்பில் இப்படி ஒரு கடிதம் என்னால் உனக்கு எழுதப்படுமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

என்னதான் தகவல் புரட்சி வளர்ந்துவிட்டாலும், மாதமொருமுறை கடிதப் பரிமாற்றம் வேண்டுமென்ற நமது திட்டத்தின்படி, இந்தமாதம் என்னிடமிருந்து வரும் முதல் கடிதமே உனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கலாம்..


மே மாத இறுதியில் ஒருநாள்.. நான் பணிபுரியும் ஏற்றுமதி நிறுவன முதலாளி என்னை அழைத்தார்..

"பிரபாகர்.. பிரான்ஸ் பையர் இந்த தடவை சென்னை வர்ல. அவங்க நேரா கோயமுத்தூர் போய் அங்கிருந்து ரெண்டு நாள் கேம்ப்பா ஊட்டி போறாங்க.. நீங்க அர்ஜெண்ட்டா நாளைக்கு நைட் கிளம்பி கோவை போய், ஏர்போர்ட்ல அவங்களை மீட் பண்ணி, ஆர்டர் சாம்பிளை வாங்கிகோங்க.. ரெண்டு நாள்தான் டைம்ங்கறதால திரும்பி சென்னை வராதீங்க.. திருப்பூர்ல நம்ம விஸ்வா எக்ஸ்போர்ட்ல பேசிட்டேன். அங்க போய் நாலஞ்சு சாம்பிள் ஒரே நாள்ல ரெடி பண்ணி ஊட்டிலயே போய் அப்ரூவ் வாங்கிக்கோங்க. எதாவது கரெக்ஷன் சொன்னாங்கன்னா அடுத்த நாள்ல பண்ணி ஏர்போர்ட்ல கூட போய் காமிச்சு அப்ரூவ் வாங்க டைம் இருக்கும். ரொம்ப முக்கியமான ஆர்டர்ங்கறதால உஙகளையே அனுப்பறேன்" என்று அவர் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். காரணம் - திருப்பூரிலிருக்கும் நீ!

இதற்கு முன் இரண்டு முறை திருப்பூர் வந்திருந்தாலும் அப்போதெல்லாம் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் கம்பெனிக்கு ஆர்டர் எடுக்கும் விஷயமாய் ஒருமுறை மும்பைக்கும், ஒருமுறை அமெரிக்காவுக்கும் நீ பறந்துவிட்டதாய் சொன்னாய்! இந்தமுறை உன்னிடம் சொல்லாமலே வந்து உனக்கு இன்ப அதிர்ச்சியளிக்க எண்ணினேன். சென்னையில் நானும் ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸில் பணி புரிவதால், ‘விஜய் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் நடந்துவரும் உன் கம்பெனியையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருந்தது. அதைவிட போன மெயிலில் குறிப்பிட்டிருந்த உன் பங்களாவில் நீ புதிதாய் கட்டிய ஹோம் தியேட்டரைப் பார்க்கும் ஆவலும் இருந்தது!

திருப்பூரில் வந்திறங்கி, பிருந்தாவனில் ரூம் போட்டு, என் வேலைகளை விஸ்வா எக்ஸ்போர்ட்டில் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்தே ஒரு பைக் இரவல் வாங்கிக் கொண்டு உன் கம்பெனி-கம்-பங்களா இருக்கும் 15, திருநீலகண்டபுரம் ரோடு, எம்.எஸ்.புரம் நோக்கிப் பயணித்தேன்.

எம்.எஸ்.புரத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு மாதிரி கூச்சமாய் உணர்ந்தேன். நீயோ ஒரு நிறுவனத்தின் முதலாளி. நான் சாதாரண மாத சம்பளத்துக்காரன். என்னதான் போட்டோ கூட பரிமாறிக்கொள்ளாமல் பழகி, வாடா போடா ரேஞ்சுக்கு வந்திருந்தாலும் நேரில் எப்படி எதிர்கொள்வாய் என்று தயக்கமாய் இருந்தது. ஆனால் திருநீலகண்டபுரம் ரோட்டை அடைந்தபோது தயக்கம் அதிர்ச்சியாக மாறியது.

காரணம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த ரோட்டில் பங்களாக்களோ, பெரிய கம்பெனி கட்டிடங்களோ காணப்படவில்லை! அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி! அந்த முகவரியில் இருந்த ஒரு கூரை வீட்டின் முன் கிழிந்த சேலையுடன் ஒரு அம்மாள்.

