Tuesday, March 31, 2009

சைக்கோ - PSYCHO







1960ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.

அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.

புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.

ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.

அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.




காலையில் வந்து பார்த்த நர்மென் பேட்ஸுக்கு அதிர்ச்சி. அவசர அவசரமாக எல்லா ரத்தக் கறைகளையும் துடைத்து விடுதியை சுத்தப்படுத்தி காரையும், இறந்த மரியானையும் ஒரு புதைகுழியில் தள்ளிவிட்டு எப்போதும் போல விடுதிக்கு வந்துவிடுகிறார்.

அங்கே மரியானைக் காணாத அவளது தங்கை லைலா (VERA MILES), மரியானின் காதலன் சாமிடம் அவள் போயிருக்கக்கூடும் என்று நினைத்து அவனைத் தேடிப் போகிறாள். அவள் காதலனுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. இடையில் ரூ.40000த்தை
தொலைத்த முதலாளி அனுப்பி வரும் ப்ரைவேட் டிடக்டீவ் ஆர்பகாஸ்ட் என்பவரும் தேடுதல் வேட்டையில் இறங்கி.. நார்மன் பேட்ஸின் விடுதிக்கு சென்று.. அவர் மீது சந்தேகம் கொண்டு – பேட்ஸின் வீட்டிற்கு செல்ல.. யாராலோ குத்திக் கொலை செய்யப் படுகிறார். பேட்ஸின் வீட்டிற்கு செல்லும் முன் லைலாவிற்கு தொலைபேசிய டிடக்டீவ் பேட்ஸின் வீட்டில் பேட்ஸின் வயதான தாயை மரியான் சந்தித்திருக்கக் கூடும் அங்கேதான் ஏதேனும் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்.




கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..

அங்கே....

வயதான தாயென்று யாருமே இல்லை.

அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?

அந்த வயதான தாய்தான். எப்படி?

படம் பாருங்கள்!

1960ல் வெளியான கருப்பு வெள்ளைப் படம். ச்சான்ஸே இல்லை. அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை (ஜோசப் ஸ்டெஃபானோ. ராபர்ட் BLOCHன் நாவலைத் தழுவி). நார்மென் பேட்ஸாக நடித்த ஆண்டனி பெர்கின்ஸ்-சின் நடிப்பு பிரமாதம். அதுவும் இறுதிக் காட்சியில் அவர் கண்களில் தெரியும் அமானுஷ்யம்... இன்னும் பயமுறுத்துகிறது!

அருமையான கேமரா கோணங்கள் (ஜான் ரஸல்) படம் ஆரம்பிக்கும்போதே அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகர் முழுவதும் பறவை போல பறந்து சாம்-மரியான் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு ஜன்னலின் லேசாக திறந்திருக்கும் ஸ்க்ரீனின் கீழ்ப்பகுதியில்தான் உள்ளே போகிறது காமிரா. ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.

அதெபோல மரியானைப் பின்தொடரும் போலீஸ் கார் பாதை மாறுவதைப் பார்த்து அவள் முகம் நிம்மதி அடைவதை நமக்கு உணர்த்த காரோட்டும் அவள் முகத்தை நமக்கு காட்டி, அவள் பின்னால் தெரியும் காரின் பின்கண்ணாடியில் போலீஸ் கார் வேறு பாதைக்கு மாறுவதையும் நமக்கு காட்டி, இவள் அதை ரிவர்வ்யூ மிர்ரரில் பார்ப்பதையும் நமக்குக் காட்டி.... மூன்று கோணங்களில் எடுக்க வேண்டிய காட்சியை ஒரே கோணத்தில் அடக்கி.... ப்பா!

அதேபோல ஷவரை குளிப்பவரது கோணத்தில் எடுத்திருப்பது.. டிடக்டீவ் மாடிப்படி ஏறுகையில் கீழிருந்து மேல் இல்லாமல் மாடி ஏறும் அவர் காலில் முட்டிக்கு நேராக கேமராவைக் காண்பித்திருப்பது என்று காமிரா.. பல இடங்களில் சபாஷ் வாங்குகிறது.

அடுத்து முக்கியமானது – இசை: பெர்னார்ட் ஹெர்மான். துல்லியமான இசை. எங்கெங்கே மௌனம், எங்கெங்கே இசை என்பதை மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்சாக்! என்ன ஒரு டைரக்‌ஷன். இரண்டாவது முறை பார்க்கும்போது மரியானின் முக பாவங்களிலேயே அவள் ஒரு முடிவுடன் இருக்கிறாள் என்பதை உணர்த்தியிருப்பார்.

மரியான் காரில் செல்லச் செல்ல அங்கே அவளது அலுவலகத்தில் அவள் குறித்து எடுக்கப் படும் நடவடிக்கைகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார். மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!

அவளது உடலை காருடன் புதைகுழியில் தள்ளியதோடு இல்லாமல், கார் உள்ளே செல்லச் செல்ல நார்மென் பேட்ஸ்சின் முக பாவங்களில் அவரது உணர்வைக் காட்டியிருப்பார்.


இறுதியாக நார்மென் பேட்ஸின் தாயார் குறித்தும், நார்மென் பேட்ஸ் குறித்தும் சைக்கியாட்ரிஸ்ட் பேசும் வசனங்கள் அத்தனை ஷார்ப்.

அதேபோல அந்த விசாரணை முடிந்து, நார்மென் பேட்ஸ் குளிருக்குப் போர்வை கேட்க... கொடுத்ததும், தேங்க்ஸ்’ என்கிறார்.. அவரது தாயார் குரலில்! என்ன ஒரு டைரக்டரய்யா இவர்!

இதுவரைக்கும் இந்த ஒரு படத்தில் பாதிப்பில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வந்தாயிற்று என்கின்றனர் உலக சினிமா ஆர்வலர்கள்.

எப்பாடு பட்டாவது தேடிப்பிடித்துப் பாருங்கள்...

சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!

Monday, March 30, 2009

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!

செல்வேந்திரன் இரண்டொரு நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.....


"வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்.

அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். " என்று சொல்லியிருந்தார்.

செல்வா... பிடியுங்கள் பாராட்டை!

அந்த நண்பருக்கு ஊக்கமளித்தமைக்காக மட்டுமல்ல... எங்களையும் இரண்டொரு நாள் பழைய நினைவுகளைப் புரட்டிப் போட வைத்தமைக்கு!

மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன்.

இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக் குறிப்பிட நினைத்தேன். பலபேர் படிக்கச் சொல்வதால். ஆனால் நான் இன்னும் படிக்காததால் குறிப்பிடவில்லை.

வாழ்க்கை, ஆன்மீகம், கவிதை, கட்டுரைகள், சினிமா என்று வாசிப்புத்தளம் விரிவடைய எல்லாத் துறைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கிறேன்.

இனி.. பட்டியல்....

1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்

ஆன்மிகம் என்பது ஒரு நெடிய பயணம். முடிவிலி. அந்தப் பயணத்தில் உங்களுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு இதில் பல கோணங்களில் விடையிருக்கும்... நிச்சயமாக. அதுவும் இடைவெளி விட்டு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறாக உங்களுக்குள் கதவு திறக்கும்!

2. எல்லார்க்கும் அன்புடன் – கல்யாண்ஜி

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!

3. வனவாசம்,மனவாசம் – கவியரசு.கண்ணதாசனின் சுயசரிதை

கண்ணதாசனின் சுயசரிதை, வாலியின் சுயசரிதை (நானும் இந்த நூற்றாண்டும்) இரண்டுக்கும் நடந்த ரேஸில் சந்தேகத்துக்கிடமின்றி கவியரசர் வென்றுவிட்டார். காரணம் தமிழக அரசியல் குறித்தும், திரைப்படத் துறை குறித்தும் நீங்கள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள இது உதவும். இரண்டு பாகங்களையும் ஒன்றென குறிப்பிட்டு விட்டேன்!

4. கோணல் பக்கங்கள் 1,2,3 – சாருநிவேதிதா.

சாருவைப் பிடிக்காது என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் நிச்சயமாக படித்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத எழுத்து சாருவுடையது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்தக் கோணல்பக்கங்கள். இதிலிருப்பது இப்போதைய சாரு அல்ல. அப்போது அவரது எழுத்தில் இருந்த குறும்பும், கோபமும் இப்போது வேறு வடிவம் கொண்டதன் விளைவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்! (நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)

5. சத்தியசோதனை – மகாத்மா காந்தி

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பதை எழுதுவதை விட நீங்களாகப் படித்துத் தெரிந்து கொள்வது நலம். காரணம் நிச்சயம் நீங்கள் நூலகம் எல்லாம் வைத்து ஒரு வாசிப்பாளனாகக் காட்டிக் கொள்ளும்போது பல விவாதங்களில் காந்தி அடிபடுவார். (என்ன முரண்! அகிம்சைக்காரர் அடிபடுகிறார்!) படித்து விட்டு விமர்சித்தால் உங்களுக்கு சௌகரியம்... காந்திக்கும்!

6. கதாவிலாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்

முக்கியமாக எஸ்.ரா-வின் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடக் காரணம், இது ஒன்றைப் படித்தால் இன்னும் 50 புத்தகங்கள் வாங்க அவரைத் தூண்டும். தமிழில் தவிர்க்கவே முடியாத ஆளுமை கொண்ட 50 எழுத்தாளர்களைக் குறித்து அதில் அவர் எழுதியிருக்கிறார். 50 இல்லையெனினும் 20 எழுத்தாளர்களைத் தேடி ஓடுவது உறுதி.

7. பொன்னியின் செல்வன் – கல்கி

வரலாற்று எழுத்து அதிலும் ஒரு க்ரைம் நாவலுக்குரிய ஸ்பீடு, சஸ்பென்ஸ், பாத்திரப் படைப்புகள்...! பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு, சிவகாமியின் சபதத்தை தேடிப் போகாமலா இருப்பீர்கள்?!?

8. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியன்

ரொம்ப போரடிக்கிற எழுத்து. ஆனால் நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை நாகரிகங்களில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன என அறிய இதிலுள்ள 20 கதைகள் உதவும்.

9. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி.ரங்கராஜன்

அற்புதமான ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். அலுவலகத்தில், வீட்டில், சமூகத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டால் முன்னுக்கு வரலாம் என்பது ரொம்பப் பிராக்டிகலாக எழுதப்பட்டிருக்கும். படித்தால் நிச்சயம் ‘ஓ.. அவன் முன்னேறினது இதே மாதிரிதான்ல’ என்று யாரையாவது ஒப்பிட்டுக் கொள்வீர்கள்.

10. உலகசினிமா 1,2 – செழியன்

வாசிப்பு என்று தளம் விரிவடையும்போது சினிமா குறித்த அறிவு தவிர்க்க முடியாதது. அதற்கு உலகசினிமாக்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகத்தைப் படித்து இவற்றிலுள்ளவற்றில் 30% படங்களைப் பார்த்தாலே ஓரளவு சினிமாவை ரசிக்க... அதாவது எப்படி ரசிக்க என்பதை அறிந்து கொள்வீர்கள்.


****

மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.

மிக முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்...

நிச்சயமாக ‘அட.. இத விட்டுட்டோமே’ என்று நினைக்கத்தான் போகிறேன்.. ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து. அதேபோல இதிலுள்ள எல்லாமே உங்கள் எல்லாருக்குமே பிடித்ததாய் இருக்காது. ஆனால் எல்லாருக்குமே பத்தில் ஏதோ ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்குமென்று நம்புகிறேன். நீங்கள் நினைக்கும் புத்தகம் வேறெதுவும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இதைப் பதிவாக எழுதக் காரணம் எனக்கும் ஒன்றிரண்டு நண்பர்கள் ‘புதிதாகப் படிப்பதென்றால் என்ன புத்தகங்கள் வாங்க?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ‘நானெல்லாம் அதைச் சொல்வதா’ என்ற காரணத்தால் பதிலளிக்காமலே இருந்திருக்கிறேன். என்னமோ நானெழுதுவதையும் எழுத்தென்று படிக்கும் சிலர் மீண்டும் மீண்டும் கேட்கும்போது சுட்டி கொடுக்க இந்தப் பதிவு எனக்கு உதவும். அதுவுமில்லாமல் செல்வேந்திரன் சார்பாக எங்கள் ஊர்க்காரர் ஈரவெங்காயம் சிங்கப்பூர் விமான டிக்கெட் பரிசு தருகிறேனென்றிருக்கிறார். போய்த்தான் பார்ப்போமே....!

Thursday, March 26, 2009

அவியல் - 26.03.2009

குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.

THE BLACK HOLE

அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!

இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.

அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.

அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.

அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.

பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...

கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…

வி ழு ந் து வி டு கி ற து!

அவ்வளவுதான் படம்!

வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!

எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE

******************************

நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.

**********************************
சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..

“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”

அவர் சொன்னாராம்….

“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”


இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’

‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’

******************************

ஒரு கிசுகிசு…

என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.

திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!

***********************

முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.
(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.

இதோ….

*
மனப்பாட மீன்குட்டி


குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.
கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.

*

தூங்குகிறாள்


சிரித்து விளையாடி
களைத்துப் போய்
தூங்குகிறாள் குழந்தை.
கனவில் அவள் ஆடும் ஆட்டம்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.

*
இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.

அதுதான் கவிதையின் வெற்றி!

Wednesday, March 25, 2009

IPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு







ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்றமுறையே மிகுந்த எதிர்பார்ப்பையும், எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெற்றியையும் பெற்று இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களை ஏகத்துக்கும் தயார்படுத்திவிட்டது.

ஐ.பி.எல் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் பாகிஸ்தானில் இலங்கைவீரர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது. ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது தேர்தலும் வருவதால் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமமிருக்குமென்ற கவலையைத் தெரிவிக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் சிதம்பரம்.

ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி பலவித யோசனைகள், சர்ச்சைகளுக்கிடையே ‘போட்டிகளை இந்தியாவில் நடத்தமாட்டோம். இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும். இந்திய ரசிகர்கள் மன்னிக்கவும்’ என்று அறிவிக்கிறார். (நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!)

இங்கேதான் ஆரம்பித்தது அரசியல். உடனே குஜராத் தலைவர் நரேந்திரமோடி ‘இது தேசத்துக்கே அவமானம்’ என்றொரு அறிக்கை வெளியிடுகிறார். கோபம் கொண்ட சிதம்பரமும் ‘இதொன்றும் தேசத்துக்கு அவமானமல்ல. 2002 குஜராத் கலவரங்கள்தான் இதுவரை தேசத்துக்கு அவமானமாக இன்றுவரை இருந்து வருகிறது’ என்கிறார்.

காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டு அலசி ஆராய்ந்து.. ‘மோடி இப்படிச் சொல்கிறாரே.. அவரது குஜராத் மாநில டி.ஜி.பி வாக்குப்பதிவுக்கு 15 நாள் முன்னும் 3 நாட்கள் பின்னும் பாதுகாப்புக் கொடுப்பதில் சிரமமிருக்கும்’ என்றாரே.. அதைத்தானே நாங்களும் சொன்னோம்’ என்கிறார்கள்.

இதற்கிடையில் பாதுகாப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில் பி.சி.சி.ஐ. அவசரப்பட்டு போட்டியிடங்களை மாற்றப் போவதாக அறிவித்தது துரதிருஷ்டவசமானது என்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருகிறது.

‘ஏற்கனவே மூன்று முறை ஷெட்யூலை மாற்றியாயிற்று. இன்னும் காத்திருக்க இயலாது. மேலும் எங்களை நம்பி வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம்’ என்ற லலித்மோடி மத்திய அரசு NO EXTRA TROOPS FOR SECURITY என்றதையும் கர்நாடகா உட்பட சில மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இடையே அருண்ஜேட்லி சிதம்பரத்தை நோக்கி சில விமர்சன அம்புகளை வீசுகிறார். ‘ஒரு பாதுகாப்பான நாடென்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டாமா? நாளைக்கே கும்பமேளா நடக்கும்.. இத்தனை பேர் வந்தால்தான் பாதுகாப்பு என்பீர்களா? இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதக்கூட்டம், விழாக்கள் என்று எத்தனை இருக்கிறது. இது இப்படியே போய் எங்கே கொண்டுபோய் விடும்? மற்ற நாடுகளில் நம் பெயர் பாதிக்கப்படாதா? ஐ.பி.எல். என்பது ஏறக்குறைய நமது உள்ளூர் போட்டி. இதை வெளிநாட்டில் நடத்துவது என் நாட்டில் எனக்குப் பாதுகாப்பில்லை என்பதாகாதா? இது வளர்ந்து இந்தியச் சுற்றுலாவே பாதிப்புக்குள்ளாகாதா’ என்றெல்லாம் அவர் அடுக்கிய கேள்விகளுக்கு ‘ஜேட்லி எப்போதுமே எதையுமே மிகைப்படுத்திப் பேசி அரசியல் செய்பவர். ஐ.பி.எல் வெறும் ஸ்போர்ட்ஸ் அல்ல. மிக்க புத்திசாலித்தனமாக ஸ்போர்ட்ஸும் பிஸினஸூம் கலக்கப்பட்ட கலவை அது. இவ்வளவெல்லாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை’ என்று பதில் சொல்லிவிடுகிறார் சிதம்பரம்.

இறுதியாக....




நேற்று ‘தென்னாப்பிரிக்காவில்தான் ஐ.பி.எல்-2’ என்று அறிவிக்கப்பட்டு விட்டது! (இனி அது IPL ஆ SAPLஆ?)

ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பத்தாவது நாளே இரண்டாம் T 20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் அங்கே வைத்தால் நம் ஆட்களுக்கு பிட்ச், காலநிலைகள் பழகிவிடும் என்று சச்சின் டெண்டுல்கர் சொன்னது போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏப்ரல், மே-யில் இங்கிலாந்தின் காலநிலைகள் கிரிக்கெட்டுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டு விட்டதாக லலித்மோடி அறிவித்து விடுகிறார். ஏப்ரல் 10ல் ஆரம்பிக்க வேண்டிய ஐ.பி.எல், ஏப்ரல் 18ல் ஆரம்பமாகி மே 24ல் முடிவடைகிறது. (எலக்‌ஷன் ஏப்ரல் 16-மே 13)

59 ஆட்டங்கள் அடங்கிய ஐ.பி.எல்-2 இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்காக இந்திய நேரம் மாலை 4 மணி, மற்றும் 8 மணிக்கு நடைபெறும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதால் என்ன லாப நஷ்டங்கள்? நிச்சயமாக வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் வருகையால் சுற்றுலாத்துறைக்கு வரும் வருமானம் இழப்புதான்.

வீரர்களுக்கு... யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

நேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்த பெருந்தலைகளுக்கு இது ஏமாற்றம் தரும் செய்தியாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம்! சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை)

இங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா? (இது வேணா நடக்கும்!!)

ரசிகர்கள் இதைப் பார்க்கும் கோணம் வித்தியாசமாக இருக்கிறது.

*இந்தியாவில் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கிரிக்கெட்டிலும் வந்துவிட்டது.

*இனி கிரிக்கெட் சாமானிய இந்தியனுக்கல்லவா? மோடிகளுக்குத்தானா?

*தென்னாப்பிரிக்காவில் சட்டம், ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சிறு பணத்திற்கெல்லாம் கொலைகள் நடப்பது உங்களுக்குத் தெரியுமா? வீரர்கள் பாதுகாப்பு சரி... போட்டிகளைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?

இப்படி கேள்வி மேல் கேள்வி வந்து விழுந்து கொண்டிருக்கிறது.

இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.

அந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.

Monday, March 23, 2009

கவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....

கவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....

அவனுக்குக் கவிதைகள் மீதான ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கவேண்டும். ஆனால் அவனுக்குக் கவிதைகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. ஒன்று அவனுக்குக் கவிதைகளைத் தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது கவிதைகளுக்கு அவனைப் பிடிக்காமல் இருந்திருக்கும்.

கவிதைகள் அவனுக்குப் பிடிக்குமென்றாலும் கவிதைகளுக்கென அவனொதுக்கிய நேரம் மிகக் குறைவு. எழுத மட்டுமல்ல.. படிக்கவும்.. அவனும் கவிதைகள் எழுதியிருக்கிறானென்றாலும் அதைக் கவிதைகள் என்று சொல்வதில் அவனுக்குத் துணிச்சலில்லை. அவை கவிதைகளாகவே இருந்த போதிலும். ஆனால் ரசிக்க அவனுக்கு நிறைய வாய்ப்பிருந்தது.. காரணம் நண்பர்கள்.

நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதாவதொரு கவிதையைச் சொல்லி அவனைப் பித்துப் பிடிக்க வைத்துவிடுவார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. ஏதோவொரு பிரபலத்தின் ஏதோவொரு கவிதை அவனுக்கு எம்.வி.வி-யின் ‘காதுகளி’ல் வருவதுபோல அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே அவனைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது.

‘இந்தச் சாவிலும் சுகமிருக்கிறது’ என்று முடியும் கவிதைக்காக அவன் என்னவும் செய்யத்தயார். அதை எழுதியவர் அப்படி.

இந்தக் கவிதையும் அப்படித்தான். ‘டைரி எழுத எத்தனிக்கும்போது மட்டும் இத்தனை போலித்தனங்கள் எப்படி வந்து விழுகின்றன அப்பா’ - இதை எழுதியது யாரென்று தெரியவில்லை. ஏன்.. இதன் வடிவம் கூடத் தெரியவில்லை அவனுக்கு. ஒரே நேர்கோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறான் அவன்.

இதையெல்லாம் சொல்வதைக் கூட சிலர் பரிகசிக்கக் கூடும். அதுபற்றிய பிரக்ஞை இல்லாமல் இதை எழுதிக்கொண்டிருக்கிறான் அவன். அவனுக்கு இதையெல்லாம் சொன்ன நண்பர்களுக்கான அவனும் கவிதை எழுதுவேன் பேர்வழியென்று நேற்று ஒரு முயற்சியெடுத்தான்.

அதைத் தற்கொலை முயற்சி என்கிறார்கள் சிலர். சொல்லக் கேட்டவர்கள் “இதை நீயாக நினைத்துக் கொண்டால் தற்கொலை முயற்சி. எங்களுக்குச் சொன்னால் ‘கொலை முயற்சி’” என்கிறார்கள்.

அப்படியென்ன சொல்லிவிட்டான் அவன்?

அவன் சொன்ன கவிதை.. அல்லது கவிதை போலொன்று.. முதலில் வேறு..

அதை இங்கே சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதைச் சொல்லிக் கேட்டான்...

இது நல்ல கவிதையா என்று...

இதே போலவொரு கவிதையை ஏற்கனவே படித்துவிட்டதாகச் சொன்னானொரு நண்பன். இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

காரணம்..

இதோபோல ஏதோவொன்று இதற்கு முன்னால் என்றால்...

இது கவிதை என்றுதானே அர்த்தம்????

ஆனாலும் அந்த சந்தோஷத்தை நீட்டித்துக் கொள்ள எண்ணிய அவன்.. அவருக்கு அலைபேசினான்.

“இந்தக் கவிதை போலென்று ஏற்கனவே வந்ததா?” எனக் கேட்டான். ‘இல்லை.. இருந்திருக்கலாம்.. இல்லாமலிருந்துமிருக்கலாம்’ என்றார் அவர். ‘நான் கேட்டதில்லை. ஆனாலும் சரியாகத்தான் இருக்கிற’தென்றார் அவர். அது போதுமானதாயிருந்தது அவனுக்கு.

அதோடு நின்றிருக்கலாம்.. ஆனால் அவன் கவிதாவிசாரணை அதோடு நிற்கவில்லை. தேவதச்சன், பிரம்மராஜன் என்று ஒருநாளில் பயணித்த அது... பசியோடு ஒருவிடம் வந்து சேர்ந்தது..

அது... சரவணபவன்.

இதோ.. இந்த நிமிடம் வரை நல்லதொரு பதிவாய் அல்லது நல்லதொரு பதிவுபோலப் போய்க்கொண்டிருக்கும் இது இப்போது தடம் மாறப் போகிறதென்பதை இந்த நிமிடத்தில் நீங்கள் உணரக்கூடும்... அவனைப் போலவே..

மிக்கப் பசியோடு ஐந்து இட்லியை ஆர்டர் செய்தவனுக்கு இரண்டு இட்லிகளே தரப்பட்டது. சண்டையிடச் சென்ற அவனுக்கு.. சர்வர் இரண்டாயிருந்த அந்த இட்லியில் முதலை எடுத்து இதோ இரண்டென்றும்.. இன்னொன்றை எடுத்து இதோ மூன்றென்றும் பிரித்துப் போட்டபின்தான் அந்த இரண்டில் ஐந்து ஒளிந்திருந்தது அவனுக்குப் புலப்பட்டது.

அந்த கணம்தான் அவனுக்கோ.. கவிதைக்கோ சிறு சலனம் ஏற்பட்டது. அவன் மனதில் அந்தக் கவிதை தோன்றியது...

சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.

இட்லி முடியுமுன்னே வந்துவிழுந்த இந்தக் கவிதை அவனுக்குப் பசியைப் போக்கி விட்டது. (கவிதைப் பசியை அல்ல...)

இதையும் வழக்கம்போல அவனது நண்பனைக் கூப்பிட்டுச் சொன்னபோது... ‘என்ன சொல்ல வர்றே-ன்னு சொல்லீடு’ என்றான் அந்த நண்பன்.

விளக்கினபிறகு அந்தப்பக்கத்தில் நண்பன் சிரித்த சிரிப்பு இவனுக்குப் பாராட்டா நக்கலாவெனத் தெரியாமலிருக்கிறான் இப்போதுவரை.

அடுத்ததாக அவன் தேர்ந்தெடுத்தது அவரை. கவிதைகளில் பிரபலமாயிருந்த அவரிடம் இதைச் சொல்லி... ‘இந்தக் கவிதை எப்படீண்ணே’ என்றபோது அவர் சொன்னார்...

உடனே சொன்னாரவர்...

“இதெப்படியிருக்குன்னு கேளு. நியாயம். இந்தக் கவிதை-ன்னு கேட்காதே”

“ஏண்ணா?”

“இது கவிதையே அல்ல”

“எப்படீ?”

“‘என் வீட்டுக் குழாயைத் திறந்தேன். தண்ணீர் வரவில்லை’ இப்படி நான் சொல்றேன். இத நீ கவிதைம்பியா?”

“புரியலண்ணா..”

“சரி.. அதுல நீ என்ன சொல்ல வர்ற?”

“பலவிஷயம் இருக்கு. அந்த இட்லி அவ்ளோ ச்சின்னது. (சி-க்கு முன் ‘ச்’சைக் கவனிக்கவும்!) அவன் சாப்பிடறதுக்கு முன்னாடியே அது முடிஞ்சிருச்சு”

“சரி...”

“இன்னொரு கோணம் இருக்கு. இவன் இட்லியை ஆர்டர் செஞ்சு சாப்பிட ஆரம்பிச்சப்போ... சரவணபவன்லயே இட்லி முடிஞ்சிருச்சு. அடுத்து வர்றவங்களுக்கு இல்ல. அதைச் சொல்றான் அவன்.. ‘சாப்பிட ஆரம்பித்தான்-முடிந்துவிட்டது’ ன்னு”

“சரி”

“இன்னொரு உலகியல் கோணத்துல இதை நீங்க பார்க்கணும்”

“என்ன?”

“சரவணபவன்ல ஆர்டர் செஞ்சு சாப்பிடறான் இவன். ஆனா பலருக்கு இட்லியே இல்லைங்கறதயும் சொல்றோம்”

கொஞ்ச நேரம் எதிர்முனையில் நிலவிய மௌனம் இவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

“அண்ணா...”

“உனக்கு கவிதைகள் பற்றி நான் சொன்னதுக்கு மன்னிக்கணும். தப்பா நினைச்சாலும் பரவால்ல.. இது கவிதை அல்ல. அப்படியே வெச்சுகிட்டாலும்.. இதுல சரவணபவன் தேவையற்றது”

“ஆனா.. சரவணபவன்லதான் இப்படி”

“அதை நீ சொல்லவேண்டியதில்ல”

“போங்கண்ணா... இட்லி சின்னதாயிருக்கா இல்லையாங்கறத உலகியலோட அழகியலோட பார்க்கறேன் நான். உங்களால அதப் புரிஞ்சுக்க முடியலையாண்ணா”

“சரி.. நாளைக்குப் பேசறேன் நான்”

இதோடு அந்த சம்பாஷணை முடிந்துவிட்டது.

ஆனால் இவன் இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறான்..

எது கவிதையென்று புரியாமல்...


புரிந்துகொள்ளக்கூடுமொருநாளவன்.. அது அவனுக்கோ கவிதைக்கோ நல்ல நாளாகத்தானிருக்கும்.

Thursday, March 19, 2009

வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!

