Tuesday, September 29, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.





ந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் ரம்யா. (இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லாமே மாற்றப்பட்ட பெயர்களே) நல்ல உழைப்பாளி. எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் மூளைக்காரி. தென்மாவட்டமொன்றிலிருந்து வந்து சகோதரியுடனும், வேறு உறவுப் பெண்கள் இருவருடனும் வசித்து, பணிபுரிந்து வந்தாள். அவளது தந்தையும் அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி இருந்தார். தாய் ஊரில்.


ஒரு ஞாயிறு காலை எட்டு மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவளது தந்தை அழைத்தார்.


“ரம்யா உங்க வீட்டுப் பக்கம் ஏதாவது வந்தாளா சார்” என்று கேட்டார். ரம்யா என் மனைவியை விட சிறியவளானாலும், என் மனைவிக்கு நல்லதொரு தோழி. “இல்லையே...” என்ற நான் “என்னாச்சுங்கய்யா” எனக் கேட்டேன். “காலை ஆறு மணிக்கே எங்கோ கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்..

நான் ‘வந்துடுவாங்கய்யா...’ என்று ஃபோனை வைத்துவிட்டு, உமாவிடம் (இது மாற்றப்பட்ட பெயரல்ல மக்களே!) ரம்யாவைப் பற்றிக் கேட்டேன்.

“கம்பெனிலயே யார் யார் கூடவோ பேசறதா பேச்சு அடிபடுது. அவங்கம்மா ஒவ்வொரு தடவை வர்றப்பவும் நீங்க இருக்கற தைரியத்துலதான் இருக்கேன்’ன்னுட்டுப் போறாங்க.. இந்த தடவை அவங்கம்மா வந்தா கூட்டீட்டுப் போகச் சொல்லிடணும்” என்று புலம்பினாள்.

இதென்ன புதுக் குழப்பம் என்று நான் நினைத்துவிட்டு, வேறு வேலைகளில் நான் மூழ்கிவிட, கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து என் மனைவியின் அலைபேசி பிஸியாகத் தொடங்கியது.

“ரம்யா காலைல போனவ, இன்னும் வரலியாம்.. ஒனக்குத் தெரியுமாக்கா..”

“ரம்யா அவகூட வேலை செய்யற ஒரு பையன்கூட கொஞ்ச நாளா அங்கங்க பேசிகிட்டிருந்த பார்த்திருக்காங்க”

“இவ கழுத்துல இருந்த செய்ன் பத்து நாளா இவகிட்ட இல்லை தெரியுமா? அத எங்கயாவது அடகு வெச்சு, காசு வாங்கிட்டு அவன்கூட போய்ட்டாளோ..?”

“இன்னைக்கு அவளோட அக்கா ஊர்லேர்ந்து வர்றா. அவ ஒருத்திக்குதான் இவ பயப்படுவா... அவளுக்கு பயந்துதான் எங்கயோ போய்ட்டா போல...”

இப்படியாக ஆளாளுக்கு அவர்கள் கேள்விப்பட்டதை வைத்து என் மனைவியிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

விசாரித்ததில் மேலே சொல்லப்பட்ட எல்லாமே உண்மைதானெனத் தெரியவந்தது. அந்த அடகு மேட்டரைத் தவிர. அடகு வைத்ததற்கு மட்டும் சரியான ஆதாரம் சிக்கவில்லை.

பனிரெண்டு மணிக்கு, விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.... அவளது அப்பா மிகுந்த பதட்டத்தோடு வந்தார்.

“சார்... ரம்யா ஒருபையன் கூட தெனமும் பேசிகிட்டிருந்தான்ங்றாங்க. கொஞ்சம் விசாரிங்களேன்...”

அலைபேசியிலேயே விசாரித்தேன். அவன் பெயர் குணா. அடுத்த அதிர்ச்சி - அவன் நான்கு நாட்களாக பணிக்கு வரவேயில்லை! ஞாயிறென்பதால் அவனது அலைபேசி எண் பற்றிய தகவலும் யாரிமிருந்தும் பெற இயலவில்லை.

இதென்னடா வம்பாக இருக்கிறதே என்று நினைத்தவாறே அவரை சமாதானப்படுத்தி அவரது அறையில் விட்டுவிட்டு (ரெண்டு மணிநேரத்துல வர்றேன். நீங்க பதட்டப்படாம இருங்க) என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இதுபோன்ற பதட்டமான சமயங்களில் எல்லாம், சம்பந்தப்பட்ட சம்பவத்தை முழுதும் மறந்து அரை மணி நேரம் கேரம் போர்ட் விளையாடவோ, க்ரிக்கெட் பார்க்கவோ செய்துவிட்டு மீண்டும் தெளிவான மனதுடன் அதைச் சந்திப்பது வழக்கம். அதேபோல அன்றைக்கும் வீட்டுக்குச் சென்றேன். உமாவைக் கலவரப்படுத்தவேண்டாம் என்பதால் ஒன்றூம் சொல்லவில்லை.

அரைமணி நேரம் மனதை வேறு விஷயங்களில் செலுத்திவிட்டு, பிறகு குணாவின் விலாசம் கண்டுபிடித்து - அவன் வீட்டுக்குப் போனேன்.

அவன் பாட்டி இறந்து நான்கு தினங்களாகி இருந்தன. அதற்காகத்தான் லீவு போட்டிருக்கிறான் அவன்!

ரம்யாவைப் பற்றிய பேச்சை முதலிலேயே ஆரம்பிக்காமல், “இந்த வழியா வந்தேன்பா.. உங்க பாட்டி தவறீட்டாங்கன்னாங்க. அதான் விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தேன்” என்று பேச்சுக் கொடுத்தேன்.

கிளம்புமுன் எதேச்சையாகக் கேட்பதுபோல “கம்பெனிலேர்ந்து யாராவது வந்தாங்களா?” என்று கேட்டேன்.

“இல்லை” என்றவன் ”சார்.. ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்றான். ”என்னப்பா” என்றேன்.

“என்கூட வேலை செய்யற ரம்யா, அவ செய்ன் அறுந்துபோச்சுன்னு பத்த வைக்க எங்கிட்ட குடுத்தா சார். என் பக்கத்து வீட்லயே ஆசாரி இருக்காருங்கறதால நானும் வாங்கி அவர்கிட்ட குடுத்தேன். அவ நேரம் பாருங்க.. அடுத்த நாள், அந்த ஆசாரி - ஊர்ல அவர் வீடு மழைல இடிஞ்சிடுச்சுன்னு சொல்லாம கொள்ளாம ஊருக்குப் போய்ட்டாரு. அவ டெய்லி என்கிட்ட வந்து ‘அக்கா வர்றதுக்குள்ள வேணும்’னு சண்டை போட்டுட்டே இருந்தா. அதுக்குள்ள எங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு லீவு போட்டுட்டேன். அந்த செய்னை வாங்கித் தர்றேன்.. குடுத்துடறீங்களா சார்” என்றான்.

“சரி.. வாங்கிட்டு வா” என்று சொல்லி, அவன் அந்த ஆசாரி வீட்டுக்குப் போக நான் காத்திருக்க ஆரம்பித்தேன்.

அப்போது ஒலித்தது என் அலைபேசி.

உமாதான்.

“ஏங்க... ஒண்ணுமில்ல. ரம்யா அந்தப் பையன்கிட்ட அவ நகையை பத்தவைக்க குடுத்திருக்கா. அக்கா வர்றதுக்குள்ள வாங்கணும்னு அந்தப் பையன் வீட்டுக்கு ஃப்ரெண்டுகூட போலாம்னு ஹாஸ்டல்ல இருக்கற அவளோட ஃப்ரெண்டு ரூமுக்கு போயிருக்கா, அவ ஃப்ரெண்டு நைட் ஷிப்ட் முடிச்சு வந்ததால, பத்து மணி வரைக்கும் தூங்கீட்டு போலாம்டின்னு சொல்லிருக்கா. இவளும் படுத்து நல்லா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிட்டா. இப்பதான் எழுந்திருக்காங்க. மணி ரெண்டாச்சுன்னு பயந்து வீட்டுக்கு வந்துட்டாங்களாம். வேற ஒண்ணுமில்லைங்க. அவங்கப்பா உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க?”

“ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்தேன். இதோ வந்துடறேன்”

நான் ஃபோனை வைத்ததும் குணா சங்கிலியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தான்.

“மறக்காம குடுத்துடுங்க சார். பாவம் ரம்யா” என்றான்.

சிரித்தபடி விடைபெற்றேன் நான்.


.

Friday, September 25, 2009

அவியல் 25.09.09

.

ரம்ப ட்ராமாக்கள் முடிந்து ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர். (விஜய் டி.வி) எப்போதுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகளை, இந்தக் கட்டத்தில் இருந்து பார்க்கத் துவங்குவது என் வழக்கம். இந்த முறையும் ஏமாற்றவில்லை. நேற்று முன்தினம் துள்ளலான ஆட்டத்தோடு ‘மச்சான் மீசை வீச்சருவா’ பாடிய சின்னப் பெண்ணும், நேற்றைக்கு ‘எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று பாடிய ச்சின்னப் பையனும் கண்ணிலேயே நிற்கிறார்கள். அதுவும் நேற்று பாடிய சிறுவனின் (ஆறு வயதிருக்கலாம்) ஞாபக சக்தியும், மூச்சு விடாமல் பாடிய விதமும், எக்ஸ்ப்ரஷனும் – ப்பா.. வாய்ப்பே இல்லை!

புதன் ஒரு பெண் பாடும்போது சரணத்தை மறந்திவிட, சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த அவள் அப்பா எனை மிகக் கவர்ந்தார். ‘போனாப் போகுதும்மா... விடு’ என்ற முக பாவனையோடே அமர்ந்திருந்தார் அவர். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் அப்பாக்களை விட, அம்மாக்களில் முகத்தில் தெரியும் படபடப்பு தாய்மையை உணர்த்துகிறது.

நடுவர்களில் மனோ கலக்குகிறார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக அமர்ந்து, மனதுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பது எவ்வளவு சுகமென்பதை தன் உடல்மொழியிலேயே வெளிப்படுத்துகிறார் அவர். திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.

*****************************

ன் ‘ஒன்றும் விடாத தம்பி’ ஒருத்தன் சொன்னதிது. சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இது. அவனது கல்லூரியில் பேச்சில் சிறந்தவர்களை, சென்னைக்கு அழைத்திருக்கிறார்கள் ஒரு கட்சியினர். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கான தேர்வாம். போய்விட்டு வந்தவர்கள் சொன்னதிலிருந்து-இவன் சொன்னது: பெரிய மண்டபமொன்றில் தொண்டர்களுக்கு முன் இவர்கள் பேச வேண்டும். கட்சி நிர்வாகிகள், சில மந்திரிகள் எல்லாரும் இருப்பார்களாம். இவர்கள் கட்சித் தலைமையைப் புகழ்ந்தால் ஐநூறு. எதிர்க் கட்சிக்காரர்களை திட்டும்போதெல்லாம் ஆயிரம் என்று அள்ளி வீசுகிறார்களாம். அதுவும் பெண் பேச்சாளர்களின் வசவுப் பேச்சுக்கு ஆன் த ஸ்பாட் பேமெண்ட்!

அந்த மாதிரி ஒரு நிர்வாகி, வேட்டி மடிப்பிலிருந்து காசை எடுக்கும்போது, இடுப்பில் வைத்திருந்த க்வாட்டர் பாட்டில் மேடையிலேயே விழுந்து உடைந்ததாம். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த மாணவன், சமயோசிதமாக ‘பாருங்கள், மது ஒழிப்பை மேடைக்கு வந்து செய்து காட்டிக் கொண்டிருக்கிறார் நம் கட்சிக்காரர்’ என்றதற்கு எக்ஸ்ட்ராவாக கைதட்டி ஆரவாரித்து அனுப்பினார்களாம்.

நல்லா இருங்கப்பூ!


*************************************

நண்பன் அறிவழகனுடன் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். 101, 501 என்று மொய் வைப்பார்களே, அதற்காக ‘சில்லறை ஒரு ரூவா இருக்காடா’ என்று கேட்டேன்.

அறிவு சொன்னான்:

“நீ போய் ஒரு ரூவா வெச்சா நல்லாயிருக்காதுடா.. மினிமம் அம்பது ரூவாயாவது வை”

**************************

ஜெயா - கலைஞர் டி வி செய்திகள் எப்படியோ அப்படி ஆகிவிட்டன தினமலர், தினத்தந்தி செய்திகள். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் எழுதுவது வாடிக்கையாடிவிட்டது.

கோவையில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பள்ளி மாணவி தன் கையில் 'Give everyone a chance 2 change' என்று எழுதியிருந்தார். அதை ஒரு பத்திரிகை ‘மாறுவதற்கு எல்லார்க்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என்று (2 என்பது குறுஞ்செய்திமொழியில் To எனக் கொள்ளலாம்) குறிப்பிட்டிருந்தது. சரி. ஆனால் இன்னொரு பத்திரிகை “எல்லாருக்கும் மாறுவதற்கு இரண்டு வாய்ப்பு தரவேண்டும்” என்று மொழிபெயர்த்திருந்தது!

அதைவிடக் கொடுமையை கீழே ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.



ஐயாயிரம் என்றொரு பத்திரிகையும், பத்தாயிரம் என்றொரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதைவிட, ஸ்கேனிங்கை ஜூம் செய்து பாருங்கள். ஒன்று இந்திராணி என்று பெயர் சொல்ல, இன்னொரு பத்திரிகை இந்திராதேவி என்கிறது.

அதுசரி, நமக்கெதுக்கு இந்தக் கவலையெல்லாம்? பேப்பரைக் கிழித்து பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்!

********************************************

வேட்டைக்காரன் பாடல்களில் ‘புலி உறுமுது’வும், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’வும் இன்னும் எத்தனை நாள்களுக்கு குழந்தைகளில் தேசியகீதமாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. ‘என் உச்சி மண்டைல’ டான்ஸ் தமாக்கா. விஜய் ஆண்டனி தன் முந்தைய பாடல்களின் சாயலில்லாமல் இசையமைக்கவே மாட்டேனென்பதை தன் ட்ரேட் மார்க்காகக் கொண்டிருக்கிறார்.

‘கண்டேன் காதலை’ (வித்யாசாகர்) படத்தில் சுரேஷ் வாட்கர் பாடிய ‘நான் மொழி அறிந்தேன்’ பாடலை இரவு அமைதியாய் இருக்கையில் கேட்டுப் பாருங்கள். அதே படத்தில் ‘சுத்துது சுத்துது’ பாடலில் ஹரிஹரன் புல்லாங்குழலோடே சேர்ந்து பாடும் ஆலாவைப் பாடிப் பாருங்கள். க்ரேட்!


*********************


.

Thursday, September 24, 2009

கார்க்கி.....

நேற்றைக்கு என் நண்பன் கார்க்கிக்கு பிறந்தநாள். AM, PM குழப்பத்தால் முந்தினநாள் நள்ளிரவில் ஒலிக்க வேண்டிய அலாரம் நேற்று மதியம்தான் ஒலித்து எனக்கு நினைவூட்டியது.

இரவு திடீரென, கலைஞரும் அவரைச் சுற்றி கவிஞர்கள் அமர்ந்து கவியரங்கம் பாடுவதும் நினைவுக்கு வரவே, படுக்கையிலிருந்து குதிகாலை கீழ்வைத்திறங்கி, அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாய் என் நண்பனுக்காக எழுதிய கவிதையிது. கவிதையில் உயர்வு நவிற்சி இருக்கலாம். பொருத்தருள்க!


*********************************





னக்கான விஷயம் எல்லாவற்றையும்
எப்போதுமே தள்ளிப் போடுகிறேன் நான்.
உனக்கான வாழ்த்தையும்
ஒருநாள் தள்ளிப் போட்டது
உன்னையும் நானாய் எண்ணியதால்தானோ?

எனக்கு ஏழுலட்சம் வாசகர்கள்
என்று நான் சும்மா சொல்வதுண்டு. – ஆனால்
உன் ‘ஏழு’வுக்கு லட்சம் வாசகர்கள் என்பதை
ஊரறியும் நண்பா!