"யாரு வேணும் தம்பி?"

"இங்க விஜய்ன்னு.."

"ஆமா.. விஜய் வீடுதான் இது"

"இ..இல்ல.. விஜய் எக்ஸ்போர்ட்ஸ்ன்னு..."

"என் பையன்தான் விஜய்.. அவன் கட்டிங் இன்சார்ஜா போற கம்பெனி பேருதான் விஜய் எக்ஸ்போர்ட்ஸ்.. அதோ வந்துட்டானே" என்று சற்று தூரத்தில் மொபட்டில் வந்து கொண்டிருந்த உன்னைக் காட்டினார்.

கம்பெனி ஓனரென்றும், சான்ட்ரோ கார் வாங்கிவிட்டாயென்றும், ஹோம்தியேட்டர் கட்டிவிட்டாய் என்றும் புளுகிய உன்னைப் பார்க்கும் ஆசை வடிந்து போய் மனது வெறுத்தவனாய்.. "இவரில்லீங்க" என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பைக்கை விரட்டினேன்.

நான்கு நாட்களாக மனதைவிட்டு அகலாமல் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறது உன் மீதான வெறுப்பு. ஏன் இந்தப் பொய்கள்? உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே? என்னிடம் ஏனிந்தப் பொய்? இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா?

எல்லாவற்றிற்கும் நன்றி!

இந்தக் கடிதத்தை படித்துவிட்டு பதிலெழுதாதே. அதைக்கூட படிக்க எனக்கு மனதில்லை.

வெறுப்புடன்
பிரபாகர்’

-கடிதத்தை முடித்ததும் மறுபடி படித்துப் பார்க்கக் கூட மனமில்லாமல் ஒட்டினான் பிரபாகர். சாப்பிடப் போகும் போது கூரியரில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவாறே டைரிக்குள் வைத்து ஆபீஸ்ரூமை விட்டு வெளியே வந்தான்.

"பாஸ் கேட்டா சாப்பிடப் போயிருக்காருன்னு சொல்லு" என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டவனை நிறுத்தினாள் அவள்.

"சார்.. உங்களுக்கொரு கூரியர் வந்துருக்கு"

அவள் கொடுத்த கவரைப் பார்த்தான். திருப்பூரிலிருந்து விஜய்தான் எழுதியிருந்தான்.

வேண்டா வெறுப்பாய் பிரித்தான்..

வழக்கமான பினாத்தல்களுடன் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் கடைசி வரிகளில் கண்களை ஓட்டினான்..

‘எனது சான்ட்ரோ கார் மிகவும் சிறியதாக இருப்பதால்.. ஸ்கார்ப்பியோவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களில் வந்துவிடும்’ என்று முடித்திருந்தான்.

கடிதத்தை கையிலேயே வைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அயர்ந்துபோய் சிறிதுநேரம் அமர்ந்தவன் திடீரென்று எழுந்து தனது அறைக்குப் போனான். ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்தை சுக்கு நூறாய்க் கிழித்தான்.
பேப்பரை எடுத்தான்..

‘ப்ரிய தோழா..
ஸ்கார்ப்பியோ கார் வாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.. கறுப்புக்கலரில் வாங்கும் போது அதன் இன்டீரியர் பழுப்புக் கலரில் இருந்தால் நன்றாக இருக்கும்.." என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கினான்.

Sunday, June 8, 2008

‘நகைச்சு வை’ங்க!

எனக்கு மெயிலில் வந்த சில நகைச்சுவைகள்: (ஓஹோ.. இன்னைக்கு மேட்டர் இல்ல போல!)