நேற்றைக்கு எங்கள் நிறுவனத்தில் ஒரு விழா. ஆண்டுவிழா மாதிரி என்று கூறலாம். நிறுவனத்திலேயே பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களில் திறமை உள்ளவர்கள் பாடல், ஆடல், மிமிக்ரி, நாடகம் என்று நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கினேன். ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். (சரி..சரி.. உணர்ச்சி வசப்படக்கூடாது. எல்லாம் இருக்கறதுதான்!!!)

இது சம்பந்தமான ரிஹர்சல், விழா அமைப்புகள் என்று ஒருவாரம் பிஸி. (என்னமோ ஒருவாரமா எழுதறதே படு மொக்கையா இருக்கே. பிஸி போல? - என்று கண்டு கொண்ட நண்பர்கள்.. வாழ்க வாழ்க!!)

நேற்று மாலை 4 மணி முதல் இரவு பத்து வரை நடந்த அந்த நிகழ்ச்சிகளை மேடையில் தொகுத்து வழங்குவது முதல், பல பணிகள் இருந்ததால் 12 மணி முதலே நான் இணையம் பக்கம் வரவில்லை. ஐந்து மணியளவில் அலைபேசியையும் அணைத்துவிட்டேன்.

பத்துமணிக்கு அலைபேசியை உயிர்ப்பித்தபோது... நர்சிம் மற்றும் அனுஜன்யா, ஜ்யோவ்ராம் போன்ற இணையில்லா இணையக் கவிஞர்களிடமிருந்தும் மிஸ்டு கால், மெசேஜ்கள் பதிவாகி இருந்தது.

நர்சிம்மை அழைத்தபோதுதான் விவரம் சொன்னார்...

நண்பர் ரவிஷங்கரது பதிவில் அவர் எழுதிய கவிதை குறித்து காட்டமான பின்னூட்டம் ஒன்று என் பெயரில் பதிவாகி இருப்பதாகச் சொன்னார். ‘நான் அவன் இல்லை’ என்றேன். அப்போதே லைனில் வந்த முரளிகண்ணன் உடனே ஒரு பதிவை எனக்காகப் போட்டு எல்லாருக்கும் விளக்கினார். ‘இது ஹேக்கிங் ஆக இருக்கக்கூடும்’ என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது. நான் அப்போது நெட் பக்கம் போக வழியிருக்கவில்லை. வீடு செல்ல எப்படியும் ஒரு மணிநேரம் ஆகிவிடும். ஏற்கனவே ஹேக்கிங்-கால் பாதிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லாவும் ஒரு பதிவைப் போட்டு எல்லார்க்கும் தெரிவித்தார்.

அதற்குப் பின் வீட்டிற்கு வந்து பார்த்தால்.. நல்லவேளையாக ஹேக்கிங் எல்லாம் இல்லை.

ஓபன் ஐ.டி-டில் என் பெயரில் என் யூ.ஆர்.எல்லைப்பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் அவ்வளவே...!

ரவிஷங்கரது பதிவில் என் பெயரில் வந்த பின்னூட்டத்தில் என் ப்ரொஃபைல் படம் இல்லை. அந்தப் பெயரை க்ளிக் செய்தால் என் வலைப்பூவுக்குத்தான் செல்கிறது. என் ப்ரொஃபைலுக்குச் செல்லவில்லை. அதை விளக்கி அவருக்கும் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். (இது தெரியாம மனுஷன் அனுஜன்யா-வை மட்டும் பாராட்டினீங்களே’ன்னு பதில் போட்டு.. அந்த யூத்து பாவம் ‘யோவ்.. உங்க சண்டைக்கு ஏன்யா என் கவிதையைக் குறை சொல்றீங்க?’ன்னு ஒரே அழுகாச்சி! ‘பொறு..பொறு.. உங்களுக்கு கவிதைலதான் பதில் சொல்லணும்’னு வேற மிரட்டீட்டுப் போய்ட்டாரு!)


இவன் விமர்சனம் இந்த மாதிரி இருக்காது என்றுணர்ந்த நண்பர்களுக்கு நான் என்ன சொல்வேன்? என்னை அழைத்து பாதுகாப்புக்குச் சில வழிமுறைகளை கான்ஃப்ரென்ஸில் சொன்ன, என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் நர்சிம், அப்துல்லா, ஆதி, அனுஜன்யா, வடகரைவேலன், வெயிலான், ரவிஷங்கருக்கு மின்னஞ்சலனுப்பி என் நிலை விளக்கிய அதிஷா, ஜ்யோவ்ராம், உண்மைத்தமிழன், வால்பையன், கும்க்கி, கார்க்கி...

நான் அப்படி என்ன செஞ்சிருக்கேன் உங்களுக்குன்னு தெரியல...

இனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு!

இந்த இடத்தில் மறுபடி ஒன்றைச் சொல்ல வேண்டும்...

யாருடைய எழுத்தாவது பிடிக்கவில்லை.. நன்றாக இல்லை என்றால் நேரடியாக சொல்லக்கூடிய ஆண்மை எனக்கிருக்கிறது. அதே சமயம் எல்லாருமே நமக்குப் பிடித்த வண்ணம் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். நானெழுதுவது மட்டும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறதா என்ன?

எந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.

என்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு. ரொம்ப காட்டமாக இருந்தால்... எஸ்ஸெம்மிஸில் அல்லது மெயிலில். (இதோ இதை எழுத எழுத ஸ்ரீ ‘ஒரு கதை எழுதியிருக்கேன்’னு பயமுறுத்துறாங்க.. போய்ப் படிக்கணும்!!!) மற்றபடி மனம்வருந்தும்படி சொல்லி எனக்குப் பழக்கமில்லை. (இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது!)

ஐயா.. கம்ப்யூட்டர் அறிவு நெறைஞ்ச புண்ணியவான்களே... உங்க அறிவை இதுக்கா பயன்படுத்துவீங்க? ‘ஒரு பதிவோட தலைப்பை ரெண்டு மூணு கலர்ல எழுதணும்னா.. முடியுமா?’ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். இன்னும் என்னென்னவோ நாட்டுக்கு பண்ண வேண்டிய வேலைகள் உங்களால ஏராளமிருக்கு. கம்ப்யூட்டர் அறிவும் பதிவுலக அனுபவமும் வெச்சுட்டு pkp.in என்ன பண்ணிகிட்டு இருக்காருன்னு பாருங்க... அதுல கால்வாசியாவது பண்ணுங்க.

அதையெல்லாம் விட்டுட்டு ஒரு அப்பாவியைப் போய் சீண்டறீங்களேப்பா... பதிவெழுத வந்தது குத்தமாய்யா? என்னை மாதிரி பச்சப்புள்ளதான் உங்களுக்குக் கிடைச்சானா?

எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!

(அந்த ப்ராக்கெட்ல சிவப்புல இருக்கறது இங்க ஆஃபீஸ்ல ஒருத்தரைப் பார்த்து சொன்னதுங்க.. தப்பா நெனைக்காதீங்க.... ஹி..ஹி..

இறைவன் அமைவதெல்லாம்....


வீடு மாற்றியாயிற்று. எல்லாப் பொருட்களும் வைக்கப்பட அதனதன் இடங்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. டைனிங் டேபிள் இந்த திசையில், புத்தக அலமாரி இந்த மூலையில், குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்கள் இங்கே இப்படி வைக்கப்படுவேண்டுமென எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக மனைவியே இருக்கிறார்.

கடைசியில் சாமி படங்களை வைப்பது குறித்த விவாதம் நடந்தது.

“அந்த முருகன் படத்தை இங்க மாட்டுங்க”

“இல்லப்பா.. அந்த பஞ்சமுக விநாயகர் படம் இங்க வெச்சா கரெக்டா இருக்கும்ல. அப்பறம் வலது பக்கம் உன்னோட முருகன் படம்.. இடது பக்கம் கிருஷ்ணர் படமும் வெச்சுக்கலாம்”

“சொன்னாக் கேளுங்களேன்... அவ்ளோ பெரிய படத்தை மாட்டினா இந்த முருகன் படம் கண்ணுலயே படாத மாதிரி போயிடும்”

“இல்லப்பா.. இந்த பஞ்சமுக விநாயகர் படத்தை எவ்ளோ பாடுபட்டு பிடிச்சேன்னு ஒனக்குத் தெரியும்லப்பா...”

“அதுனாலதான் சொல்றேன். நீங்க பாட்டுக்கு அவ்ளோ பெரிய படத்தை இங்க வெச்சு... பொண்ணுங்க அத இதப் பண்ணி ஏதாவது ஆச்சுன்னா.. உங்களுக்கும் மூட் அவுட் ஆயிடும்.. எனக்கு அதவிட மூட் அவுட் ஆகும்”

“சரிப்பா.. நீ எப்படிச் சொல்றியோ.. அப்படிப் பண்ணிக்கலாம்”

**********************

“இதென்னங்க சட்டைல இத்தனை பேப்பர்.. அட்டை... கசகசன்னு. உங்க புள்ளைங்க கூட பரவால்ல போல”

“என்னது.. காமி.. இது பில்லும்மா.. ஆஃபீஸ்ல வவுச்சர் போடணும். இது நீ சுடிதார் வாங்கின கடையோட விசிட்டிங் கார்டு. நீதான் வெச்சிருக்கச் சொல்லி குடுத்த. இது... தேவையில்லை கிழிச்சுடலாம்”

“இதென்ன நாலஞ்சு சாமி படம் பாக்கெட்ல வெச்சிருக்க?”

“இது ரமேஷ் சபரிமலை போய்ட்டு வந்தப்ப குடுத்தான். இந்த க்ருஷ்ணர் பாரேன். முகத்துல எவ்ளோ குழந்தைத்தனம் தெரியுது. சூப்பரா வரைஞ்சிருக்காங்க. அதான் வெச்சிருக்கேன்”

“சாமி படத்தை பாக்கெட்ல வெச்சிருந்தா கிண்டல் பண்ணுவீங்க... இதென்ன புதுப் பழக்கம். சட்டை போட்டா பாக்கெட் அப்படி உப்பிட்டு பெரிசா தெரியுது. வேணாம். எடுத்துடறேன்.”

“ப்ளீஸ்ப்பா.. பின்னாடி காலண்டரெல்லாம் இருக்கு பாரேன்”

“ஏன்.. உங்க செல்ஃபோன்ல கூட இருக்கு காலண்டர்..”

“இது பாக்கெட்ல இல்லைன்னா அவன் பார்த்தா கோவிச்சுக்குவான்ப்பா”

“அவன்-னா? கிருஷ்ணனா.. ரமேஷா?”

"ரமேஷ்ப்பா"

“நெஜம்மா ரமேஷ் குடுத்தாரா.. இல்ல வேற யாராவது குடுத்தாங்களா...?”

“ஐயையோ... சாமீ.. வேண்டாம்ப்பா.. படத்தை எடுத்துடு. எதுக்கு வம்பு...”

****************************************

"சனிக்கிழமை எங்க எம்.டி. பாம்பே போறாங்க.. ரொம்ப நாளா எங்கயாவது கோயிலுக்குக் கூட்டீட்டுப் போங்கன்னு சொல்லீட்டு இருக்கில்ல?”

“ஐ! அதிசயமா இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் கூட ஊரைச் சுத்தணும்னு சொல்லாம பொறுப்பா வந்து சொல்றீங்க..?”

“ஹி.. ஹி... அதிருக்கட்டும். எந்தக் கோவிலுக்குப் போலாம்? உனக்குத்தான் முருகன் பிடிக்குமே.... திருச்செந்தூர் போலாமா?”

“முருகன் பிடிக்கும்தான். ஆனா திருச்செந்தூர் வேண்டாம். நெக்ஸ்ட் டைம் போலாம்”

“என்னப்பா.. நீ ஓகே சொல்லுவன்னு ட்ராவல் ப்ளானெல்லாம் போட்டுட்டேன். இப்ப திடீர்னு இப்படிச் சொல்ற?”

“யாரைக் கேட்டு ட்ராவல் ப்ளான் போட்டீங்க? நீங்க ஏன் திருச்செந்தூர்னு சொல்றீங்கன்னு தெரியாதா எனக்கு? அங்க போய் கடலைப் பார்த்து ரசிச்சுட்டு ஒக்காருவீங்க... கோவில்ல சாமி கும்பிடக் கும்பிட ‘போலாம்.. போலாம்னு நச்சுவீங்க...”

“ஏன் சுசீந்திரம் கோவில்ல அப்படிப் பண்ண மாட்டேனா?”

“அந்தக் கோவிலைப் பத்தி சுவாரஸ்யமான ஐதீகக் கதையெல்லாம் இருக்காம். போன மாசம் நம்ம வீட்டுக்காரக்கா போய்ட்டு வந்தாங்கள்ல.. அப்போ ஒரு கைடு எல்லாத்தையும் ரொம்ப அருமையா சொன்னாராம். அந்த கைடோட பேரு, ஃபோன் நம்பர்லாம் வாங்கி வெச்சிருக்கேன். சுசீந்திரம்தான் போறோம். என்ன ஓகே தான?”

“ஓகே.. ஓகே...”

Tuesday, March 17, 2009

வழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க!!



சமீபத்தில் எனக்கும், வேறொரு பிரபலத்துக்கும் (அப்ப நீ என்ன பிரபலமா-ன்னெல்லாம் கேட்கப்படாது!) வந்த ஒரு மின்னஞ்சலில் பின்னூட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

‘என்ன சார் நீங்களும் சரி.. உங்க நண்பர் குழாமும் சரி எப்பப் பார்த்தாலும் எங்க பார்த்தாலும் ‘ஆஹா, ஓஹோ, சூப்பர், கலக்கல், அருமை சகா’ என்பது போன்ற பின்னூட்டங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சில சமயங்களில் இது எங்களுக்கு சலிப்பைத் தருகிறது’ என்றிருந்தார் அந்தச் சகோதரி.

முதலில் அவருக்கு என் மற்றும் நண்பர்கள் சார்பாக ஒரு மிகப்பெரிய சபாஷையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனதில் பட்டதை, பட்டென்று கேட்டமைக்கு சபாஷும், எங்கள் நலனில் அக்கறையோடு உரிமையாக விமர்சித்தமைக்கு நன்றியும்.

பின்னூட்டங்கள் என்பது ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு விமர்சனம். விமர்சனம் என்பதை விடவும்.. அது ஊக்கம் தரும் ஒரு கருத்துரை என்பதே சரி. (உளர்றேன்ல?)

வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் என்கிற ஒரு மிக முக்கியமான மேட்டர் (வேறென்ன.. பணம்தான்) வலைப்பதிவாளர்களுக்குக் கிட்டாது. என்னதான் AD SENSE போட்டாலும்.. பதிவு எழுதும் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு வலைப்பதிவாளருக்கு அதிக பட்ச சந்தோஷத்தைத் தருவது.. இந்தப் பின்னூட்டங்கள்தான்.