ஆம்.. ஆறும் அஞ்சும் உனக்குப் பிடித்தாலும்
எட்டுத் திக்கும் உனைக் கொண்டு சேர்த்ததென்னவோ
‘ஏழு’தானே?

முட்டி முட்டி என்ன எழுத என்று நாங்கள்
யோசித்துக் கொண்டிருக்க – நீ
புட்டிக் கதைகள் எழுதி எங்களை
முந்திக் கொண்டிருக்கிறாய்.

எழுதப் பொருளேதுமின்றி
எனைப் போன்றோர் தவித்திருக்க
எழுதப் பொருளில்லை என்பதே - உனக்கு
எழுதுபொருளாகிவிடுகிறது.

பலர் சொல்லலாம்
உன்னை மொக்கையென்று
நான் சொல்வேன் நீ விடாதே
உன் நம்பிக்கையென்று!

வாரத்தில் ஆறுநாள் ஹைதையில் இருப்பாய்
மீதிநாள் சென்னையில் இருப்பாய்
எல்லா நாளும்
எங்கள் இதயத்தில் இருப்பாய்.

உனக்கு
இணையத்தை கையாளவும் தெரியும்
நண்பர்களின்
இதயத்தைக் களவாடவும் தெரியும்.


இசையென்றால் உனக்கிருக்கும்
ஆர்வம் நானறிவேன்.
நண்பர்களுக்கு எவரிடமிருந்தாவது
வசையென்றால் உனக்கு வரும்
கோவமும் நானறிவேன்.

எனக்கு நாசரை மிகப் பிடிக்கும்
உன்னையும் மிகப் பிடிக்கும்
நாசர் வில்லனாய் தன் பெரிய மூக்கில்
குத்துவாங்கிப் பிரபலமானார்.
நீ உன் பெரிய மூக்கில்
முத்தம் வாங்கிப் பிரபலமானாய்.

ஆதி
கேமராவையெடுக்கும்போதெல்லாம்
உன்னை நினைத்துக் கொள்கிறார்.
நீ நடித்தால் மட்டும்
குறும்படம் வெறும் படமாய் இல்லாமல்
பெரும் படமாய் ஆகும் ரகசியமென்னவோ?

‘ஆடுவது கண்டு விஜயின் ரசிகனானேன்’
என்பாய் நீ.
பல நேரங்களில் நீ
ஆடாமல் இருப்பதால்தான்
உன்னையும் நாங்கள் ரசிக்கிறோம்.

எவரோடும் சண்டைபோடத்
தயங்காதவன் நீ.
ஆனால் உன்னை அடக்கும் ஆயுதம்
அன்பென்பதை ஒரு சிலரே அறிவர்.


நான்
சமீபத்தில் மிகச் சந்தோஷப்பட்டது
கார் வாங்கியதற்குத்தான்.
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY!


.

Wednesday, September 23, 2009

ஒன்..டூ..த்ரீ................

1: இணையத்தில் ‘கட்டுக் கதையாக’ உலவும் ஒரு செய்தி.... (False News?)


பரா வின்ஃப்ரே (Opera Winfrey)வின் டாக் ஷோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.




டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர். உலகப் புகழ் பெற்ற Tommy தயாரிப்புகளின் மூலகர்த்தா.

ஓபராவின் டாக் ஷோ ஒன்றில், டாமியைப் பேட்டி காண்கிறார் அவர்.

ஓபரா கேட்கிறார். “இனவாதத்தை தூண்டும் விதமாய், உங்களைக் குற்றஞ்சாட்டி நீங்கள் பேசியதாக சில அறிக்கைகள் வந்ததே அவை உண்மையா.. நீங்கள் அப்படிப் பேசினீர்களா?”

அவர் சொன்னதாய் வந்த அறிக்கையையும் படிக்கிறார். அது இதுதான்..

“'If I'd known African-Americans, Hispanics, Jewish and Asians would buy my clothes, I WOULD NOT have made them so nice. I wish these people would NOT buy my clothes, as they are made for upper class white people”


டாமி சொல்கிறார்: “ஆம். நான் அப்படிச் சொன்னேன்”

ஓபரா உடனே “ ஷோவை விட்டு வெளியே செல்லுங்கள்” என்று அவரை வெளியேற்றி விடுகிறாராம்!

எப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!

** ** ** ** ** **
2:

ஜோஹன்னஸ்பெர்குக்கும், லண்டனுக்கும் இடையில் பறக்கும் ப்ரிடிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது இது...

50 வயதுள்ள ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கறுப்பர் ஒருவருக்கு அருகில் அவருக்கு சீட். பெண்மணியால் பொறுக்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.

பணிப்பெண்: “சொல்லுங்கள்... என்ன விஷயம்?”

வெள்ளைக்காரப் பெண்மணி: “என்ன விஷயமென்று தெரியவில்லையா? என்னை எங்கே அமரவைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இப்படி ஒரு விலக்கப்பட்டவரோடு பயணிக்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உடனே எனக்கு வேறு சீட் ஒதுக்குங்கள்”

பணிப்பெண் அவரைப் பொறுமையாய் இருக்கச் சொல்லிவிட்டு விமான கேப்டனிடம் பேசிவிட்டு வருகிறேனெனச் செல்கிறாள்.

சிறிதுநேரத்திற்குப் பிறகு வந்து “மன்னியுங்கள் மேடம்.. எகானமி க்ளாஸில் எல்லா சீட்களும் நிரம்பி விட்டதால் பிஸினஸ் க்ளாஸிலாவது சீட் இருக்குமென பார்க்கப் போனேன். அங்கும் ஒரு சீட்டும் இல்லை.”

வேகமாக இடைமறிக்க வந்த அந்தப் பெண்மணியைக் கையமர்த்தி நிறுத்திய பணிப்பெண் தொடர்கிறாள்:

“ஆனாலும் இப்படி ஒரு பயணியோடு பயணிக்கும் கஷ்டத்தைக் கொடுக்க எங்கள் கேப்டனுக்கு விருப்பமில்லை.. எனவே” என்றவள் சொன்னது கருப்பரின் பக்கம் பார்த்து! “சார்.. தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”

சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!

**************************
3:


னக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர். தனியார் நிறுவனத்துல குறிப்பிடத்தக்க பதவில வேலை செய்யறாரு. (பாருங்களேன் முரணை... அந்தப் பதவியைக் குறிப்பிடாம-குறிப்பிடத்தக்க பதவி-ன்னு சொல்றேன்...!)

வேலை சார்பாக அரசு அலுவலகங்களுக்கு போறதும், வேலை சம்பந்தமா பலருக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதும் அவர் வேலைகள்ல அடக்கம். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, அதுக்கான அதிகாரியை தொடர்ந்து சந்திச்சிட்டு இருக்காரு நண்பர். வேலை முடியற நேரம். லஞ்சமா ஐந்திலக்கத்தைத் தொடும் ஒரு தொகையைப் பேசி முடிச்சிருக்காங்க.

பேசிவெச்சுட்ட ஒரு நாள்ல இவர் அங்க போறாரு. தேநீர் உபசரிப்பெல்லாம் முடிஞ்சு, ‘எங்க வெச்சு தர?’ன்னு கேட்டிருக்காரு இவர். ‘இங்கயே கொடுங்களேன்’னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி.

இந்த நேரத்துல அந்த நண்பரை நான் ஃபோன்ல கூப்டிருக்கேன். என் நண்பர் ஃபோனை எடுக்காம பாக்கெட்ல கையை விட்டு காசை எடுக்க முயற்சி பண்ணிகிட்டிருந்தார். திடீர்னு அந்த அதிகாரி எழுந்து ‘மொதல்ல வெளில போங்க... இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்கக் கூடாது’ன்னு ஒரு தினுசா கத்தி இவரை வெளில விரட்டிருக்காரு.

இவர் வெளில வந்து, என்னான்னு புரியாம வேறொரு மத்தியஸ்தர் மூலமா அந்த அதிகாரிகிட்ட பேச, தன்னோட நண்பர் ஒருத்தரை அனுப்பி, பணத்தை வாங்கிகிட்டு வேலையை முடிச்சுக் குடுத்துட்டாரு.