#அவன் சமாளிப்பதில் சாமர்த்தியசாலி என்பதாலேயே அவனை தனது டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலையில் வைத்திருந்தார் முதலாளி. அன்று ஒரு வாடிக்கையாளர் வந்து அரைக் கிலோ வெண்ணெய் கேட்டார்.
"ஒரு கிலோ பாக்கெட்தாங்க இருக்குது"
"எனக்கு அரைக்கிலோ போதும்"
"அப்படி லூஸ்ல தர்றதில்ல"
"போ.. போய் உன் முதலாளிய கேட்டு அரைக்கிலோ மட்டும் குடு"
கடுப்பாகிப் போன அவன், மனதுக்குள் அந்த வாடிக்கையாளரைத் திட்டியவாறே முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். கதவைத்திறந்தபடியே "ஒரு அரை லூஸு வந்து வெண்ணெய் அரைக்கிலோ மட்டும் போதும்னு தொல்லை குடுக்குது சார்" என்றவன் முதலாளி ஒரு மாதிரி சீட்டை விட்டு எழுவதைக் கண்டு திரும்பிப் பார்ர்க்கிறான்.. அருகிலேயே நிற்கிறார் அந்த வாடிக்கையாளர்! உடனே சொன்னான்.. "நல்ல வேளை சார், பின்னாடியே இந்த ஜென்டில்மேனும் வந்து அரைக்கிலோ கேக்குறாரு.. பிரிச்சு பாதி பாதி குடுத்துடலாம்ல?"
இவன் வாயைக் குடுத்துவிட்டு சமாளித்துவிட்டதை தெரிந்துகொண்ட முதலாளி வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு தன்னை வந்து பார்க்கும்படி சொல்கிறார். அரை மணி நேரம் கழித்து வருகிறான் அவன்.
"அப்பப்ப இப்படி ஏதாவது உளறிக்கொட்டிட்டு சமாளிச்சுடற.. எந்த ஊரு உனக்கு?"
"மெக்ஸிகோ சார்"
"நல்ல ஊராச்சே.. ஏன் அந்த ஊரை விட்டு வந்த?"
"போங்க சார்.. அந்த ஊர்ல பாதி பேருக்கு ஃபுட் பாலும், மீதிப்பேருக்கு விபச்சாரமும்தான் தெரியும்"
"என்னப்பா இப்படிச் சொல்ற? என் மனைவி ஊரும் மெக்ஸிகோதான்"
"அப்படியா சார்? மெக்ஸிகோல அவங்க எந்த டீமுக்காக ஃபுட்பால் விளையாடிட்டு இருந்தாங்க?"
-------------------------------------------------------------------------------

#கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள். கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள். கலங்கிப் போன கணவன் நேராக அங்கிருந்த ராமர் கோயிலுக்கு சென்று மனமுருக வேண்டினான்.
"காணாமல் போன மனைவி கிடைக்க அரும் புரியுங்கள் ராமா"
ராமர் சொன்னார்.."நேராகப் போய் இடது புறம் திரும்பினால் ஒரு அனுமார் கோயில் வரும். அவரிடம் வேண்டு. என் மனைவியையே அவர்தான் கண்டு பிடித்துக் கொடுத்தார்!"
----------------------------------------------------------------
#ஆறு குழந்தைகளைப் பெற்ற தன் மனைவியை, கணவன் "இவள்தான் என் மனைவி. ஆறு குழந்தைகளுக்குத் தாய்" என்றே எப்போதும் அறிமுகப்படுத்திவந்தான். அவள் எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை. அன்றும் அப்படித்தான்.. ஒரு விருந்துக்குப் போனபோது தனது நண்பர்களுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான்..
"இதுதான் என் மனைவி.. Mother of Six"
வெறுத்துப் போன மனைவி இனி சொல்லிப் பயனில்லை என்று முடிவெடுத்தவளாய் கணவனை அழைத்து தனது நண்பிகளுக்கு அறிமுகப்படுத்தினாள்..
"இதுதான் என் கணவர். Father of Four!"

-----------------------------------------------
#முட்டாள்களை எப்படி சஸ்பென்ஸில் வைப்பது என்று தெரியுமா?

Friday, June 6, 2008

கனலி கலை(ந்த)கூடம்

அவர் என் பதினைந்து வருடகால நண்பர். முகம்மது உசேன் அவர் பெயர். உடுமலைப்பேட்டையில் வ.ஊ.சி. வீதியில் ‘கனலி கலைக்கூடம்’ என்ற பெயரில் ஆர்ட்ஸ் நடத்தி வந்தார். மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பெரியாரின் கொள்கைகளில் பிடிப்பானவர். கனலி என்றுதான் அவரை அழைப்போம்.

சின்னக் கடை. ஆனால் எங்கள் நட்பு வட்டாரத்திற்கு விசாலமான இடமாக அந்தக் கடை இருந்தது. கனலி நிஜமான ஒரு கலைஞன். மனிதன். ரசிகனாய் வாழ்க்கை நடத்தி வந்தார். நான், செந்தில், செந்தில்குமரன் என்று எங்களைச் சார்ந்த யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சலோ, சங்கடங்களோ இருப்பின் அவரைத் தேடி ஓடுவோம்.