சமீபத்தில் நண்பர் செல்வேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதைச் சொன்னார். இண்டர்நெட் உபயோகம், மின்சாரம், பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.

வேறொரு நண்பர் சொன்னார்.. ‘என்னை ஃபாலோ செய்கிற ஒவ்வொருவரும்
ஆளுக்கு மாசம் அம்பது ரூபா குடுத்தாலே எனக்கு மாசம் அஞ்சாயிரத்துக்கு மேல வருமானம் வரும்’ என்று. ‘ஏண்டா.. ஒரே நாள்ல ஃபாலோயர் லிஸ்ட் ஜீரோவைக் காமிக்கும். பர்வால்லியா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கேட்டதும் ஃபோன் ‘டொக்’!

ஆக.. எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எழுதும் பதிவர்களை வெறும் குறைகளை மட்டுமே சொல்லிச் சொல்லி அவர்களை டிஸ்கரேஜ் செய்து ஒதுக்குவானேன்?

சரி... வலைப்பதிவாளர்கள் வேறு எதற்கு எழுதுகிறார்கள்?

நிச்சயமாக ஒரு அங்கீகாரத்திற்குத்தான்.

தினமும் அல்லது அடிக்கடி எழுதுவதால் நிச்சயமாக நமது எழுத்து மேம்படுகிறது.

வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்? ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.

அந்தச் சகோதரி சொன்னது போல ‘ஆஹா.. ஓஹோ..’ பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க... சரி.. சரி.. ஒத்துக்கறேன்.. EX தாமிரான்னு உங்களுக்குத் தெரியும்..) ‘அட்லீஸ்ட் நமக்குள்ளயாவது இந்த மாதிரி போடாம உண்மையா எழுதிக்குவோமே’ என்றிருக்கிறார். ‘அப்ப நாங்க சூப்பர்னு சொல்றது என்ன பொய்யா?’ என்று கேட்டு.. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

‘நிறைகளைப் பிறரிடம் சொல்லுங்கள்.. குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்’ என்பதற்கேற்ப எல்லாரும் பார்க்கும் பின்னூட்டங்களில் நிறைகளைச் சொன்னாலும்.. தனிப்பட்ட முறையில் அலைபேசி, மின்னஞ்சல் அனுப்பி குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டுதானிருக்கிறோம். சில சமயங்களில் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம்.

வெறும் குறைகளை மட்டுமே சொல்லுவதால்... ‘ஓஹோ.. இவனுக்கும் அவனுக்கும் ஆகல போல’ என்ற பிம்பம் உருவாகும் அபாயமும் இருக்கிறது!

சினிமாத்துறையில் ப்ரிவ்யூவுக்கு சென்று படம் பார்க்கும் அனைவரும் படம் பற்றிய கருத்தை இப்படிச் சொல்லுவார்கள்...

‘இண்டர்வெல் வரை நல்ல ஸ்பீடுசார் படம்’ (இண்டர்வெல்லுக்கு அப்பறம் ஒக்கார முடியல’)

‘பாட்டு ஓக்கே’ (பெரிசா சொல்லிக்க ஒண்ணுமில்ல)

‘ஹீரோவுக்கு இது நாலாவது படம்ல சார்?’ (மொத மூணு படத்துலயே அவன் சொதப்பீட்டான். எப்படிடா அவனைப் போட்ட?)

‘காமெடி ட்ராக் படத்தைக் கொண்டுபோகுது சார்’ (அதால நீ தப்பிச்ச)

இப்படி.. சொல்ல வேண்டியதை வேறு முறையில் சொல்லிப் புரியவைத்து விடுவார்கள். அதேபோல பல பதிவர்களுக்கும் பின்னூட்டத்தைப் பார்த்தே.. ‘இவர் சொல்றது இதுதான். கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்காரு’ என்று புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு சில நண்பர்கள் வெறும் ஸ்மைலி போட்டால் ‘என்னங்க. பிடிக்கலியா? வெறும் ஸ்மைலியோட போய்ட்டீங்க’ என்று கேட்கிறார்கள். (இந்தப் பதிவுக்கு எத்தனை ஸ்மைலி வரப்போகுதோ!) சமீபமாக தோழி ஸ்ரீமதி எப்பப் பார்த்தாலும் வெறும் ஸ்மைலிதான் போட்டுப் போகிறார்!

எனக்கு ‘இந்தப் பதிவு பிடிக்கவில்லை’ என்று பின்னூட்டமிட்டு அதற்கான விளக்கத்தை மெயிலில் அனுப்பிய நண்பர்களும் உண்டு. அந்த உரிமையை நான் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறேன். அதேபோல நல்லா இல்லாததை நல்லா இல்லை என்று சொல்லக்கூடிய உரிமையை எனக்கும் எல்லாரும் வழங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்!

முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற?

பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். நிஜ விமர்சனத்தை அவர்கள் ஏற்கும் வண்ணம் - நட்பான முறையில் - எடுத்துச் சொல்லுங்கள்.

அவர்கள் எழுத்து மேம்பட்டால் அவரை விடவும் மகிழ்வது நீங்கள்தான்.

அதேபோல.. வெறும் ஆஹா ஓஹோ-வினால் ஒருவர் புகழடைய முடியும், நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷ் தான்.

நீங்கள் என்னதான் சோறூட்டி, பீரூட்டி, பாராட்டினாலும் அவரிடம் சரக்கிருந்தால் அவர் எழுதி எழுதி மேல்செல்வார். இல்லாவிட்டால் கூப்பிட்டு கூப்பிட்டு ‘ஏன் எனக்குப் பின்னூட்டம் போடல’ என்று மிரட்டி வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

இந்தப் பதிவு எழுத காரணமாயிருந்த வழுக்கை டப்பா வசந்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

Monday, March 16, 2009

அவியல் உருவான கதை

‘ஐயையோ.... கொசுவத்திச் சுருளோட வந்துட்டாண்டா’ன்னு திட்டப் போறீங்க இன்னைக்கு. சரி... மேட்டருக்கு வர்றேன்!

நான் பதிவெழுத வந்த புதுசுல (வந்த புதுசுலயா? இப்பவும் புதுசுதாண்டா நீ? இன்னும் ஒரு வயசு கூட ஆகல ஒனக்கு!) எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதற பதிவுகள தல பாலபாரதியோட விடுபட்டவை-ல பார்த்தேன். அவ்ளோ புடிச்சிருந்தது. (எவ்ளோ?)

சரி... நாமளும் இதுமாதிரி ட்ரை பண்ணலாம்னு யோசிச்சு ஒருநாள் பீரிரவில் 'ஒரு குடிகாரனின் பதிவுகள்' என்றொரு பதிவு எழுதினேன். மேட்டர் ஓக்கே.. ஆனால் தலைப்பு அவ்வளவா பிடிக்கல. ஒரு நாள் கழித்து மீண்டும் இதே கலந்து கட்டின மேட்டர்களை ‘நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்’ங்கற தலைப்புல எழுதினேன். (எனக்கு ரொம்பப் பிடிச்ச தலைப்பு இது) அது பயங்கர பிரபலமாகி ‘நீங்கள் இந்தத் தலைப்புல தொடர்ந்து எழுதவேண்டும்’ என்று எனக்கு எண்ணிலடங்கா மின்னஞ்சல்களும், அலைபேசிகளும்......... வரவே இல்லை.

தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்யனாய்... இரண்டு நாள் கழித்து மே-28ல் அவியல் என்ற தலைப்பில் எழுதினேன். அப்போது நண்பர் அம்பி-தான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டுவார். இந்த அவியலுக்கு லக்கிலுக்-கின் முதல் கமெண்ட் வந்து ஊக்கப்படுத்தியது. சரி... இது எல்லாருக்கும் பிடிக்கும் என்று எங்கோ ஒரு பட்சி சொல்ல... அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

அதன்பின்...

அவியல்-2
அவியல்-3
அவியல்-4
அவியல்-5

என்று அடுத்தடுத்த நாள் அவியலாகப் போட்டுத் தாக்கினேன்.

அதன்பின்.. இந்த தலைப்பு செட்டானாலும் ஏனோ.. (ஏன் என்று இப்போது யோசித்தாலும் ஞாபகம் வரவில்லை!) முன்குறிப்புகள் என்ற பெயரில் ஒரு சில பதிவுகள் எழுதினேன். இந்த முதல் முன்குறிப்புகளுக்குத்தான் பிரபல கவிஞர், யூத் அனுஜன்யா-வின் பின்னூட்டம் எனக்கு முதன்முதலில் கிடைத்தது என்பதை இங்கே பதிவு செய்கிறேன்! இந்த ‘முன்குறிப்புகள்’ தலைப்பும் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால் என்ன காரணத்திலோ இதையும் தொடராமல் மறுபடியும் அவியல் என்ற தலைப்பிலேயே தொடர்ந்து எழுதினேன்.

ஒரு வாசகி ‘தேதி போட்டு அவியல் எழுதுங்க.. நான் மொதல்லயே எழுதினது-ன்னு நினைச்சு இத மிஸ் பண்ண இருந்தேன்’ என்று கேட்டிருந்தார். ‘அட’ என்று காலர் இல்லாத பனியனைத் தூக்கி விட்டுக் கொண்ட நான்.. அன்று முதல் அவியலுக்கு தேதி போட்டு எழுதினேன்.

பிறிதொரு நாளில் பதிவரும் நண்பருமான நாடோடி இலக்கியன் இதே அவியல் என்ற தலைப்பில் மிக்ஸிங் மேட்டர்களைப் பதிவாக எழுதியிருந்தார். அதெப்படி என் தலைப்பை அவர் வைக்கலாம் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட நினைத்த நான்.. செலவுக்கும், அடிதடிக்கும் பயந்து.. அவருக்குப் போய் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வந்தேன். அந்த ‘அவியல்’ என்ற தலைப்பை நானென்ன ரிஜிஸ்டரா செய்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபல மாதங்களுக்கு முன் நாடோடி இலக்கியன் திருப்பூர் வந்திருந்தபோது இதுபற்றிக் கேட்டபோது ‘இல்லைங்க பரிசல்.. உங்க ‘அவியல்’ ஃபேமஸில்லையா.. அதான் அதே தலைப்புல எழுதி கூட்டத்தை கொஞ்சம் நம்ம பக்கம் திருப்பலாம்னுதான்’ என்றார். அப்போதுதான் ‘அட.. நாமளும் ரௌடிதான்.. ஜீப்ல ஏறிட்டோம்போல’ என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு முன்னரே லக்கிலுக் கூட்டாஞ்சோறு என்ற பெயரில் எழுதியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதுபற்றி வலையுலகத் திரைஞானி முரளிகண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது மூத்த பதிவர் பினாத்தல் சுரேஷ் இதே போல கலந்து கட்டி அடிக்கும் மேட்டர்களை பொதுவான தலைப்பு வைக்காவிட்டாலும் ‘உப்புமா’ என்ற லேபிளில் கலக்கலாக எழுதிவந்ததாகக் குறிப்பிட்டார்.

நானெழுதும் காலகட்டத்தில் (!?!) அண்ணாச்சி வடகரைவேலன் கதம்பம் என்ற பெயரிலும், மகேஷ் ‘கிச்சடி’ என்ற பெயரிலும் எழுத ஆரம்பித்தார்கள். நான் ஒருநாள் சனிக்கிழமை விஜய் டி.வி-யில் காஃபி வித் அனு-வில் சரோஜா பட டீம் கலாய்த்ததைப் பதிவு செய்ய நினைத்த நான்.. அதே போன்ற தலைப்பு வரவேண்டி ‘காக்டெய்ல் வித் க்ருஷ்ணா’ என்று ஒரு பதிவு எழுதினேன். அதை எழுதின உடனே வால்பையனை அழைத்து ‘இந்த காக்டெய்ல் தலைப்பை நீங்க புடிச்சுக்கோங்க’ என்று சொல்ல ‘அதேதான் நானும் நெனைச்சேன்’ என்றார் அவர். ஆனால் எலிஜபிள் பேச்சிலரான கார்க்கிதான் ‘காக்டெய்ல்’ தலைப்பை கெட்டியாகப் பிடித்து.. ‘கலக்கி’ வருகிறார்!


இதேபோன்று எழுதிவரும் வேறுசில பதிவர்களும்.. தலைப்புகளும்...

வெண்பூ – துணுக்ஸ் (பேரு வெச்சியே.. சோறு வெச்சியா என்பது போல இந்த மனுஷன் எழுதவே மாட்டீங்கறாரு!)
ச்சின்னப்பையன் - நொறுக்ஸ்
கேபிள் சங்கர் - கொத்து பரோட்டா
ஸ்வாமி ஓம்கார் - பழைய பஞ்சாங்கம்
அதிஷா – எதிர் வீட்டு ஜன்னல்
பழமைபேசி – பல்லையம்
உண்மைத்தமிழன் – இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்
டி.வி.ராதாகிருஷ்ணன் – தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்

என்று எல்லாரும் எழுதிவருகிறார்கள். சரி... நான் இந்தத் தலைப்பு வைக்க பாடுபட்ட மாதிரி வேறு யாரும் பாடுபடக்கூடாது என்று நல்ல எண்ணத்தில் நைட் பூராவும் யோசித்ததில் நம்ம நண்பர்களுக்காக சில தலைப்புகள்

முரளிகண்ணன் – மிக்ஸிங்
நர்சிம் – நர்சிம்மாயணம்
அப்துல்லா - தம்பியின் டைரிக்குறிப்புகள்
ஆதிமூலகிருஷ்ணன் (EX. தாமிரா!) – என்ன பேரு வைக்க?
அனுஜன்யா – நிலாமுற்றம் (கவிதையான தலைப்புல்ல?)
ஜ்யோவ்ராம் சுந்தர் – முன்னும் பின்னும்

சரி.... இதே மாதிரி சினிமா ஸ்டார்கள் வலைப்பதிவுகள் ஆரம்பிச்சு.. அவங்களுக்கு இந்த மாதிரி கலந்து கட்டி எழுதற பதிவுகளுக்கு தலைப்பு வேணும்னா என்ன தலைப்பு வைப்பாங்க-ங்கறத சகா – கார்க்கி, அடுத்த காக்டெய்ல்-ல சொல்லுவாரு!


.

Saturday, March 14, 2009

உதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்

நான் ஸ்கூல்ல படிக்கறப்போ (ஸ்கூலுக்குப் போறப்போன்னு சொல்லுடா) எங்க வீட்ல சொல்லுவாங்க.. ‘நீ ஒரு எக்ஸாம்பிளா இருக்கணும்டா’ன்னு. நானும் அப்படி பல விஷயங்கள்ல ‘உதாரண புருஷனா’ இருந்திருக்கேன். (என்னென்னன்னு கேட்காதீங்க!)