இது நடந்து ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்கன்னு நண்பர் கேட்க, அவர் சொன்னது சுவாரஸ்யமான விஷயம்:

அவரோட நோக்கியா ஃபோன்ல எனக்கு அவர் ஸ்பெஷலா ஒரு ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு. Chat Alert ங்கற அந்த டோன் ஒரு மாதிரி விட்டு விட்டு அடிக்கும். அன்னைக்கு நான் கூப்டப்ப, அடிச்ச ரிங் சத்தத்தைக் கேட்டு அந்த அதிகாரி, ஏதோ ரெகார்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருக்காரு. அதான் விஷயம்!

‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!

** ** ** ** ** ** ** ** ** **

டிஸ்கி: மொத ரெண்டு மேட்டருமே இனவாதம்ங்கறதப் பேசுது. அது ரெண்டுக்கும் மூணாவதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கற ஏதோ மூணு விஷயங்களை குறிச்சு வெச்சு, அப்பப்ப எழுதிட்டிருந்தேன். அது திடீர்னு நின்னுபோச்சு. (நீ எழுதறதே நின்னுபோச்சே.. இது மட்டுமான்னு கேட்கறீங்கதானே?) ஒன் டூ த்ரீன்னு தலைப்பு வெச்சுத் தொலைச்சாச்சு. அதுனால இந்த மூணாவது மேட்டர். அதுமில்லாம இந்த மூணாவது விஷயம் ரொம்ம்ம்ம்........ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டே இருந்தது. அப்பாடான்னு இருக்கு இப்பத்தான்!



.

Tuesday, September 22, 2009

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது...

ஆம் நண்பர்களே..

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு படம் வருகிறது. இரண்டு மணிநேரம் அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் அவன் என்ன சொல்கிறான் என்று அலசி ஆராய்கிறீர்கள்.

ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். ஒரு பெயர், வெறும் பெயரல்ல.. அது குறியீடு என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். சாதீயம் என்கிறீர்கள். கொண்டை தெரிகிறது, பூணூல் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.

எங்களுக்கு இடைவேளையில் பப்ஸ் இருக்குமா, இல்லை முறுக்குதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.

படம் முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே படம் தந்த சில நல்லுணர்வுகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், திரைப்படமும் சொல்வது என்ன என்று யோசித்து யோசித்து படம் எடுத்தவன், நடித்தவன், பார்த்தவன், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....

எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் என்ன நெகடீவ் இருக்கிறது என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.

ஒரு நடிகன் சொல்லி கேட்டுவிடக் கூடிய நிலையில்தான் நான், நீங்கள், நாம் இருக்கிறோம் என்று நீங்கள் முடிவு செய்யக் காரணியாய் இருந்தது எதுவென எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு படம் வந்ததும் நாளையே நான் குறிப்பிட்ட பிரிவினரை தீவிரவாதியென்றால் என்னைவிடக் **யன் யாருமிருக்கப் போவதில்லை. அப்படியிருக்க அந்த நடிகன் சொல்லாத விஷயத்தை நீங்கள் உரைபோட்டு விளக்கிச் சொல்லி இப்படி ஊரையே பேச வைத்திருப்பது எவ்விதத்தில் நியாயமாய்ப் படுகிறது உங்களுக்கு?

நீங்கள் தாக்கி எழுதுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில் வைத்திருக்கிறீர்கள். எங்களிடம் இருப்பதில்லை. பதில் கொடுக்க முடியாததற்கு ‘இதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாது’ என்று சொல்லிவிடுவீர்கள். நாங்கள் எல்லாவற்றிற்கும் பதில் தேடிக் கொண்டே இருப்போம். கிடைப்பதற்குள் நீங்கள் எங்களுக்கு முன்னே போய்விட்டிருப்பீர்கள். எப்போதுமே உங்கள் சிந்தனைகளையும், வேகத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருப்பதே எங்களுக்கு வேலையாகிப் போய்விட்டது!

நீங்கள் எழுதிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லையெனினும் இப்படியெல்லாம் சிந்திக்க/எழுத முடியுமாவென அதையும் ரசித்துப் புளகாங்கிதமடைந்து அடுத்த படைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.


நாங்கள் பொதுமனிதர்கள். எங்களுக்குத் தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுத்து, கெடுத்துவிடாதீர்கள். அடுத்த வாரம் துவரம் பருப்பு விலையேறுமா, சர்க்கரை இதே விலையில்தானிருக்குமா என்பது தொடங்கி பல கவலைகள் எங்களுக்குண்டு. முடிந்தால் அதைத் தீர்க்க வழிசொல்லுங்கள்.

என்ன செய்ய.. நாங்கள் சராசரிகள்.

:-(


.

Monday, September 21, 2009

பட்டறை அனுபவம் - பார்ட்-2

ற்கனவே ஏழேமுக்கால் லட்சத்துக்கு கொஞ்சம் கம்மியான என் வாசகப் பெருமக்களிடம் அளித்திருந்த வாக்குப்படி, இன்றைக்கு சிறுகதைப் பட்டறைக்கு முன்னும், பின்னும் இடையிலும் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு இது....

*******************

சிறுகதைப் பட்டறைக்கு சனிக்கிழமை இரவு திருப்பூரிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு (நாலுபேரெல்லாம் குழுவாடான்னு கேட்கப்படாது!) கிளம்புவது என்று முடிவான பின், இரயிலேறுமுன் சிறு ஆலோசனைக் கூட்டம் கூட்டுவது என்று முடிவானது. அதன்படி திருப்பூரின் மிக முக்கியமான ஹோட்டல் ஒன்றில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் வெயிலான், முரளிகுமார் பத்மநாபன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

கோவையிலிருந்து இரயிலில் வந்துகொண்டிருந்த அண்ணாச்சி வடகரைவேலன் கேட்டிருந்த முக்கியமான ஆவணம் ஒன்றை நாங்கள் கேட்காமலே வரவழைத்துத் தந்த செந்தில்நாதனின் தம்பிக்கு நன்றி!

*******************

சென்னையில் அதிகாலையில் வந்திருந்து எங்களை வரவேற்றார் கார்க்கி. அவர் வீட்டில் குளித்து உடைமாற்றி ஹோட்டல் நோக்கி பயணிக்கும்போது முன்சென்ற ஆட்டோ ஒன்றில் ‘பெண்IN திருமண வயது’ என்றெழுதியிருந்தது. INஐ மட்டும் ஆங்கிலத்தில் எழுதியதேன் என்று வியந்து பேசிக் கொண்டு வந்தபோது செந்தில்நாதன் அவர் படித்த ஓர் ஆட்டோ வாசகம் சொன்னார். அசத்தலாக இருந்தது..

“பெண்ணின் திருமண வயது – அவள் தந்தையின் வருமானத்தைப் பொறுத்தது”

***************************

குறித்த நேரத்துக்கு முன்பே பட்டறைக்குப் போக வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அது ‘மு’வுக்கு பதில் ‘பி’.

அதன்படி சென்று சேர்ந்தபோது பதிவர் முரளிகண்ணன், கேபிள்சங்கர் எல்லாம் அமர்ந்து நுழைவுக்கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். எந்த உருவத்தைப் பார்த்தால் பயந்து பணம் கொடுத்து விடுவார்கள் என்று உணர்ந்து அதன்படி ஓங்குதாங்கான ஆட்களையே அமர்த்தியிருந்த சிவராமன் அண்ணாவின் சமயோசிதம் பிரமிக்க வைத்தது! (அந்த நேரம் அக்னிபார்வை வந்திருக்கவில்லை என்பதியறிக)

‘அக்னிபார்வைக்கும், எனக்கும் ஒரே டிக்கெட்டா?’ என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது எனக்கு மட்டுமே கேட்டது! (புரியாதவர்களுக்கு: அக்னிபார்வையின் (வினோத்) பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டபோது ஸ்டுடியோக்காரர் சொன்னாராம்.. “மாக்ஸி சைஸ்லதான் வரும் பரவால்லியா?” அப்பேர்ப்பட்ட உடம்புக்குச் சொந்தக்கார்ர் அவர்!)