"வாங்க கிருஷ்ணா.. பாட்டு கேக்கலாமா?" என்பார். இரண்டு பெரிய ஸ்பீக்கர் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட ப்ளேயர் வைத்திருந்தார். எங்களுக்கென்றே ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் வைத்திருப்பார். ‘ஆலோலம் பாடி..’ என்று இசைஞானியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் எங்கள் உலகம் வேறு திசை நோக்கி பயணிக்கும். இசை குறித்த கலந்துரையாடலில் ஆரம்பித்து உலகின் எல்லா சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராய்வோம். ஏதேனும் போர்டு வரைந்து கொண்டே எங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார் கனலி.

படம் வரைவதிலோ, போர்டுகள் எழுதுவதிலோ இறங்கிவிட்டால் முழு மனதுடன் பணி புரிவார். எளிதில் திருப்திப்பட மாட்டார். அவரது சொந்தக் கடை விளம்பர போர்டு வைப்பதற்கு என்ன அக்கறை எடுப்பாரோ அதே அக்கறையை ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வரும் முகம் தெரியாத ‘திருவிழா வருதுங்க. நம்ம ரசிகர் மன்றம் சார்பா ஒரு தட்டி வைக்கணும்’ என்று வரும் ஆர்டர்களுக்கும் காட்டுவார். நான் குற்றங்கள் கண்டுபிடித்தே பழக்கப் பட்டவன். நான் போகும்போது என்ன எழுதி/வரைந்து கொண்டிருந்தாலும் சரி நான் ஏதாவது சொல்வேனா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

ரேட்டில் கறாராக இருப்பார். ‘மத்த பக்கம் இப்படி அப்படி’ என்று வாடிக்கையாளர்கள் சொல்லும்போது சின்ன புன்னகையோடு தலையாட்டுவார். சொன்ன நேரத்திற்கு ஆர்டரை முடிப்பது, பில் கொடுப்பது, ஒரு ஆர்டருக்கான படங்களுக்காக பழைய புத்தகக்கடைகளில் அலைந்து படம் தேர்வு செய்வது என சின்னத் தொழிலானாலும் ஒரு கார்ப்பரேட் அம்சங்களுடன் நடத்துவதில் அவருக்கு பிரியம் அதிகம்.

கடைக்கு காலை பத்து மணிக்குத்தான் வருவார். தனது டி.வி.எஸ்-சில் கூலிங்க்ளாசுடன் வந்து கடைதிறந்து அன்றைய வேலைகளைத்திட்டமிடுவார். தனது வண்டியை அப்படி பார்த்துப் பார்த்து வைத்திருப்பார். தினமும் துடைத்து பளபளப்பாயிருக்கும். வெளியில் வேலை என்றால் கடைமுன் வைத்திருக்கும் சின்ன கருப்பு போர்டு ஒன்றில் எங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எத்தனை மணிவரை அங்கிருப்பார் என்று எழுதிவைத்துவிட்டு தான் கிளம்புவார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கானது. கேரம்போர்டில் உட்கார்ந்தால் மாலை வரை விளையாடுவார். ஏதாவது படத்திற்கு ஈவ்னிங் ஷோ போகாமலிருக்க மாட்டார்.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன் "ப்ளக்ஸ் பேனரெல்லாம் வந்துடுச்சு கிருஷ்ணா. இனி இந்தத் தொழில்ல காலத்தை ஓட்டறது கஷ்டம்தான். நானும் திருப்பூர் வர்லாம்னு இருக்கேன்" என்றார். கடையை மூடிவிட்டு குடும்பத்தோடு திருப்பூர் வந்தார். சொந்தக்காரர் ஒருவரின் மீன் கடையில் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தார். ஒரு முதலாளியாக கடை நடத்திக் கொண்டிருந்தவரை கொதிக்கும் எண்ணைச் சட்டி முன் கரண்டியோடு தினமும் பார்ப்பது கொடுமையான விஷயம். அவருக்கு ஏற்ற வேலை தேடிக் கொடுக்க எனக்கு சிரமமாக இருந்தது. பெரிய நிறுவனங்களில் சேர்த்துவிட்டால் ஏதேனும் ஒரு இன்சார்ஜுக்கு கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சின்னதொரு கம்பெனியில் முதலாளிக்கு அடுத்து இவர் இருக்கும்படியான ஒரு போஸ்ட்டில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மாறி இப்பொழுது சின்னதொரு பிரிண்டிங் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் கடை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது `dr ஆர்ட்ஸ்' (இவரும் எங்கள் நண்பர்தான்!) நடந்துவருகிறது. கம்ப்யூட்டர் ஒன்று வைத்து, ப்ளக்ஸ் போர்டு டிசைன் செய்து வருகிறார் DR. கனலி இருக்கும்போது ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஒரு பெரியாரின் படத்தை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது மலேசியா முருகன் ப்ளக்ஸில் பிரம்மாண்டமாய் நிற்கிறார். (‘பில்லா படத்துக்கு வெச்சதுங்க’)