சமீபமா வீட்ல என்னை உதாரண புருஷனா பேசிக்கறதப் பார்த்து... ரொம்ப நொந்து போய் இத எழுத வேண்டியதாப் போச்சு.

அன்னைக்கு உமா மீராவை எழுப்பறப்போ சொல்றாங்க..

“மீரா.. எழுந்திரு.. மணி ஏழாச்சு பாரு... உங்கப்பாவே எழுந்திருச்சுட்டாரு.. நீ என்ன இன்னும் தூங்கீட்டு இருக்க?”

சின்னவ மேகா.. சரியா சாப்பிடல. அதுக்கு இப்படிச் சொல்றாங்க..

“என்ன மேகா.. ரெண்டு தோசை போதுமா? உங்கப்பாவே மூணு சாப்பிட்டாரு இன்னைக்கு..”

எங்கயாவது கிளம்பும்போது...

“ஐயையோ... உங்கப்பாவே கிளம்பீட்டார் பாரு.. சீக்கிரம்.. சீக்கிரம்”

“அப்பாவே டி.வி பார்க்காம, புக்கை எடுக்காம உட்கார்ந்துட்டிருக்காரு.. நீ என்னம்மா இப்ப போயி கத புக்கைத் தேடற?”

“அப்பாவே அந்தக் கடைக்காரன்கிட்ட ஒண்ணும் சண்டை போடாம பேசாம வர்றாரு.. நீ எதுக்கு கோவிச்சுட்டுப் பேசற?”

இப்படி நிறைய...

இந்த மாதிரி இன்னும் உங்களை என்னென்னதுக்கு உதாரணமா சொல்றாங்க? பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.

****************************

நர்சிம்-மோட பதிவு... ச்சே.. படைப்பு இன்னைக்கு வந்திருக்கற ஜூ.வி-ல 15ம் பக்கம் வந்திருக்கு. இதுவும் இன்னமும் அவர் போகப் போற உயரங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்.

கலக்கலா எழுதியிருக்காரு.. படிச்சு வயிறு வலிக்கற அளவு சிரிப்பு வந்துடுச்சு - இதெல்லாம் எனக்கு ஃபோன் பண்ணி சொன்ன நண்பர்கள் கருத்து.

நான் இன்னும் படிக்கல.

ஏன்?

இங்க திருப்பூர்ல ஜீ.வி. 10 அல்லது 11 மணிக்குதான் கடைகள்ல கிடைக்குது. இன்னொரு அரசியல் வார இதழ் 7 மணிக்கு கிடைக்குது. நாங்க 8.30 அல்லது மேக்ஸிமம் 9.30க்கு ஆஃபீஸுக்குள்ள போயிடுவோம். அப்போ கிடைக்கற புக்கை படிச்சுட்டு, அதுக்கப்பறம் ஜூ.வி வாங்குவோமா? (நான் வாங்குவேன்.. எல்லாரும்?)

இதுக்கு ஏதாவது செய்யணும் பாஸ்!

Friday, March 13, 2009

எதிரிகளைக் காதலிக்கிறேன்!


என் மூளையின் ஞாபக அடுக்குகளில் விரல்களால் துழாவி, தோன்றியவரை எழுதுகிறேன் கீழ்க்கண்ட சம்பவத்தை. சாரம் உண்மைதான். விவரிப்பில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கக்கூடும்! என் நண்பன் ஒருவேளை இதைப் படித்து.. ‘இப்படி இல்லையே’ என்று நினைப்பானாயின் அவனிடம் ஒரு மானசீக மன்னிப்பு!

நான் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் பென்சில் தகராறு. வெறும் அரைவிரல் நீளம் உள்ள பென்சிலை வைத்துக் கொண்டிருந்த நான், அவனிடம் உள்ள புதிய பென்சிலைக் கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் அடாவடியாகக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். அவன் தரவில்லை. பிடுங்க முற்பட்டேன். எப்படி எனத் தெரியவில்லை, கவனம் சிதறிய ஒரு கணப்பொழுதில் அவனது பென்சிலின் கூர் முனை என் தொடையில் வந்திறங்கியது. பதிலுக்கு நானும் குத்தியதாக ஞாபகம். இன்றும் என் வலது தொடையில் இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.

‘அழுதேன், புரண்டேன்.. ஐயோ எனக் கதறினேன்’ என்ற விவரிப்புகளெல்லாம் தேவையற்றது! ஆனால் அந்தச் சம்பவத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.

‘அந்த வயசுல உனக்கு அப்படியெல்லாம் தோணுமாடா?’

அப்போது அல்ல. அதற்குப் பின் அந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம்.. இன்றுவரை.

அந்த நண்பனிடம் நான் ‘டேய்... கொஞ்சம் பென்சில் குடுடா.. எழுதீட்டுத் தர்றேன்’ என்று கேட்டு அந்தப் பென்சில் ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாமல் அவனிடமிருந்து பிடுங்க முற்பட்டிருக்கக் கூடாது.

கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.

ஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு?

எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள்? ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்? இல்லையே...

அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. ‘ச்சே.. ஒரு சின்னப் பென்சில் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.

அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.

அந்த நண்பன் என்னை விட வசதியானவன். தினமும் முழு பென்சில் கொண்டுவர அவனால் முடியும். என்னால் முடியாது என்ற இயலாமைதான் அன்று என்னைக் கோவப்படத் தூண்டியது. ‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.

இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பது போல அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.

நானொன்றும் கடவுள் அல்லவே.. மனிதனாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்!

சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...

நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..

நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.

மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.

-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.

முடிவு?

அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.

‘நீ என்னைப் பத்தி நல்லது சொன்னாத்தான் உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்பது அன்பல்லவே. ஆகவேதான் நான் எதிரிகளையும் காதலிக்கிறேன்!

எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.

கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்! என் மீது கோபமெனும், இயலாமை எனும் சேற்றை எவரும் வீசி, அதனால் நான் தூண்டப்பட்டு முட்டாள்தனமாய் அப்படி வீசியவரை எதிரியாக நினைப்பேனாயின்.. எனக்குள் இருந்த அன்பை நான்அழித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம். அப்போது எனக்கு எதிரி நான்தானேயன்றி வேறெவருமல்ல.

ஆகவே....

ஐ லவ் யூ மை எனிமீஸ்!

Thursday, March 12, 2009

வோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...!

வோடஃபோனின் விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய கான்செப்டோடு அசத்துவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்திய விளம்பரம்... ‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’ ‘TELL THE WORLD’ என்ற கான்செப்ட். அதாவது மெசேஜூக்கு வெறும் பத்து காசுதானாம். அதுனால நீங்க ஏதாவது பகிர்ந்துக்கணும்ன்னா எல்லார்கிட்டயும் வெறும் பத்து பைசா செலவுல (தலா – பத்து பைசா எனக் கொள்க!) எஸ்ஸெம்மெஸ் பண்ணலாமாம்.

ஒரு பெண் லிஃப்டில் பயணிக்கிறார். அவருக்கு அருகில் ஒரு செலிப்ரெட்டி. செலிப்ரெட்டியின் முகத்தைக் காண்பிக்காமல் இந்தப் பெண்ணின் முகபாவங்கள் மூலமும், லிஃப்டிலிருந்து வெளியே வரும்போது அந்த செலிப்ரெட்டியை சூழும் கூட்டங்கள் மூலமும் அந்தப் பெண் அப்பேர்ப்பட்டவருடன் சிறிது நேரம் தனியாகப் பயணித்தார் என்பதை உணர்த்துகின்றனர். வெளியே வந்ததும் யாரிடமாவது இதைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று துடிக்கிறார் அப்பெண். எவருமில்லை. அப்போது விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

**

அந்த மாணவன் தனது ரிசல்ட்டைப் பார்வையிடச் செல்கிறான். அவனது உடல்மொழியிலேயே அவனொரு டோண்ட் கேர் டைப், இவன் பாஸாகப் போவதில் இவனுக்கே நம்பிக்கையில்லை என்று உணர்த்தி விடுகிறார்கள். ரிசல்டைப் பார்வையிடும் போது தொடர்ந்த ‘ஃபெயில்’களுக்கு இடையில் இவன் ‘பாஸ்’ எனக் காண்பிக்கிரார்கள். உடனே திரும்பித் திரும்பிப் பார்க்கிறான். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

**

அந்தப் பெண் குளியலறையில் பல்துலக்கிக் கொண்டே தனது எடை பார்க்கிறார். 70 என்பது போலக் காண்பித்து.. 55ல் நிற்கிறது. சந்தோஷத்தில் அப்படிக் குதிக்கிறார் அவர்.. பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

**
அசத்தலான விளம்பரங்கள் என்பதையும், எல்லோருக்கும் எளிதில் செய்தி சென்று சேர்கிறது என்பதையும் சொல்லத்தேவையில்லை. எல்லோரும் எஸ்ஸெம்மெஸ்ஸின் விலைக்குறைப்பைப் பற்றிச் சொல்கிறார்களோ இல்லையோ.... இந்த விளம்பரங்களைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! சரி... கான்செப்ட் சூப்பர். இதையே இன்னும் எத்தனை விதமாய்க் காண்பிக்கலாம்? இதோ சில யோசனைகள்...

*************

மாலை நேரம். முதல்வர் அறிவாலயத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். வெளியே ஏதோ சத்தம். மெதுவாக எட்டிப் பார்க்கிறார். ஒரு போலீஸ்காரரை எதற்கோ ஒரு பொதுஜனம் கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறார். யாருமே இல்லை அங்கே.

திடீரென்று ஒரு வழக்கறிஞர் அங்கே வருகிறார். ‘அவ்வளவுதான் அந்தக் காவல்காரர்’ என்று முதல்வர் நினைக்க, எதிர்பாராமல் அந்த வழக்கறிஞர் போலீஸுக்கு சாதகமாகப் பேசி அந்தப் பொதுஜனத்தை விரட்டாத குறையாகத் துரத்தி (விரட்டறதுக்கும் துரத்தறதுக்கும் என்னடா வித்தியாசம்?!?) போலீஸ், வக்கீல் இருவருமே ஒரே பைக்கில் தோள்மீது கைபோட்டுப் பயணிக்கின்றனர்.

முதல்வர் சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

*******************


நம்ம பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க.. தாமிரா.. இன்று முதல் ஆதிமூலகிருஷ்ணன்!) ஆஃபீஸுக்கு கிளம்பறார். ரொம்ப நாள் டைட்டா இருக்குன்னு போடாத சட்டை ஒண்ணு எடுத்து போடறார். கரெக்டா ஃபிட் ஆகுது. அப்போதான் கவனிக்கறார்.. அட! தொந்தி குறைஞ்சுடுச்சே!

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

****************

வால்பையன் ஒரு பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு நடக்கிறார்... நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்.

தூரத்தில் ஒரு தண்ணீர் பானை தென்படுகிறது. ஆர்வத்தோடு அருகில் போய் எட்டிப் பார்க்கிறார்... உள்ளே தண்ணீர் இல்லை.

ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

*********************

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக சத்தியமூர்த்தி பவன் வருகிறார் தங்கபாலு. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அவர் கட்சி அலுவலகத்துக்கு அவரே வருகிறாரா என்று கேட்காதீர்கள். வாசன், இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், போன்றவர்களோடுதான் பேச்சு வார்த்தை. டென்ஷனோடு எல்லோருக்கும் முன்னாலேயே வந்தவர்.. அறையில் ஒரு கடிதம் இருப்பதைக் காண்கிறார். எடுத்துப் பிரித்துப் படிக்கிறார்.

‘தலைவரே.. நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் எங்களுக்கு உடன்பாடுதான். நாங்கள் கட்டுப்படுகிறோம். உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம்’ என்று மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட பலரது கையெழுத்துடன் ஒரு கடிதம்!

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

*********************

பகடன் பொறுப்பாசிரியர் பா.சீனிநேசன் அந்த வழியே சென்று கொண்டிருக்கிறார். தியேட்டர் ஒன்றில் சிவா மனசுல சக்தி போஸ்டர். ‘அட.. இன்னும் ஓடுதுப்பா’ என்று சந்தோஷப் பட்டபடி அருகில் செல்கிறார். வாசலில் ஹவுஸ்ஃபுல் போர்ட்!

சந்தோஷத்தில் உடலெல்லாம் வியர்க்க சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

**************************************

இன்னும் நெறைய இருக்கு.... இப்போதைக்கு இது போதும்!

Wednesday, March 11, 2009

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!






1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க. படிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த சுஜாதா புக்கை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘புக்கை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த புத்தகத்தை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய புத்தகத்தில் ஏதாவது அடிக்கோடிடுவது, கிறுக்குவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.




7) உண்மையாகவே அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல புத்தகம் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல புத்தகத்தை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு கிடைக்கும் ராயல்டிக்கு நாம் தடையாக இருக்கிறோம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!

Tuesday, March 10, 2009

ஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009

நேற்றைய கிசுகிசுவை ஏறக்குறைய எல்லாரும் கண்டுபிடித்தாலும் ஒன்றரண்டை மிஸ் பண்ணியிருந்தார்கள்.

இதோ...

பெயரை மாற்ற விரும்பும் பதிவர் – நம்ம தாமிரா! ஆமாங்க.. அதே பேர்ல ஒரு எழுத்தாளர் இருக்கறதால பல குழப்பங்களும், இவருக்கு கிடைக்கற திட்டு அவருக்கு கிடைக்கறதாவும் தகவல். அதுனால இந்த முடிவு. உங்களுக்கு நல்ல ஐடியா தோணினாலும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி சைடில்.

2. கார்க்கி – பரிசல்

3. நர்சிம்-பரிசல் (வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்! ஸ்டிக்கருக்கான காரணம்... பதிவின் கடைசியில் காண்க!)

4. வால்பையன் – பிறந்தநாள் தோழர் அதிஷா – நன்றி சொல்ல மறந்த பதிவர் ஈரவெங்காயம். (இதுக்கு கார்க்கி, வெண்பூன்னு சொல்லியிருந்தாங்க... ஆமா... வெண்பூக்கு கார்க்கி ப்ளாக்லேபிள் ஃபுல் வாங்கிக்குடுத்தாரா என்ன? சொல்லவேல்ல?!?)

5. அதிஷா 6. கேபிள் சங்கர் 7. யெஸ். பாலபாரதி –முரளிகண்ணன்

கடைசில சொன்ன அடுத்தவார தமிழ்மண நட்சத்திரம்....? வெய்ட் அண்ட் சீ!