***************************
பாஸ்கர் சக்தி பேசும்போது ரமேஷ் வைத்யாவைக் குறிப்பிட்டது, குறிப்பிடத்தக்கது. இவரின் முதல் கதையை ‘கதைக்காகா கதை’ என ரமேஷ் வைத்யா விமர்சித்ததைக் குறிப்பிட்டார். அவரது நேர்மையான விமர்சனமே தன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்றார். பாஸ்கர் சக்தி எழுதி விகடனில் வெளிவந்த தக்ளி சிறுகதையை பலர் நினைவு வைத்திருந்தார்கள்.

**********************

பாஸ்கர் சக்தியிடம் ஒரு பதிவர் ‘ஏங்க இப்பல்லாம் காமெடி கதையே வர்றதில்லை’ என்று கேட்டபோது அவரது நண்பரான இன்னொரு பதிவர் ‘நீயெல்லாம் கதை எழுதற-ங்கறதே காமெடிதானே?’ என்று கேட்டதும் ‘கொல்’லென சிரித்தது அரங்கம்! ஆனால் அவர் கேட்டது உண்மையாகவே சீரியஸான கேள்வி!

***************************

கூட்டத்தில் பேச வந்திருந்த நால்வர் பாஸ்கர் சக்தி, சா.தேவதாஸ், யுவன் சந்திரசேகர், பா.ராகவன். இவர்கள் எனக்கெல்லாம் தெரியும் என அமராமல் ஒருவர் பேசும்போது மற்ற மூவரும் அவ்வளவு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தது கவனிக்க வேண்டிய அம்சமாக இருந்தது. அதுவும் பா.ரா பேசும்போது யுவனும், யுவன் பேசும்போது பா.ரா-வும் வெளிக்காட்டிய முக பாவங்களைக் கவனித்தவர் கற்றாரைக் கற்றாரே காமுறுவருக்கு அர்த்தம் கண்டிருப்பர்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘எனக்கெதுக்கு பட்டறையெல்லாம்’ என்பது போல கேமராவும் கையுமாக ஃபோட்டோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள் கேபிள் சங்கரும், ஆதியும். ‘இருடி... முடிஞ்சதும் ஆன் த ஸ்பாட் சிறுகதைப் போட்டி இருக்கு’ என்று பயமுறுத்தியபின்தான் (கேமரா) பொட்டியை மூடிவிட்டு அமர்ந்தார்கள்.

************************

யுவன் பேசும்போது ‘நான் மிகவும் மதிக்கும், பெரிய எழுத்தாளரொருவர்..’ என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பித்தபோது, ‘சாரு தானே?’ என்று கூட்டத்திலிருந்தொரு குரல் கேட்டது. ‘நீங்க இப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுன்னுதானே நான் அப்படியெல்லாம் சொன்னேன்..’ என்று சிக்ஸரடித்தார்!

யுவனின் டைமிங் சென்ஸ் அடிக்கடி க்ளாப்ஸை அள்ளியது!

************************

லையுலகம் பற்றி கேட்டபோது அதுபற்றிய பேருண்மை ஒன்றை இறுதியில் சொல்கிறேன் என்றார் யுவன். அது, அவர் வலையுலகம் பக்கமே வருவதில்லை என்பதுதான். “எனக்கு யாராவது மெயில் பண்ணினா கூட அவங்களே கூப்ட்டு ‘மெயில் அனுப்பிருக்கேன்’னாதான் திறந்து பார்ப்பேன்” என்று யதார்த்தமாகச் சொன்னது பிடித்திருந்தது. இசை பற்றிய குறிப்புகளுக்காக மட்டுமே இணையம் திறப்பாராம். மற்றபடி நோ நெட்!

**************************

திமூலகிருஷ்ணன், இடைவேளையில் கார்க்கியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒட்டுக் கேட்டது:-

ஆதி: “ரெண்டு நாள் போதும்ப்பா.. முடியாதுன்னு சொல்லாத..”

கார்க்கி:பார்க்கலாம் சகா. ரம்ஜான் லீவுல முடியுமான்னு தெரியல. எப்படியும் டிசம்பருக்குள்ள டேட்ஸ் தர்றேன்”

ஏதாவது பேரிச்சம்பழ விவகாரமோன்னு கொஞ்சம் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டதில் தெரிந்த விஷயம். ஆதி, கார்க்கியை வைத்து மீண்டுமொரு குறும்படம் இயக்க இருக்கிறார். ‘இந்த தடவை ஹெவியான சப்ஜெக்டுங்க’ என்று ஆதி சொன்னபோது கார்க்கி சிரிப்பை அடக்க முடியாமல் திணறியது, மூன்றாவது குறும்படமாக எடுக்க வேண்டிய அம்சம்!

***************************

குறிப்பெடுத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட நோட்டில் ‘சிறுகதை’ என்று பெரிய எழுத்துகளில் எழுதி, ‘இந்தச் சிறுகதைக்கு உங்கள் பின்னூட்டம் தேவை’ என்று ஒவ்வொரு கைகளுக்காய்க் கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார் ஒரு பதிவர். அதில் நான் ‘மீ த 12த்’ என்று கிண்டலாக எழுதிவிட்டு நிமிர்ந்தபோது பா.ரா. பேசிக் கொண்டிருந்தார்.. “ப்ளாக்ல இந்த மீ த ஃபர்ஸ்ட் ஒரு தீராத வியாதி.. அது எப்ப ஒழியுமோ அப்பதான் உங்களுக்கெல்லாம் நல்லது”

*************************

‘பா.ரா.-வை பார்த்தபின்னாடிதான் ஒரு முடிவுக்கே வந்தேன்’ என்றார் என் நண்பர் ஒருவர். ‘நாளைக்கே..’ என்றவர் ஆரம்பிக்க ‘நாலைஞ்சு கதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பப் போறீங்களா?’ என்று ஆர்வமாய்க் கேட்டேன்.

“இல்லைங்க.. நாளைக்கே என் மீசையை எடுத்துடப் போறேன்.. அவரு பாருங்களேன்.. மீசையை எடுத்த பின்னாடி பத்துவயது குறைஞ்சு தெரியறாருல்ல?” என்றார்.

அது சரி!

********************************************

பி.கு: கூட்டம் முடிந்தபின்னே நண்பர் ஒன்றுகூடி பிக்னிக் போனது மற்றுமொரு நல்ல அனுபவம்!


.

Saturday, September 19, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்


மேலே படத்தில் காண்பது நீங்கள்..நான் உட்பட நம்மைப் போல் ஒருவன்தான். மும்பையில், கோவையில், சென்னையில் குண்டு வெடிக்கிறதா அது நமக்கு வெறும் செய்திதான். கொஞ்சம் தெரிந்த ஆசாமிகள் ஏதாவது மரணமடைந்தவர்கள் லிஸ்டில் இருந்தால் ஒரு எக்ஸ்ட்ரா ‘உச்’ உறுதி. அதேபோல தியாக மரணம் (உன்னிகிருஷ்ணன், ஹேமந்த் கார்க்கரே) என்றால் அதன் காரணமாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்த்த கவிதைகளும், விவாதங்களும் சூடுபறக்கும். கொஞ்ச நாள் கழித்து எந்திரன் ஸ்டில்களோ, வேட்டைக்காரன் வெளியீட்டுத் தேதியோ மீடியாக்களில் முந்திக் கொள்ளும்.


இப்படி இருக்கும் சாமான்யன் - COMMON MAN - கொஞ்சம் வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்தால்?



சாதாரணமான ஒரு காலை நேரம். நகரின் முக்கியமான போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஆறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்துவிட்டு வீட்டுக்கு காய்கறியும், வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள ஒரு மிகப்பெரிய கட்டிட மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு போலீஸ் கமிஷனரை ஆட்டு விக்கிறான் ஒரு பொதுஜனம். அவனது கோரிக்கை, கைது செய்து வைத்திருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்பதே.

கமிஷனர் இதை எப்படிக் கையாளுகிறார், அவன் கமிஷனரை எப்படி ஆட்டுவிக்கிறான் என்பதே உன்னைப் போல் ஒருவன்!

ஒரு நாள். காலை ஏழு டூ மாலை ஏழுதான் முழுக்கதையும்.