நான் எப்போதும் கம்பெனி, கம்பெனி என்று அந்தச் சிந்தனையுடன் இருப்பதாலும், வீட்டிற்கு வந்தாலும் நிறுவனம் சம்பந்தப்பட்ட போன் கால்கள் வரும்போது மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பதாலும் வெறுத்துப் போன என் மனைவிக்கும் எனக்கும் நடந்ததொரு வாக்குவாதத்தில் நேற்று முன்தினம் என் மனைவியை நான் அடித்துவிட்டேன்! மன்னிக்க முடியாத தவறுதான். கோபம் வரும்போது நாம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறோம். எத்தனை புத்தகங்கள் படித்திருந்தாலும் , உலக விஷயங்களை ஆராய்ந்தாலும் சில நேரங்களில் மனிதனது காட்டிமிராண்டித்தனம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது.

என் மனைவிக்கு ஆறுதல் சொல்ல செந்திலுடன் வீட்டிற்கு வந்தார் கனலி. எல்லாம் பேசி முடிந்து அவரைப்பற்றி சொன்னார்..

"எப்படி இருந்தேன் கிருஷ்ணா நான்? ஒரே மாசத்துல புரட்டிப்போட்ட மாதிரி ஆய்டுச்சு என் வாழ்க்கை. நான் சொல்றத மட்டும்தான் நான் கேட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படி முடியல கிருஷ்ணா. எல்லார்கிட்டயும் பொறுமையா இருக்கவேண்டியதாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. பிரிண்டிங் ஆர்டர் எடுத்துட்டு அம்பது கிலோ, அறுபது கிலோ மூட்டையை என் வண்டில வெச்சுட்டு ஓட்ட முடியாம ஓட்டி, இந்த ரெண்டு வாரத்துல மூணு தடவை விழுந்துட்டேன். வண்டி எப்படி வச்சிருந்தேன்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க. முன்னாடி டயர்ல உள்ள இருக்கற ட்யூப் தெரியுது. மூட்டையை சுமந்துட்டு மாடில இருக்கற பிரிண்டிங்குக்கு தனி ஆளா ஏறி கொண்டுபோறேன்.. மூவாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம். அதுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வாழ்ந்துட்டிருக்கேன். சினிமாக்கு போறதில்லை, பாட்டு சி.டி. வாங்கறதில்ல, புத்தகமெதுவும் வாங்கறதில்லை, மனைவி, குழந்தைகளை வெளில கூட்டிப் போறதில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட எனக்காக ஒதுக்க முடியல. ஒரு கலைஞனா இருந்த நான், கலாசுக்காரனா இருக்கேன். மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்."

செந்திலும், நானும் அவருடன் கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கனலியை அனுப்பிவிட்டு வரும்போது எப்போதும் கண்ணில் படும் சில ப்ளக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டது. மனதை என்னவோ செய்தது.

அவர் நிச்சயம் மேல வரணும். வருவார்! விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற தங்கள் சுயத்தை இழந்து சர்வைவலுக்காக பணி மாற்றிக் கொண்டவர்கள் எத்தனை பேர்? எல்லோரும் இப்படி வரும் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது? கேள்விகள்..கேள்விகள்..

Wednesday, June 4, 2008

தானே கேள்வி! தானே பதில்!!

கேள்வி: என்னது.. நீங்களும் ‘தானே கேள்வி தானே பதில்’ ஆரம்பிச்சுட்டீங்க?

பதில்: நம்மளையெல்லாம் யாரு கேள்விகேட்கப்போறாங்க’ன்னு தைரியம்தான்!
------------------------------------------
கேள்வி: ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்’ என்று சட்டம் வந்துவிட்டதைப் பற்றி?

பதில்: அந்த சட்டத்தை குப்பையில் கொட்டி, அந்தக் குப்பையை ரோட்டில் கொட்டிவிடுவார்கள் நம்மவர்கள்.
--------------------------------------------------
கேள்வி: பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாதாமே?