*************************

புதிய பார்வை ஆசிரியராக பாவை சந்திரன் இருந்தபோது நம்ம ரமேஷ் வைத்யா இசை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி.. டிசம்பர் சீசனில் எழுத வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘மாலை அஞ்சு மணிக்கு வர்றீங்களா?’ என்றிருக்கிறார் பாவை சந்திரன்.

மாலை ஐந்து மணிக்கு இவர்கள் போனபோது..

“யார் நீங்க?” என்றிருக்கிறார். நண்பர் ஹரிகுமாரோடு போன இவர் மறுபடி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ‘இசைக் கட்டுரை சம்பந்தமா...”

“ஓ! இன்னும் படிக்கல. காலைல பத்து மணிக்கு வர்றீங்களா?”

காலை பத்து மணிக்கும் அதே யார் நீங்க கேள்வி... இவர்கள் அறிமுகப்படலம் எல்லாமே அரங்கேறியிருக்கிறது. எல்லாம் முடிந்து மறுபடி அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபடி யார் நீங்க... மறுபடி அறிமுகங்கள்..

இதே தொடர்ந்து நாலைந்து நாளாக நடக்க... ஆறாவது நாள் பாவை சந்திரன் 'யார் நீங்க’ எனக் கேட்டதும் ரமேஷ் வைத்யாவின் நண்பர் ஹரிகுமார் சொன்னாராம்..

“புதிய பார்வைங்கற பத்திரிகைக்கு நீங்க ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பொருத்தம் சார். ஒவ்வொரு முறையும் ‘புதிய பார்வை' பார்த்து யாரு.. யாருன்னு கேட்கறீங்க”

பின் குறிப்பு: ‘இதை அவியல்ல போடறேண்ணா’ என்று ரமேஷ் வைத்யா அண்ணனிடம் கேட்டபோது அவர் சொன்னார்.. “ஏன்... அறிஞர்கள் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள்’னு எழுதிப் போட மாட்டியா?”


ஆச..தோச..அப்பளம்..வடை!

********************

உஷா பத்திரிகை அலுவலகத்துக்கு டி.ராஜேந்தர் வரும்போதெல்லாம் (அந்த பத்திரிகை இருந்தப்போ!) ஒரு டயலாக் சொல்வாராம்...

“சர்க்குலேஷனை மேல ஏத்தணும்யா... இப்ப இருக்கற ட்ரெண்டை மாத்தணும்யா”

– இதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

ஒரு நாள் அங்கே இருக்கும் டேபிள், சேரையெல்லாம் எடுத்து வந்து கொண்டிருந்தார்களாம்.

“என்ன நடக்குது” என்று நண்பர் ஒருவர் கேட்க.. சொன்னார்களாம்..

“அதான் சர்க்குலேஷனை மேல ஏத்தணும், மேல ஏத்தணும்னு சொன்னாருல்ல... அதான் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டை மேல-மூணாவது ஃப்ளோருக்கு ஷிப்ட் பண்றாங்க”

*******************************

அகர்வால் கண் மருத்துவமனையில் வாசல் கதவு ஒரு கண்ணின் அமைப்பில் இருக்கும். அதாவது கண் பாவையினூடே பார்வையாளார்கள் நுழைவது போல..

மருத்துவமனையைத் திறந்து வைத்தவர் அப்பல்லோ மருத்துவமனையிலன் கைனகாலஜிஸ்ட். திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...

“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”

*****************************

சென்றவாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த வால்பையனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். “ஸ்டாரா இருந்தீங்களே.. நல்ல முன்னேற்றம் இருக்கும்ல?”

”இல்ல பரிசல்... அதே நம்ம வழக்கமான ஆட்கள்தான் பின்னூட்டியிருந்தாங்க”

“ஓஹோ... பின்னூட்டத்த விடுங்க... ஆனா ஹிட்ஸ் ஏறியிருக்குமே..”

“ஹும்.. BUDS இருந்தாக்கூட காது கொடயலாம். HITSஐ வெச்சுட்டு என்ன பண்ண?”

*****************************
யாவரும் நலம் இந்தியில் 13B என்ற பெயரில் வந்திருக்கிறது. மாதவன் 13 Bயாவது ஃப்ளாட்டில் குடியிருப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். B கூட எழுதும்போது 13ன் வடிவத்தில் வருவதால்தான் என்கிறார்கள். 13 ராசியில்லாத நம்பரா என்று பேசிக்கொண்டிருந்தாபோது நம்ம தமிழ்நாட்ல வாக்குப்பதிவு மே 13தானே’ என்று நண்பர்கள் சொன்னார்கள்.

நல்லா நடக்கணும் தேர்தல் என்று வேண்டிக் கொள்கிறேன். ஏதாவது கலவரம், அசம்பாவிதம் நடந்து மே13 கருப்பு நாளாக ஆகிவிடக்கூடாதே என்ற வருத்தம்தான்.

‘யாருக்குமில்லாத அக்கறை உனக்கேன்’னு கேட்கறீங்களா...

என் பொறந்த நாள்ங்க அது!

********************************
அவியலுக்கு மேட்டர் சேகரிப்பது ஒவ்வொரு முறை கஷ்டமாக இருக்கும். ‘சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. ரமேஷ் வைத்யா போன்ற சகலகலா வல்லவர்கள் நட்பிருப்பதால் தப்பித்து வருகிறேன். முடிந்தவரை பிரபலமானவர்கள் வாழ்வென்று இல்லாமல்.. நம்மோடே இருக்கும் நண்பர்கள் சந்திக்கும் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது!

இந்த வாரம் கொஞ்சம் ஈஸியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

***********************

நர்சிம்மை ஸ்டிக்கர் பதிவர் என்றதன் அர்த்தம்:-

ஸ்டிக் = கம்பு

ஸ்டிக்கர் = ?

கம்பர்!

அதுவுமில்லாம அவர் யார்கூட பழகினாலும் டக்னு ஒட்டிக்குவார்ங்க! அதான்!

அடி விழறதுக்குள்ள ஓடிடறேன்!

************************

Monday, March 9, 2009

கிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு!


அந்தப் பதிவர் தன்னோட பேரை மாத்தற முயற்சில இருக்காராம். அவரோட பேருல ஏற்கனவே ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கறதால, அந்த பேர்ல எழுதினா பத்திரிகைகள்ல வர்றதுக்கும், தான் பிரபலமாகறதுக்கும், பின்னாடி கட்சி ஆரம்பிச்சு முதல்வராகறதுக்கும் இடைஞ்சல் வரலாம்கறதாலதான் இந்த முடிவாம்.

தன்னோட நெருங்கிய நண்பர்களுக்கு மெயிலனுப்பி, பேர் சொல்லுங்கப்பா ன்னு கேட்டுட்டு இருக்காராம்.

பேர் கேட்கும் பிள்ளை!

***************************

அந்த மகிழுந்துப் பதிவரை கரையேத்தறவர் திட்டம் போட்டு, கூட்டு சேர்ந்து கலாய்ச்சதுல ரொம்ப ப்பீலிங்க்ல இருக்காராம். ஸ்டிக்கர் பதிவர்கிட்ட ஃபோன் போட்டு ‘ரெண்டு மூணு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பிச்சுட்டாங்க பாஸ்’ன்னு புலம்பறாராம்.

நட்சத்திரம் தெரியுதுபார் மேலே!

****************************

ஸ்டிக்கர் பதிவர் குறித்த ஒரு கிசுகிசு. அவரோட நெருங்கிய நண்பருக்கு ஒரு புத்தக செட்டை அனுப்பறதா வாக்கு குடுத்திருந்தாராம். ‘நாக்கு தவறினாலும் வாக்கு தவறாதவராச்சே இவரு’ன்னு அந்த நண்பரும் காத்திருந்தாராம். கடைசில காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடற நிலைமைக்கு ஆளானப்பறம்.. ஸ்டிக்கர் பதிவர் ‘இங்க வந்து வாங்கிக்கங்க. இல்லீன்னா இல்லை’ன்னு சென்னைக்குக் கூப்பிடறாராம். நண்பர் நாள் பார்த்துட்டிருக்கறதா கேள்வி.

எல்லாரும் கேளீர்!

****************************

இந்த வாரம் மகிழுந்துப் பதிவர் இருக்கற இடத்துல போன வாரம் இருந்த பெரியாரூர் பதிவர் ஒரு தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருந்தார் இல்லையா? ‘இதுவரைக்கும் இப்படி யாருக்குமே பதிவு போட்டு சொன்னதில்லயே’ன்னு ஆச்சர்யப்பட்டு கேட்டப்போ ‘இல்ல நண்பா... நன்றி சொல்லி பதிவு போட்டேனில்லையா.. அதுல அவரு பேரு விட்டுப் போச்சு. என் மேல கோவமான்னு சாட்ல கூப்ட்டு திட்டினாரு. அதான் பிராயச்சித்தமாதான் அந்தப் பதிவைப் போட்டேன்’ன்னார். அவர் மேலும் சொன்னது..

‘உங்க ஊர்க்காரர் ரெண்டு பேரை மிஸ் பண்ணீட்டேன். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. அதுவும் பெரியார் ஊர்க்காரனான நான், பெரியார் அடிக்கடி சொல்ற வார்த்தைப் பதிவரை குறிப்பிட மறந்ததுதான் பெரிய வருத்தம்’ன்னார்.

‘அவர் ஏன் அவ்ளோ ஸ்பெஷல்’ன்னு கேட்டேன்.

“உங்க ஊருக்கு வந்திருப்போ 1500 ரூபாய்க்கு ப்ளாக் லேபிள் ஃபுல் வாங்கிக் குடுத்தது அவருதாங்க” என்றார்.

நல்லாயிருங்கப்பூ!

********************************

தோழர் ஒருத்தர் எழுதறது கொறஞ்சுடுச்சேன்னு கூப்ட்டு கேட்டேன். ஆணி அதிகம்னார். ‘இருந்தாலும் வாரத்துக்கு ஒண்ணாவது எழுதப்பா’ன்னு திட்டினேன். உடனே போனவாரம் ரெண்டு பதிவு போட்டுட்டார்.

கூப்ட்டு நன்றி சொன்னேன். அவர் சொன்னார்....

“நீங்க சொன்னா கேப்பேங்க.. ஏன்னா அதுதான் முதலாளி விசுவாசம்”

அடப்பாவி.. அப்போ நீ டொமய்ன் வாங்க க்ரடிட் கார்டுல நான் கட்டின பணத்தைத் திருப்பித்தரப் போறதில்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

********************************

எல்லார் வீட்டுக்கும் படம் காமிச்சிட்டிருக்கற அந்தப் பதிவர் ஒரு என்.ஆர்.ஐ-யை கரெக்ட் பண்ணி வெச்சிருக்காராம். ‘இங்க வா, அங்க வான்னு அலைகழிச்சு கதை கேட்கறாங்க.. ஆனா இன்னும் கன்ஃபர்ம் ஆனபாடில்லை’ன்னு புலம்பறாராம். கூடிய சீக்கிரம் கன்ஃபர்ம் ஆகி நானும் டைரக்ட் பண்ணீடுவேன்’ன்னு நம்பிக்கையோட சொன்னார். வாழ்த்துச் சொல்லீடுவோம்.

நான்தான் மொத விமர்சனம் போடுவேன்!

************************

அடிக்கடி எழுதாம விடுபட்டு, விடுபட்டுப் போற அந்த பதிவுலக தல, அடிக்கடி எழுதலீன்னாலும் பதிவுலகத்தோட தொடர்பிலயேதான் இருக்காராம். சமீபத்துல வலையுலக திரைஞானியைச் சந்தித்த அவர் ‘புனைவுகள் எழுதறப்போ பத்திரிகைகளுக்கு அனுப்பி, வரலீன்னா அப்பறமா வலையில போடுங்க’ என்கிற மிக உயர்வானதொரு அறிவுரையைத் தந்தாராம்.

‘ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க அவர் அப்படிச் சொன்னது. என்னோட புனைவுகள் அந்த அளவுக்கு தகுதியான்னு பயமா இருக்கறதால அனுப்பத் தயக்கமா இருக்கு’ என்கிறார் திரைஞானி தன்னடக்கத்துடன்.

ட்ரை பண்ணுங்க ஜி!

*****************************

அந்த பதிவுலக நண்பர்கள் வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறதாம். வரிசையாக அவர்களைச் சார்ந்தவர்கள் லாங்க்வேஜ்ஸ்மெல் முகப்பில் இருக்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சியாம். இந்த வாரம் மகிழுந்துப் பதிவரைத் தொடர்ந்து அடுத்தவாரம் அந்த இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர்...

என்னது... ஒருத்தரைப் பத்தி ரெண்டு கிசுகிசு வேண்டாமா?

சரி..சரி...

*

Sunday, March 8, 2009

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!

1869ல் பிரிட்டிஷ் அமைச்சர் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் பார்லிமெண்டில் பெண்கள் ஓட்டளிக்க உரிமை கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்தார். 1893 செப்டம்பர் 19ல் முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையைத் தந்த நாடு... நியூசிலாந்து.

1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹகெனில் நடைபெற்றது. ஜெர்மனியின் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி'யின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையைத் தெரிவித்தார். பெண்கள் தங்கள் உரிமை கோர சர்வதேச முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஒருமனதார வரவேற்றனர்.

தொடர்ந்த ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. (ஆம்.. மார்ச் 19.. எட்டு அல்ல!)

ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் துவங்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகள் எழுதின. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி.. எட்டுத் திக்கும் பரவியது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து.. இன்றளவும் மார்ச் எட்டு, சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

*****************************

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா !!!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

- மகாகவி பாரதி.



சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!

Saturday, March 7, 2009

யாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)



*****
வாஆஆஆஆஆஆஆவ்!


எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலக்கலான திகில் படம் பார்த்து!

*****

மாதவனின் கர்ப்பவதி மனைவி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமாகியும் டாக்டர்கள் திட்டவட்டமாக ஒன்றும் கூறாமல் இருக்க, மாதவனின் குடும்பமே அவள் பிழைப்பாளா, கர்ப்பம் கலைந்திருக்குமோ என்று கலங்கி நிற்க.. மாதவன் மணி பார்க்கிறார்.

மதியம் ஒன்று.

‘யாவரும் நலம்’ என்ற சீரியல் போடப்படும் நேரம். அவசர அவசரமாக அந்த சீரியல் பார்க்க வீட்டிற்கு காரில் பறக்கிறார் மாதவன்.

மனைவி ஐ.சி.யு-வில். கணவன் சீரியல் பார்க்க ஒடுகிறானா... நம்பமுடிகிறதா?

ஆம். அந்த சீரியலைப் பார்த்து, தன் மனைவி பிழைப்பாளா மாட்டாளா என அறிந்து கொள்கிறார்.