பின்னி எடுத்துவிட்டார்கள்! ஒரே ஸ்க்ரீனில் பத்து உடை, உடல்மொழியோடு அசத்திய கமலுக்கு ஒரே உடை. சாதாரணப் பொதுஜனத்தின் பயத்தை ஒரு ஷாட்டில் தன் உடல்மொழிமூலம் காட்டியிருப்பார் (போலீஸ் ஜீப்பைப் பார்க்கும் அந்தக் கடைசி காட்சி) - Class!

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் - இரண்டு. வசனங்கள் & இசை.

கமிஷனர் மோகன்லாலுக்கும், ஹோம் செக்ரட்டரி லக்‌ஷ்மிக்கும் நடக்கும் விவாதம் - மிகவும் குறிப்பிடத்தக்கது. (Blaming, Responsibility)

அதேபோல கமலுக்கும், மோகன்லாலுக்கும் நடக்கும் Common Man, Super Man, Invisible Man விவாதமும்.

இந்தப் படத்திற்கு காமெடி தேவையில்லை என்றாலும் பரத் ரெட்டி தன் மனைவியிடம் ‘எதுக்காவது நீ யெஸ்னு சொல்லியிருக்கியா’ எனும்போது கையிலிருக்கும் குழந்தையைக் காட்டி ‘இதுக்கு?’ என்பது, எம்.எஸ். பாஸ்கரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள் உட்பட பல வசனங்களில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

இன்னொன்று பின்னணி இசை. ஸ்ருதி கலக்கியிருக்கிறார். முக்கியமாக இரண்டு இடங்களைக் கவனியுங்கள். ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாஷ் ரூமில் பாமை கமல் வைக்கும்போது வரும் பின்னணி இசை. இன்னொன்று கமல் அந்தக் கட்டத்தின் மேலேறிப் போகும் சீன். அத்தனை பெரிய மாடி ஒவ்வொன்றாய் ஏறுவதை சலிக்காமல் ரசிகனைப் பார்க்க வைப்பது இசை. குறிப்பிட்ட இடத்தில் இசை நின்று, அவர் படியேறுவதன் சப்தங்களை மட்டும் கொடுத்து, மாடியை அடையும்போது மீண்டும் பின்னணி இசை கொடுத்து.... ஸ்ருதி.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!

மோகன்லால், லக்‌ஷ்மி, பரத் ரெட்டி, கணேஷ், அனுஜா ஐயர் அந்த கம்ப்யூட்டர் இளைஞன் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE

கேபிள் சங்கர்ஜிக்கு:- அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே?


.

Friday, September 18, 2009

அனுபவம்: சிறுகதைப் பட்டறை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிங்க்ளேர் லூயியை ஒரு கல்லூரியில் மாணவர் மன்றத்தில் பேச அழைத்திருந்தார்கள். கதை எழுதுவது எப்படி என்பது பற்றிப் பேச வேண்டும்.

மேடையில் எழுந்து நின்ற லூயி, “உங்களில் யார் யார் எழுத்தாளராக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும் கையைத் தூக்கினார்கள்.

“பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன்.. இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணுகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாராம் லூயி!


******************************

ரையாடல் அமைப்பில் சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ளும் வரை என்னைப்போலவே பலரும் இப்படி எண்ணியிருக்கக் கூடும். சொல்லப்போனால் நான் அந்தப் பட்டறை முடியும் வரை ‘இது போன்ற பட்டறைகளினால் ஒருவன் சிறுகதை எழுத்தாளனாகிவிட முடியுமா’ என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்தக் கேள்வியை தன் அனுபவத்தால் அறைந்தெறிந்தார் பா.ராகவன்!

பாஸ்கர் சக்தி பேசி முடித்ததும் வந்த யுவன் சந்திரசேகர் பேச்சின் வீச்சை கார்க்கியின் எழுத்தில் வந்த மாற்றத்திலேயே நீங்கள் கண்டிருக்கலாம். தன் கருத்தை மிக இயல்பான-திர்க்கமான பேச்சால் சிரிக்கச் சிரிக்கச் சொன்ன யுவனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

மதிய உணவுக்குப் பிறகு பேசிய, தேவதாஸுக்குப் பின் வந்தார் பா.ராகவன்.

இதற்காகவே பவர் பாய்ண்ட் ப்ரசண்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடுத்து வந்திருந்தார். இறுதிப் போட்டியில் விளாசிய சச்சினின் பேட்டிங்கிற்கு ஒத்திருந்தது அவர் பேச்சு. ஆரம்பம் முதலே அதிரடி.

எதிரில் உட்கார்ந்திருக்கும் வலைப்பதிவாளர்களை ஒருபடி மேலேற்றிக் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு வந்திருந்தார் அவர். வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிப் பிரபலமாக ஆசையிருக்கும் எவரும், இவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் ஜெயிக்கலாம்.

* எந்தக் கதையையும் படிக்காமல் யாருமே நிராகரிப்பதில்லை. முதல் பத்தியை வெகு நிச்சயமாகப் படிப்பார்கள். எனவே, சிறுகதையின் முதல் பத்தி மிக மிக முக்கியம். எந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரையும் முதல் பத்தியில் கட்டிப் போட முடிந்தால் உங்கள் கதை முழுதும் படிக்க வாய்ப்பிருக்கிறது.


* கதாபாத்திரங்கள் அதிகம் வேண்டாம். ரமேஷ், சௌமியாவைப் பார்த்து ‘எனக்கு பத்து ரூபா வேணும்னு சுரேஷைக் கேட்டால் உன்னைக் கேட்கச் சொன்னான்’ என்று சொல்வதை கணேஷ் கேட்டுக் கொண்டிருந்தான் என்று எழுதினீர்களானால் படிக்கும் உதவி ஆசிரியர் வைத்துவிட்டு டீ குடிக்கப் போய்விடுவார்.

* சுருக்கிச் சுருக்கி எழுத வேண்டாம் தெளிவாக - போதிய இடைவெளியுடன் எழுத வேண்டியது அவசியம்.

* எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள். எந்த உதவி ஆசிரியரும் தமிழைப் போற்றுபவராய்த்தான் இருப்பார். அவரை எரிச்சலூட்டாதீர்கள்.


* கால நேரங்களை கவனமாக கையாளுங்கள். திடீரென்று மூன்று வருடத்துக்கு முன் என்று எழுதிவிட்டு, இதைச் சொல்லும் இந்த வேளையில் என்று நிகழ்காலத்துக்கு தவ்வி, மீண்டும் மூன்று வருடம் முன் என்றெழுதி வாசகனை அலைபாய விடாதீர்கள்.

இதுபோன்று இன்னபிற யோசனைகளையும் விரிவான விளக்கங்களோடு அளித்தார் பா.ரா. அதுவும் முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணங்களோடு அவர் விளக்கிய விதம் அருமை.

பா.ராவிடம் என்னைக் கவர்ந்த மற்றுமோர் விஷயம் முகஸ்துதி இல்லாதது. வலைப்பதிவாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர் ஆதங்கப்பட்டபோது அதில் உள்ள உண்மை செவிட்டில் அறைந்தது.

“உங்கள்ல பலபேருக்கு உங்க பலமே தெரியலைங்கறதுதான் மிகப் பெரிய கொடுமை. என்ன எழுதினாலும் கமெண்டை எதிர்பார்த்து எழுதறீங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா நீங்க நிக்கற இடம் உங்களுக்குத் தெரியும். ஏதாவதொரு வகைல முன்னேற்றம் இருக்கணும். உங்களை மாதிரி இளைஞர்கள் பலபேருக்கு - கிழக்கு உட்பட - பல இடங்கள்ல வாய்ப்பு மிகப் பிரகாசமா இருக்குங்கறத நீங்க மறந்துடக் கூடாது” என்று துவங்கி கார் ஏறும் வரை அவர் எங்களோடு உரையாடியது பலபேருக்கு கீதை கேட்ட அனுபவம்.