பதில்: அவரவர் உதட்டில் தானே பிடிக்கிறார்கள்? அது பொது இடமா? Jokes apart.. இந்த சட்டத்தால் பலருக்கு உள்ளுக்குள் புகைகிறதாய் கேள்வி!
---------------------------------------------------------
கேள்வி: ஐ.பி.எல்-லை ராஜஸ்தான் வென்றது குறித்து..

பதில்: வாழ்த்துக்கள். ஆயினும் சென்னையைத் தவிர வேறு எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், ஷேன் வார்னேவை இப்படி கடைசி பந்து வரை மிரட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே!
-------------------------------------------------------------
கேள்வி: தசாவதாரம் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது?

பதில்: எடிட்டிங் செய்யும் போது, நீளம் அதிகம் என்று வேண்டாத சிலர் நடித்த பல பகுதிகளை வெட்டி விட்டார்களாம். கடைசியில் கமல் ப்ரிவ்யூ பார்த்து ‘நான் நடித்த சில பாத்திரங்கள் காணவில்லையே’ என்று கேட்ட பிறகுதான் வெட்டிய பல பகுதிகளில் இருந்தது கமல் என்று தெரிந்ததாம். இப்போது மறுபடி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-----------------------------------------------------------
கேள்வி: நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா?

பதில்: நானேதான் அழுதேன். ‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு! படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்!
---------------------------------------------------------
கேள்வி: போதைமருந்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் கைது செய்யப்பட்டது பற்றி?

பதில்: ஆ..! ச்சீப்!
------------------------------

அவியல்-5

(இன்றைய அவியலுடன் இலவச இணைப்பு- ‘தரிசனம்’ கவிதை-படிக்கத்தவறாதீர்கள்!)

நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் வலைப்பதிவர் சென்ஷி-க்கு இப்பதிவு சமர்ப்பணம்

வலைப்பதிவு ஆரம்பித்தது முதல், முதன்முறையாக இரண்டு நாட்களாய் ஒரு பதிவு கூட போடவில்லை. ஏன்? விடை கடைசியில்...
**************************************************
"அவருடைய உழைப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். ‘ஒரு மனிதனால், தொடர்ந்து, இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?’ என்று மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு. இவருடைய உழைப்பின் முன்னால், மற்ற பலரின் உழைப்பு, வெறும் பொழுது போக்கே. உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை. கலைஞருக்கோ அதுதான் உயிர் மூச்சு."
-நேற்று 85-வது பிறந்தநாள் கண்ட இளைஞர் கலைஞரை இப்படிப் பாராட்டியிருப்பவர்.. சோ! (வாலியின் ‘கலைஞர் காவியம்’ அணிந்துரையில்)
-----------------------------------------------------------------------------
திருப்பூரின் முன்னணி ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவம்.

டி-சர்ட் ஏற்றுமதி செய்யப்படும் அந்த நிறுவனத்தில், நாய் ஒன்றின் முகம் மார்புப் பகுதியில் இருப்பது போல எம்பிராய்டரி டிசைன் செய்யப்பட்ட ஒரு ஆர்டர். அந்த எம்பிராய்டரியின் தரம் (Quality) சரியில்லாததால் அதன் தரத்தை பரிசோதிக்க வந்த Buying QC (Quality Controller) அந்த ஆர்டரை Re-check செய்ய உத்தரவிடுகிறார். (Re-Check என்றால் pack செய்யப்பட்ட எல்லா டி-சர்ட்களையும் பிரித்து என்ன குறைக்காக re check இடப்பட்டதோ, அதை நிவர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். Re check என்பது எந்த ஒரு ஏற்றுமதி நிறுவனமும் வெறுக்கும் சொல். பணச் செலவு, நேர விரயம் என்பதைவிட மிகப்பெரிய அவமானம்! அந்த குறிப்பிட்ட buyer-இடம் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வேறு.)
நிறுவனத்தை சார்ந்த ஊழியர்கள் கடுமையாக உழைத்து, re check செய்து மீண்டும் buying QCயிடம் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், மறுபடி அதே நாய் டிசைனில் பல குறைகள்.. வெறுத்துப் போன அந்த QC இந்த முறையும் re check ஆர்டர் குடுத்துவிட்டு, நிறுவனத்தின் முதலாளிக்கும் அலைபேசியில் சொல்லி விடுகிறார். முதலாளிக்கு செய்தி போனதும், எல்லா சீனியர்களுக்கும் கிலியடித்துவிடுகிறது. Buying குவாலிட்டி இன்ஸ்பெக்டர் குறையென்று சொன்ன ஒரு சில டி-சர்ட்டுகளை எடுத்துக் கொண்டு முதலாளியின் அறைக்குள் செல்கிறார்கள் அவர்கள். முதலாளியின் டேபிளில் அவற்றைப் பரப்பி வைக்கிறார் நிறுவனத்தின் quality manager. அந்த நாய் டிசைன்களையெல்லாம் ஒரு முறை பார்க்கிறார் முதலாளி. பிறகு ப்ரொடக்ஷன் மேனேஜர், குவாலிட்டி மேனேஜர், எம்பிராய்டரி இன்சார்ஜ் என்று சுற்றி இருப்பவர்களை பார்க்கிறார். பிறகு சொன்னார் இப்படி:-