நம்பமுடிகிறதா?

நமது வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட தொலைக்காட்சியில் உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் அச்சு அசலாக – ஆள் மட்டும் வேறாக – ஒளிபரப்பட்டால் எப்படி இருக்கும்?

அதுதான் நடக்கிறது மாதவனுக்கு.

அண்ணன், அண்ணி, அவரது குழந்தைகள், தனது மனைவி, தங்கை, அம்மா- என அழகான குடும்பம். புதியதாக கடனில் வாங்கிய ஃப்ளாட்டில் குடிபோகிறார்கள். ஃப்ளாட் நம்பர் 13 B. லிஃப்ட் மாதவன் போகும்போது மட்டும் வேலை செய்வதில்லை. பூஜையறை சுவற்றில் ஆணி அடித்து சாமி படம் மாட்டமுடியவில்லை. செல்ஃபோனில் தனது படத்தை எடுத்தால் கோணல்மாணலாக வருகிறது. இதையெல்லாம் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்வுகளாகத்தான் எடுத்துக் கொள்கிறார் மாதவன்.

குடிபோன அன்றே மதியம் ஒரு மணிக்கு (அதாவது டிஜிட்டல் கடிகாரம் 13 எனக்காட்டும்போது!), சீரியல் பார்க்க அம்மா, மாதவன் மனைவி, அண்ணி உட்கார சேனல் 13ல் நிற்கிறது. வேறு சேனலை மாற்ற முடியவில்லை. சரி என்று பார்க்க, யாவரும் நலம் என்ற சீரியல் ஒரு குடும்பம் புதிய வீட்டிற்க்கு வருவதில் ஆரம்பமாகிறது.

மாதவன் ஒரு நாள் அந்த சீரியலைப் பார்க்க நேர்கையில், இவர் வீட்டில் நடந்த சம்பவங்களே அதில் காட்டப்படுவதை கவனிக்கிறார். அந்த நாளில் சீரியலில் அண்ணனாக வரும் கதாபாத்திரம் தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்.

வீட்டிற்கு வரும் மாதவனின் அண்ணன் அதே போல தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்ல திகிலடிக்கிறது மாதவனுக்கு.

தொடர்ந்து பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் கண்ணில்லாதவரின் நாய் தன் வீட்டு வாசலுக்குள் வராமல் குரைத்துக் கொண்டே இருக்க.. சந்தேகமடைந்த மாதவன் வீட்டு வாசலுக்கு வெளியே நின்று தனது செல்லில் தன்னையே படம் பிடிக்கிறார். நன்றாக இருக்கிறது. அரையடி பின்னே வந்து வீட்டிற்குள் நின்று படம் பிடிக்கிறார். கோணல் மாணலாகிறது. வீட்டிற்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் மாதவன்.

இடையிடையே அந்த சீரியல் சம்பவங்கள் அதனதன் படியே தனது குடும்பத்தில் நடக்க.. சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே குஷ்பு வேறொரு ஜாக்பாட் டைப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். மணி 1. சந்தேகமடைந்த மாதவன் அருகிலுள்ள ஷோரூம் ஒன்றிக்கு சென்று அந்தக் குறிப்பிட்ட சேனலைப் போட அது ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சிதான். சீரியல் அல்ல. மாதவனின் வீட்டில் மட்டும்தான் அது சீரியலாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தனது போலீஸ் நண்பன் துணையுடன் துப்பறிகிறார். அந்த சீரியலில் தனது குடும்பமே கொல்லப்பட்டதாய்க் காண்பிக்கப்படுவதை அறிந்த மாதவன்.. அது நடக்காமல் காப்பாற்றினாரா என்பதை வெள்ளித்திரையில் நிச்சயமாகக் காண்க.

மாதவனுக்கு அசத்தலான வேடம். ஹீரோ என்ற எந்த கிரீடமுமில்லாமல் ஒரு குடும்ப வேடத்தை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தனது வீட்டை அமானுஷ்யம் ஆட்டிப்படைக்கிறது என அறியும்போது முகபாவங்களில் அதிர்ச்சியைக் காண்பிப்பதிலாகட்டும், சீரியலில் தனது குடும்பமே சுத்தியலால் அடிக்கப்பட்டு கொலையாவதை அறிந்த அவர், க்ளைமாக்ஸ் பார்க்கும்போது அந்தக் கொலைகாரன் அவர்தான் என்பதை சீரியலில் பார்த்து, தன்னால் தன் குடும்பத்திற்கு நேரும் ஆபத்தைத் தவிர்க்கப் போராடுவதிலாகட்டும்.. மாதவன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வேறு எல்லா கேரக்டர்களும் அவரவர்கள் பணியை அற்புதமாக எந்த மிகையுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சீரியல் விஷயத்தைச் கேட்ட மாதவனின் போலீஸ் நண்பன் சிரிக்கிறார். மாதவன் அவரை நம்ப வைக்க மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சீரியலில் தம்பி கதாபாத்திரம் அவனது போலீஸ் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் காண்பிகிறார்கள். அடுத்த சீன் அந்த போலீஸ் நண்பன் மனைவிக்கு ஏதோ ஆபத்து நிகழ்வதாய்க் காண்பிக்கப்பட, மாதவன் நண்பனை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு செல்ல... அங்கே கேஸ் அடுப்பு லீக் ஆகி வீடுமுழுவதும் வாசனை!

போலீஸ் நண்பன் மாதவனிடம் சொல்கிறார்: “டேய் அந்த சீரியல்ல போலீஸ் கேரக்டருக்கு என்ன ஆகுதுன்னு டெய்லி கேட்டு சொல்டா. அந்த கேரக்டர் வர்ற நேரம் காய் நறுக்கப் போகவேண்டாம்னு சொல்டா” என்பது கலகல.


இசை – சங்கர் எஷான் லாய். திகிலாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமான இரைச்சல். ஒளிப்பதிவு படத்தின் திகிலூட்டலுக்கு நல்ல உறுதுணை புரிந்திருக்கிறது. அதுவும் 1977களில் நடக்கும் ஃப்ளாஷ்பாக் சீன்களில் காமிரா..விளையாடியிருக்கிறது. (பி.சி.ஸ்ரீராம்க! சும்மாவா!!)

நான் உமா, மீரா மேகாவோடு போனேன். குழந்தைகள் பயந்து பயந்து விழுகிறார்கள். க்ளைமாக்ஸில் உமாவும் கண்ணைமூடி, காதைமூடி உட்கார்ந்து விட்டார். குழந்தைகளை அழைத்துப் போகாவிட்டாலும், மனைவியை அழைத்துப் போங்கள். நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)


ஒரே நேரத்தில் ஹிந்தியில் 13B, என்ற பெயரிலும், தமிழில் யாவரும் நலம் என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் விக்ரம்.கே.குமார். இப்படி ஒரு கதையை 90% லாஜிக்கோடு கொண்டு சென்றது இயக்குனரின் பலம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்... கைகுடுங்க விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. ஆவி, அமானுஷ்யங்கள் குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் எந்தக் குறையும் இல்லை.

மாதவன் தனது வீட்டின் கதை என்று உணர்ந்தை அவர் குடும்பம் உணராதது ஏன்? சீரியலை தனது உறவினரோடு பகிர்ந்து கொள்ளும் சரண்யாவுக்கு மற்ற வீடுகளில் இந்த சீரியல் இல்லை என்பது தெரியாமல் போனது எப்படி, அது ஏன் லிஃப்ட், செல்ஃபோன் தொந்தரவுகள் மாதவனுக்கு மட்டும்? – போன்ற லாஜிக் ஓட்டைகளை தாராளமாக மன்னித்து படத்தைப் பார்த்து பயந்து நடுங்கி வரலாம்.

யாவரும் நலம் – யாவரும் பார்க்க.

Friday, March 6, 2009

ஒரு கதை.. ஒரு கவிதை



‘எதிர் வீட்டுப் பெண் பார்ப்பாள்
சட்டையை அயர்ன் பண்ணிப் போடு’

‘பேனா எழுதவில்லை’
அதனாலென்ன பந்தாவாயிருக்கும்
பாக்கெட்டில் குத்து.

தெருவில் பார்ப்பவர்கள்
பிரமிக்க வேண்டாமா?
அசத்தும்படி உடையணி.

நண்பர்கள் கேலி செய்வார்கள்
முதலில் செருப்பை மாற்று.
‘காசிருக்கும்போது
ஒரு ஷூவும் கூலிங் க்ளாஸும்
வாங்கிவிடு’

அனைத்தையும் கவனித்த
என் உள்மனசு
பதில் சொல்லமுடியாக் கேள்வியொன்றை
எகத்தாளமாய்க் கேட்டது

‘எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?’

-அனந்த்பாலா

(ஜூன் 1995ல் வெளியான எனது கவிதை)

***************************************************************

கைதி
அவன் ஏறி கதவைச் சாத்திக் கொண்டதும், நான் கியரை மாற்றி காரை விரட்டியபடி அவனை ஆராய்ந்தேன்.

க்ரே கலர் ஷர்ட்டை-கறுப்பு ஜீன்ஸுக்குள் திணித்திருந்தான். காலில் சாதாரண ஹவாய் ஸ்லிப்பர். கழுத்தில் ஒற்றைச் சங்கிலி. வலது கையில் பிடித்திருந்த வெள்ளை பெட்ரோல் கேனை காலுக்கடியில் வைத்தபடி – ஸ்டியரிங் பிடித்திருந்த என்னை ஏறிட்டான்.

“நல்லவேளை... நீங்க நிறுத்தினீங்க” – அவன் குரலில் அசாதாரண முரட்டுத்தனம் இருந்தது. “என் கார் உள்ளே – மண்ல நின்னுடுச்சு”

“ரேடியோ போடலாங்களா?” என்றான்.

கார் ரேடியோவை ஆன் செய்தேன்.

“தனியாவா வந்தீங்க?” கேட்டேன்.

“ஆமாங்க” என்றவன் “ஹோட்டல் எதுனா இருந்தா நிறுத்துங்க. தலை வலிக்குது. காபி சாப்பிட்டுட்டு போகலாம்”

நான் ரேடியோவை செவிமடுத்தேன்.

“கோவை ஜெயிலிலிருந்து தூக்கு தண்டனைக் கைதி ஆரிஸ்பாபு நேற்றிரவு தப்பிவிட்டான்” என்ற செய்தியோடு ஆரிஸ்பாபுவின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவனைப் பார்த்தேன்.

எனக்குள் அந்தச் சந்தேகம் துளிர்விட்டது.

ஒருவேளை.. இவன்....

“சார்... அதோ ஒரு ஹோட்டல்..” என்றான் அவன். ஹோட்டல் கேட்டினுள் செலுத்தினேன்.

எதிர் எதிராய் டேபிளில் அமர்ந்தோம். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த அவனை நோக்கினேன்.

“இப்ப வர்றேன்” என்று எழுந்தான்.

எனக்குள் எதுவோ ‘கிறீச்’சிட்டது.

இவன்... இவன்....

நான் எழுந்து அவன் கண்ணில் படாதவாறு வெளியே வந்தேன். காரை ஸ்டார்ட் செய்தபோது...

அந்த க்ரே ஷர்ட்-கறுப்பு ஜீன்ஸ்காரன் சிரித்தபடி கையில் துப்பாக்கி பிடித்து நின்றிருந்தான்.

“உன்னைத் தேடித்தாண்டா காட்டுக்குள்ள போனேன். பெட்ரோல் தீர்ந்துடுச்சுன்னு ரோட்டுக்கு வந்தா, நீயா மாட்டிகிட்ட. கட்டிங் பண்ணி, கண்ணாடி மாட்டி திருட்டுக் கார்ல வந்தா அடையாளம் மாறிடுமா? இப்ப ஓடப் பார்த்தா ‘ஆரிஸ்பாபு சுடப்பட்டு இறந்தான்’னு காலைல நியூஸ் வரும்” – என்றான்.

நான் மெனமாய்- விலங்கிற்காய் - கை நீட்டினேன்.

(ஜனவரி 1996ல் வெளியான எனது கதை)

Thursday, March 5, 2009

எண்ணிப் பார்க்கிறேன்!

“இரவு இந்த நேரத்திலும் தமிழையும், உன்னை நம்பி வரும் வாசிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டியும் நீ ஆற்றும் சேவை என்னைப் புல்லரிக்க வைக்கிறது பக்தா.. என்ன வரம் வேண்டுமென்று கேள்!”

“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”

“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்‌ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்‌ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”

******************************

ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலிடம் வகிப்பது இந்த சைட் அடித்தல்தான். கன்னியர் கடைக்கண் பார்வை பட்டால் என்ன ஆகுமென்று சொல்லாத இலக்கியமில்லை.. ஆட்டோக்கள் இல்லை!

அப்படி என்ன இதில் இருக்கிறது?

‘மனங்கவர்ந்த ஒரு பெண்ணைக் கண்டால் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் ‘அட.. சூப்பர் ஃபிகர்டா’ என்று அட்ரினல் சுரப்பிகளுக்கு அவசர தந்தி கொடுக்க, அந்தச் சுரப்பியிலிருந்து அட்ரினலின் என்ற சமாச்சாரம் பெருக, இதயம் படபடத்து.. வியர்வை பெருக..”

ஹலோ.. சுஜாதா சார்... அதில்ல நாங்க கேட்கறது.. சைட் அடிக்கறதுங்கறது வேற. நீங்க சொல்றது காதலன், காதலியைப் பார்க்கறப்போ.
சைட் அடிக்கறதுல ஒரு சௌகரியம் என்னன்னா.. நாம் சைட் அடிக்கற பொண்ணு மேல நமக்கு எந்த ரெஸ்பான்ஸிபிலிடியும் இருக்கறதில்ல. பார்த்தமா.. போய்ட்டே இருந்தோமான்னு இருக்கும்.

நான் மொத மொதல்ல சைட் அடிச்ச பொண்ணு பேரு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனந்தி. எப்போ.. அஞ்சாங்க்ளாஸ்ல! ஒரு தடவை அவ, ஸ்கூலுக்கு லீவு போட்டப்போ, என் க்ளாஸ் டீச்சர் ‘நாளைக்கு அவ வர்றப்போ இந்தக் கணக்கைப் போட்டுட்டு வரச் சொல்லு. உன் நோட்டைக் குடு’ என்று என்னிடம் சொன்னார். என் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி அவள் வீடு. வீட்டிற்குப் போனது, கை, கால் கழுவி.. என்னிடம் இருந்த ஒரே ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பவுடர் அப்பிக்கொண்டு போய் அவள் வீடு முன் நிற்க வெளியே வந்து ‘வேணாம். நான் சுப்புலக்‌ஷ்மிகிட்ட வாங்கிக்கறேன்’ என்றுவிட்டு மறுபடி வீட்டிற்குள் ஓடிவிட.... ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்’ என்று என்னை உள்ளிருந்து ஒருத்தன் கிண்டலடித்தான்.