‘எழுத்து மேம்பட எழுதிக் கொண்டேயிருப்பதே வழி’யென்கிறார் பா.ரா. ‘தினமும் ஏதாவது எழுதிக் கொண்டே இருங்கள். பதிவிட வேண்டியதெல்லாம் இல்லை. ஆனால் எழுதுவதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். அதேபோல ஒரு நல்ல சிறுகதை எழுதுவதற்கு முன் குறைந்தது ஐம்பது சிறுகதைகளை நீங்கள் படித்தால் நலம்’ என்கிறார் அவர்.

அவருக்கு எல்லார் சார்பிலும் நன்றி.

*****************

இனி இந்தப் பட்டறை யோசனையை முன்னெடுத்து நடத்திய சிவராமன் அண்ணாவுக்கும், குருஜி ஜ்யோவ்ராம் சுந்தருக்கும்...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் முதல் பத்தியில் மேற்கோள் காட்டியிருப்பது நீங்கள் எங்களுக்கு அளித்த ரா.கி.ராவின் ‘எப்படி கதை எழுதுவது’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்ததுதான். இந்தப் புத்தகத்தை சில வருடங்களுக்கு முன் நான் தேடாத இடமில்லை. ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு இந்தப் புத்தகம் மிக அவசியமான ஒன்று!

கோ. கேசவன் எழுதிய 'தமிழ் சிறுகதைகளின் உருவங்கள்',

ஜெயமோகன் எழுதிய 'நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்'

கதைகதையாம் காரணமாம் (சந்தியா பதிப்பக வெளியீடு) 19 கதாசிரியர்கள் தங்கள் கதைகளைக் குறித்து உரையாடியதன் தொகுப்பு.

இந்த நான்கு புத்தகங்களையும் ஒருவித குற்றவுணர்ச்சியோடேதான் வாங்கினேன். காரணம் இடைவேளையின்போதே எனக்குத் தெரிந்தது இந்நிகழ்வின் செலவு உங்கள் கைமீறி நடந்துகொண்டிருக்கிறதென்பது. இந்நிலையில் நான்கு புத்தகங்களின் செலவே நாங்கள் கொடுத்த நானூறைத் தொட்டிருக்குமே என்ற கவலை எனக்கும் சில நண்பர்களுக்குமிருந்தது.

அதுவும் அவற்றில் மூன்று நேர்த்தியாக பிரதி செய்யப்பட்டு, பைண்ட் செய்து.... எத்தனை நேரம், செலவு - அதன் பின்னணியில்?

இதையெல்லாம் சொல்லக் காரணம்... பொருளாதாரத்தின் காரணமாக உங்களின் செயல்பாடுகளின் தீவிரம் குறைந்துவிடக் கூடாதென்ற கவலைதான்.

இந்நிகழ்வின் மூலம் அடுத்ததாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதை இதைவிடச் சிறப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் பரிபூரணமாக உள்ளது!


மிக நீண்டு ஒருவித சீரியஸ் தொனியில் போகும் இந்தப் பதிவை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். பட்டறைக்கு முன்னும், பின்னும், இடையிலும் நடந்த வேறு சில சுவாரஸ்யத் தகவல்களை திங்களன்று பகிர்ந்து கொள்கிறேன்.



.

Wednesday, September 16, 2009

நான் என் வரலாறு கூறுதல்

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் யாரு என் வரலாறு கூறுவது என்ற தலைப்பில் வலைப்பதிவுக்கு தான் வந்த கதையை எழுதி தொடர என்னை அழைத்திருக்கிறார். ஏற்கனவே என் நூறாவது பதிவாக அதை எழுதிவிட்டதால் அதையே சிகப்பில் கீழே கொடுத்திருக்கிறேன். அதற்கும் கீழேயிருப்பது தற்போதைய எண்ணங்கள்...

(ஏற்கனவே படித்தவர்கள் ‘ஜம்ப்’பிப் போகவே இந்தக் குறிப்பு!)

************************

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

*********************************

யோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பதிவுக்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் எழுத்தில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி என்னை மேலெடுத்துச் செல்ல முயலும் தோழமை உள்ளங்களுக்கு என் அன்பு.

இனி.. இதைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:


பைத்தியக்காரன்
ஜ்யோவ்ராம் சுந்தர்

(உங்களின் வலையுலக அனுபவங்கள் அறிய ஆவலாயிருப்பதால் அழைக்கிறேன்..)

முரளிகுமார் பத்மநாபன்
ராஜராஜன்




.

Tuesday, September 15, 2009

அவியல் 15.09.09

அறிவிப்பு:-

இந்த அவியல் சென்னை - உரையாடல் பட்டறைக்குப் போகுமுன் எழுதி வைத்திருந்தது. உரையாடல் சிறுகதைப் பட்டறை குறித்த அனுபவங்கள் இரு தினங்களுக்குள்ளாக வெளிவரும் என்பதை அனைவர்க்கும் அறிவித்துக் கொள்கிறேன்!

************************************

கே
ரளா, திருச்சூர் மாவட்டம் ஷொர்ணூர் அருகே ‘பாரதப்புழை’ எனப்படும் மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் அடிக்கடி நடக்கும் மணல் திருட்டைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்கள் நடத்தி, கடைசியாக மணல் நிரப்பும் போராட்டம் நடத்தலாம் என்று முடிவெடுத்தார்கள். அதாவது லாரி லாரியாக மணல்களைக் கொண்டுவந்து, ஆற்றின் கரையோரத்தில் கொட்டி சமன்படுத்தலாம் என்று போராட்டக் குழுவினர் நினைத்தார்கள். செய்தும் காட்டினார்கள்.

இதை என்னிடம் சொன்னவரிடம் கேட்டேன்.. “ரொம்ப நல்ல விஷயமாச்சே..”

“அதான் இல்ல...”

“ஏன்?”

“பதினைஞ்சு இருவது லாரி நிறைய மணலைக் கொண்டுவந்து, ட்ராஃபிக் ஜாமாக்கி எல்லாரோட கவனத்தை இதுல திருப்பறதுதான் திட்டம். போராட்டத்துக்கு முதல்நாள் நைட் அவ்ளோ மணலுக்கு என்ன பண்ணன்னு வேற வழியில்லாம, இரவோட இரவா யாருக்கும் தெரியாம அங்கிருந்தே மணலை அள்ளி லாரில போட்டுட்டு அடுத்த நாள் வந்து அங்கியே கொட்டினாங்களாம்....!”

அதுசரி!

************************

கிரேசி கிரி பற்றி எழுதி ரொம்ப நாளாச்சு. இவன் டூவீலர் ஓட்டிக் கொண்டு போகும்போது யாரையோ சடக்கென்று முந்த அவர் தடுமாறி ‘என்னய்யா வண்டி ஓட்டற?’ என்று கேட்டிருக்கிறார். இவன் “ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ங்க” என்றுவிட்டு வந்திருக்கிறான். இது நடந்தது ரொம்ப நாளைக்கு முன். லேட்டஸ்டாக யாரோ இதே போல கோவமாக ‘எப்படி ஓட்டற பாரு’ என்று திட்டியதற்கு இவன் சொன்னானாம்.. “சின்ன வயசுலயே பழகீட்டேன்ல..”

***********************

நினைத்தாலே இனிக்கும் விமர்சனத்தில் ஒரு கண்டனத்தை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். படத்தில் நாயகர்கள் சினிமாவுக்குப் போகிறார்கள். அங்கே திருநங்கைகளுக்கு நடுவே இவர்கள் அமர்ந்திருப்பது போலவும் அதனால் இவர்கள் அவதிப்படுவது போலவும் கீழ்த்தரமாக நகைச்சுவை என்ற பெயரில் காட்டியிருக்கிறார்கள். எத்தனை வருடப் பழைய காமெடி அது.. இன்னுமா இப்படி அவர்களைக் கேவலப்படுத்துவது?

படத்தில் கடுப்பேற்றிய இன்னொரு அம்சம் பின்னணி இசை. ஒரே இரைச்சலாகவே இருந்தது.

*************************


எங்கள் ஊரான உடுமலைப்பேட்டையில் குட்டைத் திடலில்தான் மகாத்மா காந்தி சிலையை வைத்திருப்பார்கள். இந்த முறை அந்த வழியாகப் போகும்போது உடன் வந்தவர் கேட்டார். “காந்தி எப்படி இருக்காருன்னு பார்க்கலாம்” நான் சொன்னேன்.. “அவர் அப்படியேதான் இருக்காரு.. நாமதான் மாறிட்டோம்...”