"Buying Inspector சொன்னது சரிதான். இங்க இருக்கற நாய்கள்ல எந்த நாயும் சரியில்ல!"
---------------------------------------------------------------------------------------
நேற்று புத்தக அலமாரியில் ஏதோ புத்தகத்தை தேடும் போது சுஜாதாவின் புத்தகங்கள் கண்ணில் பட்டன. அவர் இறந்த பிறகு, அவரது புத்தகங்களை நான் தொடவேயில்லை. விகடனில் வாரம் ஒரு சிறுகதை வெளியிடுகிறார்களே, அதைப் படிப்பதோடு சரி! நேற்று என்னையும் அறியாமல் கைகள் அவரை தொட்டன. ஸ்ரீரங்கத்து தேவதைகள், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கனவுத்தொழிற்சாலை, ஆ, நகரம், சிறுகதை எழுதுவது எப்படி, குருப்ரசாத்தின் கடைசிதினம், மத்யமர், விவாதங்கள் விமர்சனங்கள், 21-ம் விளிம்பு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஓலைப்பட்டாசு, நிஜத்தைத்தேடி............. இன்னும்..இன்னும். ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னையும் அறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது! We miss you boss!
--------------------------------------------------------------------------------
தரிசனம் (கவிதை - இலவச இணைப்பு)

முட்டித்தள்ளிய கூட்ட நெரிசலில்
கம்பியைவிட்டு விலகி
என் பின் நின்றிருந்த
மூதாட்டிக்கு இடம்தந்து-
ஆராதனையின்போது
அவள் கண்களில் கண்டேன்
இறைவனை.
-----------------------------------------------------------------------------
முதலில் கேட்ட கேள்விக்கு பதில்.. ‘மேட்டர் இல்லீங்ணா..’

Sunday, June 1, 2008

அவியல்-4

# ரவி, வாசு, வாசுதேவன், கணேஷ், மூர்த்தி இவர்களையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? யோசித்து வையுங்கள்..
---------------------------------------------------------
# சென்னை சூப்பர் கிங்க்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஒரு தமிழனாக சந்தோஷம்தான். ஆனால் ஷேன் வார்னேவின் பலமான அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களென்று கவலையாகத்தான் இருக்கிறது! இன்று காலை பேப்பர் வாங்கும் பெட்டிக் கடையில் இரண்டு பேர் பஞ்சாப் தோற்றதற்கு வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்கள். கேட்டதற்கு ‘தோனியை என்னமோ பிடிக்கவேயில்லை’ என்கிறார்கள். அதிலும் ஒருத்தன் சொன்ன காரணத்தைக் கேட்டு ---------ல் சிரித்துவிட்டு வந்து விட்டேன். அவனுக்கு சச்சின் பிடித்த ப்ளேயராம். தான் கேப்டனாக இருந்த ஒரு மேட்ச்சில், தோனி சச்சினைக் கூப்பிட்டு ‘அங்கே போய் நில்லு’ என்று சொன்னாராம். இதை நடித்துக் காட்டிய அந்தப் பையன்.. ‘அவன் யாரு சார், சச்சினை ஆர்டர் பண்றதுக்கு? அதிலேர்ந்து எனக்கு தோனியை பிடிக்கறதில்லை" என்றான்!
-----------------------------------------------------------
# மானாட மயிலாட ரெண்டு வாரம் முன் வாட்டர் ஃபால்ஸ் செட் போட்டிருந்தார்கள். க்ளோசப்பில் பார்க்கும் போது, மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த செட்டைப் போட்ட ஆர்ட் டைரக்டர் யார், அவரின் உதவியாளர்கள் யார்.. யார்?
கலக்கப்போவது யாரு ஷோவில் ஒரு பங்கேற்பாளர் தீ மிதிப்பது போல நடித்த போது, கீழே தீ எஃபெக்டுக்காக ரோஜாப்பூக்களை கொட்டியிருந்தார்கள். அடுத்த பங்கேற்பாளர் வரும் போது, செட் சுத்தமாக இருந்தது! செட்டை சுத்தம் செய்த உழைப்பாளிகள் யார்.. யார்? இது போன்றவர்களை ஒரு எபிசோடில் திரையில் காட்டி அவர்களை பெருமைப்படுத்தி மகிழ்விக்கலாமே?
----------------------------------------------------------
# ‘இன்றைக்கு எங்காவது வெளியில் போகலாமே’ என்று மனைவி கேட்டதற்கு ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு என்றேன். இப்போதுதான் சன் டி.வி-யில் நான்கு மணிக்கு ஒரு படம் (புத்தம் புதிய சூப்பர் ஹிட் படமாம்!) போடுவதாய் காட்டியதைப் பார்த்ததுமே கண்டிப்பாய் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். ஏதாவது சேனல் மாற்றும் போது பார்த்துவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது! ‘வீராச்சாமி’ போடுறாங்களாம்! நானில்லை சாமி!
-----------------------------------------------------------
#முதல் பராவில் குறிப்பிட்டிருப்பவர்கள்- ‘நிழல்கள்’ ரவி, ‘அல்வா’ வாசு, ‘மலேசியா’ வாசுதேவன், ‘டெல்லி’ க்ணேஷ், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. பெயரைவிட பட்டம் எவ்வளவு முக்கியமாய் ஆகிவிட்டது!

இதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்

சென்னையில் திருடியவன்
நெல்லையில் கைது
அமெரிக்க டாலர்
மதுரையின் அச்சடிப்பு
கேரள மந்திரவாதி
ஆந்திராவில் மோசடி
கோவைத் தொழிலதிபர்
மும்பையில் தலைமறைவு
யாதும் ஊரே

் சொத்து மறுத்த தந்தை
சுட்டு வீழ்த்தினான் மகன்
காதலை எதிர்த்த கணவனை
கழுத்து நெறித்துக் கொன்றாள் மனைவி
வரதட்சிணைக் கொடுமையில்
அண்ணியை கொன்றான் ஒருவன்
வயல் வரப்புத் தகராறில்
அண்ணனைக் கொன்றான் தம்பி.
யாவரும் கேளிர
-----------------------------------------------------
சகுனம்

வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!

முடிவு

ஊட்டியின் தற்கொலை முனை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது.

அவன் கொஞ்ச தூரத்தில் புல் தரையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவள் எட்டிப் பார்த்தாள்.

‘எங்களின் இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை’ என்ற வரிகளில் நிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு இந்த முடிவுல சம்மதமில்லை பாஸ்கர்" என்றாள் அவள்.

"வேற என்ன பண்ணச் சொல்ற கீதா? நினச்சபடி வேலையும் இல்லை.. காதலை விடவும் முடியல. அப்பா அம்மாவை எதிர்க்கற தைரியமுமில்லைங்கறப்ப யாராயிருந்தாலும் இந்த முடிவுதான் எடுப்பாங்க"

"ப்ச்.. நீங்க நிறைய இத்துப் போன தமிழ்ப் படம் பாக்கறீங்க.. தற்கொலை பண்ணிக்கறதால என்னாகப் போகுது?"

"அப்பா அம்மாவுக்கு உறைக்குமில்ல? இத்தனை வருஷம் பாசமா வளர்த்த மகனைவிட வறட்டு கவுரவம்தான் பெரிசுன்னு நெனைக்கறவங்களுக்கு வேற எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியல"

"உங்களோட இந்த முடிவால தற்கொலைதான் தீர்வுன்னு இன்னும் பல பேர் நினைச்சா, அது உங்களுக்கு சந்தோஷமா?"

"அ..அது வந்து.."

"என்ன யோசனை?"

"நீ சொல்றது சரிதானோன்னு தோணுது.. வேற என்னதான் முடிவு?"

"என்னைக் கேட்டா? நீங்கதான் யோசிக்கணும். நானா சிறுகதைப் போட்டியில கலந்துகிட்டிருக்கேன்? அது உங்க தலைவலி. சீக்கிரம் எழுதிட்டு கிளம்புங்க.. இருட்டப் போகுது"