சிறிதுகாலம் தொடர்ச்சியாக ஒரே பெண்ணை சைட் அடித்த வரலாறு என்று எடுத்துக் கொண்டால் பஸ் ஸ்டாண்டுக்கருகில் நாங்கள் நண்பர்கள் கூடும் ஒரு கடை வழியே தினமும் செல்லும் ஒரு பெண். மாநிறம். (‘போடா.. அவ கருப்பு. நீதான் மாநிறம்னு சொல்லிக்கற’ என்பான் சசி) எட்டு என்றுதான் பெயர் வைத்திருந்தோம். எட்டு போடுவதுபோல கால்களைப் பின்னிப் பின்னி நடப்பாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது. எங்கள் இடத்தைக் கடந்து செல்லும்போது அவள் பார்க்கும் பார்வை... இன்னும் கண்ணில்... இல்லை! (மஹாவிஷ்ணு வேற வரம் குடுக்காம எஸ்கேப்பாய்ட்டாரு. எதுக்கு வம்பு!) விவேக்-ரூபலா உதவி இல்லாமலே துப்பறிந்து பெயர் மகேஸ்வரி என்று கண்டறிந்தோம்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ‘பேசிப் பார்த்தாத்தான் என்ன?’ என்று தோன்ற, தொடர்ந்து போக பஸ் ஸ்டாண்டில் அவள் ஊர் டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தவளை நெருங்கி.... டக்கென்று கடந்து போய்விட்டேன். ‘என்னடா.. பேசலியா?’ என்ற நண்பனிடம் ‘ப்ச்.. பேசிட்டா இப்போ இருக்கற த்ரில்லும் போயிடும். நானென்ன அவளை லவ் பண்ணவா போறேன்? விடுடா’ என்றேன். அடுத்தடுத்த நாட்களில் அவளை அந்த வழியே காணவில்லை.

எங்கள் நண்பர் நாகராஜின் பாக்யா ஆர்ட்ஸுக்கு ஒரு ஆர்டர் சம்பந்தமாக வந்திருந்த பெண்களில் தீபா என்ற பெண் என்னிடம் உரிமையோடு பேசுவாள். அடிக்கடி தோழிகளோடு வரும் அவளை நல்ல நண்பியாக நினைத்திருந்தேன். என் நண்பன் சசி அவளைக் காதலிப்பதாகச் சொல்ல.. ‘சரிடா.. நான் பேசறேன்’ என்று சமாதானப்படுத்தினேன். ஒரு நாள் அவளிடம் சொல்ல... அவள் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாள். அடுத்த நாள் அவளது தோழி ஒருத்தி வந்து ‘தீபா உங்களை ரொம்ப நாளா சைட் அடிச்சுட்டு இருக்கா. (இப்படித்தான் சொன்னாள்!) நீங்க என்னடான்னா சசிக்காக பேசினீங்களாம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். ‘என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்க வண்டில ஒரு நாளாவது போய் காலேஜ் வாசல்ல எறங்கணும்’ என்று கோரிக்கை வைத்திருந்தாள். (டி.வி.எஸ்.சாம்ப்!) என்ன விநோதமான கோரிக்கைடா என்று நினைத்தபடி ‘வண்டில போய் எறங்கணும் அவ்ளோதானே.. இங்க வைக்கறேன். நாளைக்கு அவளை எடுத்துப் போகச் சொல்லு’ என்றேன் நான்.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டல் முன் தீபா தனது குழந்தையுடன் நிற்க நான் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பைக்கில் அவளது கணவன் வர ‘வந்துட்டார். வண்டில போய் உட்காருங்க’ என்றபோது அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்! ஒருவேளை அவளும் தன் கணவனிடம் சொல்லியிருக்கக்கூடும்!

காலச் சக்கரம் சுழல்கிறது.....

இரண்டு நாட்கள் முன் நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் என் மகள் தாவணி உடுத்தி ஆடுகிறாள். ‘இவ்ளோ சின்னப் பொண்ணுக்கு இந்த ட்ரஸ்ஸா’ என்றபடி வியக்கிறேன் நான். நாளை அவளோடு நான் நடந்து செல்கையில் கடந்து செல்லும் இளைஞர்கள் அதே கடைக்கண் பார்வையை வீசக்கூடும். எப்படி உணர்வாள் அவள்? எப்படி எதிர்கொள்வேன் நான்? எதுவும் கேட்பாளா என்னிடம்? என்ன சொல்ல வேண்டும் நான்? எத்தனை திரைப்படம் பார்த்து ‘இப்படித்தான் அவங்கப்பன் டீல் பண்ணியிருக்கணும்’ என்று வியாக்கியானம் பேசுகிறேன். என் மகளுக்கு என்ன அறிவுரை தரப்போகிறேன்? பாலகுமாரன் படி.. ருத்ரன் படி.. சொல்லலாம். ‘என்ன ஞானத்தை நீ பெற்றாய்? எனக்குச் சொல்லிக்குடு’ என்று நிற்பாளே அவள்... ‘நீங்களும் இப்படித்தானாப்பா? பொண்ணுங்களை ஃபாலோ பண்ணியிருக்கீங்களா’ கேட்பாளே....

என்ன சொல்ல?

கேள்விகள்.... கேள்விகள்.... காலம் மட்டுமே விடை சொல்லும் கேள்விகள்.

Wednesday, March 4, 2009

அவியல் 04.03.09 – 200ம் 250ம்...!




(பேட், ஹெல்மெட்டுக்கு பதிலா கீபோர்ட், மௌஸை வெச்சுட்டு ரெண்டுமூணு ஸ்டில்ஸ் எடுத்துப் பார்த்தேன். எனக்கே சகிக்கல. அதனால நம்ம சச்சின்!)


நேற்றைக்கு என் வலைப்பூவை பின்தொடரும் ஃபாலோயர் லிஸ்ட் 200ஐத் தாண்டியது. மிகவும் கௌரவமாகவும் நெகிழ்வாகவும் உணர்கிறேன். நேற்றைய பின்னூட்டத்தில் வாழ்த்திய சிலர் 250 பதிவுகள் என்று வாழ்த்தியபோதுதான் கவனித்தேன்.. இந்தப் பதிவு 250வது பதிவு. எனது 250வது பதிவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். எந்திரன் ஷூட்டிங்கில் பிஸியாம். ‘ப்ளீஸ் கிருஷ்ணா.. நான் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டுங்கறது வெளீல தெரிய வேண்டாமே” என்று வேறு சொல்கிறார். ம்ம்ம்.. என்ன செய்ய.. போனாப் போகுதுன்னு அவியலே போட்டுடலாம்னு முடிவு பண்ணி.. இதோ...!

200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும். வாட்டர் தெரபி ஈஸ் பெஸ்ட்.. யு நோ?

**********************

மகள்களின் ஸ்கூலில் ஆண்டுவிழா. முடித்து வெளியே பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தபோது எனக்கு முன்னால் ஒரு தாய், அவரது மகளை அடித்ததற்கு கணவன், ‘ஏய்.. எதுக்கு புள்ளயப் போட்டு அடிக்கற?’ என்று கேட்டார்.

“சும்மா இருங்க. உங்களுக்கென்ன தெரியும்? அந்தக் கார் எவ்ளோ வேகமா போச்சு.. இவ பாட்டுக்கு ஓடறா?”

“அதுக்கு அடிச்சா சரியாப் போச்சா?”

இந்த இடத்தில் இடைமறித்தார், கணவன் வாகனத்தை எடுத்து வர காத்திருந்த இன்னொரு பெண்.. அவர்கள் குடும்ப நண்பியாய் இருக்க வேண்டும்.

“சும்மா இருங்க. உங்களுக்கெல்லாம் நாங்க அடிக்கறதுதான் தெரியும். எதுக்கு அடிக்கறோம்னு தெரியாது. அடிச்சா அதுல எவ்ளோ பாசம் இருக்குன்னு எங்களுக்குத்தான் தெரியும்”

“அப்போ அடிச்சா பாசம் ஜாஸ்தின்னு சொல்றீங்களா?”

“நிச்சயமா”

உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..

அவரது மனைவி சொன்னார்...

“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”

அவியலுக்கு ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷத்தோடு நான் எஸ்கேப்பானேன்!

******************************

ஏர்டெல்லின் புதிய விளம்பரம் பற்றி எழுதலாம் என்றால் ஏற்கனவே இந்த வார காக்டெயிலில் கார்க்கி எழுதிவிட்டார். கலக்கலான விளம்பரம் அது. ‘இந்தக் குழந்தைய விட்டுட்டு அவங்கப்பனுக்கு டெல்லி போகாட்டிதான் என்ன?’ என்று கேட்கவைத்தது.

இன்னொரு அசத்தல் விளம்பரம்... மிரிண்டா. தன்னை, பெண் பார்க்க வந்த பையனின் அப்பா பாடத் தெரியுமா என்று கேட்க.. வீணை எடுத்து வந்து.. அழகாக சுருதி பிடித்து... டமீலென்று ‘யம்மாடி.. ஆத்தாடி..ஒன்ன எனக்குத் தரியாடி’ என்று டப்பாங்குத்து குத்துகிறார். அசினின் நடிப்பு பிரமாதம். அதைவிட, அதை மாப்பிள்ளை ரசிப்பதாக காட்டிய க்ரியேட்டிவிட்டி அதைவிட பிரமாதம். (அவரு முகத்தைப் பாருங்க... அவ்ளோ ரசிப்பார்)

அதோடு நிற்காமல்.. ‘அடுத்து ஆடத் தெரியுமான்னுதானே கேப்பீங்க’ என்றுவிட்டு எழுந்து போடுகிறார் பாருங்கள் ஒரு ஆட்டம்....

அலப்பறை!

*******************

செல்ஃபோனில் SMS அடிக்க நான் எப்போதுமே T9 டிக்‌ஷனரியைத்தான் பயன்படுத்துவேன். மிகவும் வேகமாகவும், சுலபமாகவும் அடிப்பேன். ஒரு வார்த்தையை அடிக்க, அந்தந்த எழுத்துகள் இருக்கும் எண்களை ஒருமுறை அழுத்தினாலே.. வார்த்தைகளைக் கோர்க்கும். ஒரே எழுத்துக் கோர்வையில் பல வாசகங்கள் இருந்தால்.. ஸ்டாரை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!

ஒரு க்ர்யேடிவிட்டிக்காகத்தான் குறிப்பிட்டேன். யாரும் திட்டித் தீர்த்துடாதீங்கப்பூ.. நான் பச்சப்புள்ள...

***************************

அண்ணே - எம்.எம்.அப்துல்லா அனுப்பிய சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகம். ராமானுஜம் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பல விஷயங்களை பதிவு செய்த இப்பேர்ப்பட்ட புத்தகம் என்ன விலை இருக்கும் (நம்ம புத்தி!) என்று பார்த்தால் ‘த.மு.எ.ச. 11வது மாநில மாநாட்டிற்காக எம்.எம். அப்துல்லாவும் அவரது தோழர் பிரகதீஸ்வரனும் இலவசமாக வழங்கியது.. விற்பனைக்கல்ல’ என்றிருந்தது!

அதில் இருந்து ஒரே ஒரு சொற்சித்திரம்....

பிரிவினையின்போது ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க ஒரு கூட்டம் செல்ல.. அந்தக் கூட்டத்திலிருந்த ஒல்லியான மனிதன் ‘இந்த வீட்டில் நிறைய செல்வங்கள் இருக்கின்றன. பொறுமையாக நாம் கொள்ளையடிதுப் பிரித்துக் கொள்வோம்” என்கிறான். கூட்டம் ஆர்ப்பரித்து அவனைப் பின்பற்றுகிறது. இது இங்கே இருக்கிறது.. இதன் விலை இவ்வளவு என்றெல்லாம் கூறியவாறே அவன் அந்தக் கூட்டத்தை வழிநடத்துகிறான். எல்லாம் முடிந்து அவனை ‘ஆமா.. நீ யார்?’ என்று கேட்க அவன் சொல்கிறான்.

“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்”

*************************

பதிவுலகுக்கு வந்து நான் எழுதாமல் தள்ளித் தள்ளிப் போவது இளையராஜாவுடனான எனது நெருக்கத்தைத்தான். (நேரிலல்ல.. பாடல்கள் மூலம்) ரகுமான் ஆஸ்கார் வாங்கியபோது அவருக்கு (ராசாவுக்கு) ஒரு கடிதம் மாதிரி ஒன்று எழுதி... முடிக்காமல் வைத்திருந்தேன். ‘நம்ம தமிழன் ஒரு அவார்ட் வாங்கிருக்கான்யா.. நீங்க கூப்ட்டு பாராட்டினா நல்லா இருக்கும்ல? எங்களுக்கிருக்கற சந்தோஷம் உங்களுக்கில்லையா ஐயா?” இப்படியெல்லாம் போகும் அந்தக் கடிதம். ஏனோ.. பதிவிடவில்லை. நேற்று சர்வேசனின் இந்தப் பதிவைப் படித்ததும் மிக மகிழ்ச்சியுற்றேன்!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

******************

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் பாடல்களில் யுவன் பாடிய ‘கடலோரம் ஒரு ஊரு' ஹிட். ஆனால் எனக்கு அதைவிட வேல்முருகன் என்பவர் பாடிய ‘என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது. என்ன ஒரு சோகமான பாடலுக்கு, என்னா ஒரு டப்பாங்குத்து அடி. YUVAN IS BACK என்று சொல்லத் தோன்றியது.

பலரைக் கூப்பிட்டு இந்தப் பாடலைப் பகிர்ந்துகொண்டபோது பலருக்கும் இந்தப் பாடல் இருப்பதே தெரியவில்லை. எல்லாரும் 'நெட்ல இல்லியே' என்கிறார்கள். அப்புறம்தான் பார்த்தேன் நெட்டில் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட உரலில் மட்டும்தான் கிடைக்கிறது என்றார் நண்பர் கார்க்கி.

ஒரிஜினல் கேஸட் வாங்குங்கப்பூ.. சூப்பர் பாட்டு மிஸ் பண்ணாதீங்க!

**********************
சங்கமம்ல ஏதோ போட்டியாம். பூந்து விளையாடணும்னு தோணுது. நானும் களத்துல இறங்கறேன். தலைப்பு கல்லூரியாம். கதை, கவிதை, கட்டுரை, அனுபவம், புகைப்படம், குறும்படம் எல்லாம் அனுப்பலாமாம். இதோ லிங்க்.

ஸ்டார்ட் மீஜிக்....