முக்கியமான விஷயம்.. மிகப்பெரிய பள்ளமாக, அழுக்கும் குப்பை நீருமாய் குட்டையாய் இருந்த அந்த இடத்தை காந்தி வந்துதான் மேடாக்கினார் என்பது உண்மை.

***********************

இந்த வார எப்படி இப்படியெல்லாம்..

ஏதோ ஒரு ஜாலியான வாக்குவாதத்தில் என் மனைவியைப் பற்றி ஏதோ சொன்னதும் அவருக்கு சப்போர்ட்டாக என் மகள் மீராவும் எதையோ சொன்னாள். நான் கேட்டேன்.. “உனக்கு முன்னாடியே உங்கம்மாவைப் பத்தி எனக்கும் தெரியும் மீரா..” என்றேன். டக்கெனச் சொன்னாள் அவள்:

“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”

*****************

Saturday, September 12, 2009

ஈரம் - விமர்சனம்


ஒரு அபார்ட்மெண்டில் குறிப்பிட்ட ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர் ஃப்ளாட்டை முழுதும் ஈரமாக்கி பைப்பில் வழிய, என்னவென்று பார்க்கிறார் வாட்ச்மேன். படத்தின் நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிறது நீர்.

‘மேடம் மேடம்’ என்று கதவு தட்டுகிறார்..

அங்கே.....

**************************

கல்யாணியம்மா பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை.
வெறுப்போடு மாவரைக்க கிரைண்டரைப் போடுகிறார். மின்சாரமில்லை. அப்போது தொலைபேசி மணி ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று சிங்க்’கில் திறந்து வைத்திருக்கும் பைப்பிலிருந்து தண்ணீர் வருகிறது. ஓரத்தில் வைத்திருக்கும் கரண்டி வழியே, வழிகிற நீர்.. நேராக.....

*****************************

தியாகராஜன் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். திடீரென புயல் காற்று வீசுகிறது. மழைத்துளி கன்னத்தில் விழுகிறது. குடையைத் திறக்க முயற்சிக்கிறார். குடை அவர் கையை விட்டுப் பறந்து செல்கிறது. பறந்து செல்லும் குடையின் முனை அவரை நோக்கி நிற்கிறது. எதுவோ, என்னவோ அவரைக் கலவரப்படுத்த மிரள்கிறார்.. இரண்டடி பின்வாங்குகிறார். திடீரென அந்தக் குடை பறந்து வந்து அவர் கழுத்தில்....

**************************

இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்புடைய மிஸ்டர். எக்ஸைத் தேட, அவன் சிக்குகிறான். ஒரு தியேட்டரில்... அவனைத் தொடரும் அசிஸ்டெண்ட் கமிஷனர், டாய்லெட்டில் அவன் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவனைத் தாக்குவது யாரென்று பார்க்கிற ஏ.சி-க்கு அதிர்ச்சி....

*********************

கொலைகளை விசாரிக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி. அவ்வப்போது நடக்கும் சம்பவங்களிலிருந்து தனக்கும் சிந்துவுக்குமான காதலை அவர் நினைவு கூர்வது நல்ல திரைக்கதை.


மிருகம் படத்தில் நடித்த ஆதி, இதில் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. அண்டர்ப்ளே. ஆனா குரல்ல போலீஸ் ஆஃபீஸரா இருக்கறப்ப காமிக்கற அதே விறைப்பை, காதல் பண்ணும்போதும் காமிக்கறாரு. மத்தபடி நல்லா பண்ணிருக்காரு. (குரல் அவரோடதா.. உண்ணி மேனனா? மலையாள வாடை!)

ஹீரோயின் - சிந்து மேனன். ஸ்பெஷலா ஒண்ணுமில்ல. சாதாரண குடும்பப் பொண்ணா வந்து, குடும்பப் பொண்ணா சாகறாங்க.

சிந்துவின் கணவனாக நந்தா. அவருக்கும் நல்ல ஸ்கோப். இடைவேளை வரை ஒன்றுமில்லாமல்... இடைவேளையிலிருந்து க்ளைமாக்ஸ் வரை மிக நல்ல வேடம்.



சிந்துவின் தங்கையாக சரண்யா மோகன். நத்திங் க்ரேட் அண்ட் நத்திங் வேஸ்ட்.

கடைசியில் ப்ரஸ்மீட்டில் வில்லன் வாக்குமூலம் கொடுக்கும்போது, ‘எதுக்குய்யா இப்படி ஃபார்மலா திருந்தின மாதிரி காமிக்கறாங்க’ என்று நாம் யோசிக்கும்போது ஒரு சின்ன டயலாக் மூலம் ‘அட’ என்று நிமிர வைக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

படத்தில் ப்ளஸ்.. மேக்கிங். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதோ ஒரு இடத்தில் ஈரம் தெரிகிறது. அதைத் திணிக்காமல் யதேச்சையாகக் காண்பித்ததில் இயக்குனர் மிளிர்கிறார்.

இன்னொரு ப்ளஸ் பின்னணி இசை. தமன். மிரட்டலா இருக்கு.

ஈரம் - ஷங்கர் தயாரிப்பென்றால் தைரியமாகப் பார்க்கலாம் என்று நிரூபிக்கிற படம்.


.

Friday, September 11, 2009

இதனால் சகலமானவர்களுக்கும்...


நான் மிக கடுமையான பணிநெருக்கடியில் இருக்கிறேன். சூழல் காரணமாக அலுவலகத்தில் வேறு சில பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டிருப்பதால் அழைக்கும் நண்பர்களிடத்தில் முன்பு போல கதைக்க முடிவதில்லை. சில சமயம் பேசிக் கொண்டிருக்கும்போதே, வேறு வேலைகளையும் செய்வதால் அவர்களை உதாசீனப்படுத்துவதாய் அழைக்கும் நண்பர்கள் எண்ணும் நிலையை நானே உருவாக்கிக் கொள்கிறேன்.

சில நண்பர்கள் ஒரு சில பிரச்சினைகளின் ஆலோசனைக்காக (நம்புங்கப்பா) அழைக்கையில் மட்டும் சில நிமிடங்கள் பேச முடிகிறது. மற்றபடி வழக்கமான குசல விசாரிப்புகள், ஹாய் ஹலோக்களுக்கு நேரமின்றிப் போகிறது.

வேலைப்பளுவின் காரணமாக மனது எழுத எண்ணுவதை எழுத்தில் கொண்டு வருவதில் தடங்கல் ஏற்படுகிறது. அதனால் ‘ஏண்டா இப்படி எழுதிருக்க' என்று என்னை நானும், என்னை மற்றவர்களும் கேட்கும் நிலை வ்ருகிறது. அதன் காரணமாக ஏதாவது எழுதத் தோன்றினால் தோன்றுவதை எழுதிமட்டும் வைத்துக் கொண்டு, எப்போதாவது முயலும்போது திருத்தி வெளியிடுவதற்காக கிடப்பில் வைத்திருக்கிறேன். இருந்தாலும் இருப்பைக் காட்டிக் கொள்ள எப்போதாவது எதையாவது எப்படியிருந்தாலும் சரி என்று பதிவிடவும் செய்கிறேன்.

ஒரு காலத்தில் ‘எப்பப் பார்த்தாலும் செல்ஃபோன்ல நண்பர்களோடு பேச்சா... குறைச்சுக்க' என்று சொல்லப்பட்ட நான், ஏன் கூப்பிடறதே இல்ல என்று கேள்விக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கிடையில் அழைக்காத நண்பர்களும், என்னால் அழைக்கப் படாத நண்பர்களுக்கும் இடையில் ஒரு வசந்தி... ச்சே.. வதந்தி உலவுவதாய் உறுதிப் படுத்தப் படாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. அதாவது அவர்களைப் பற்றி தவறானதாக என்னிடம் யாரோ எதுவோ சொல்லிவிட்டதாலும், அதை நான் நம்பிவிட்டதாலும் அவர்கள் மீது கோவமும், வருத்தமும் இருப்பதால்தான் நான் அழைப்பதில்லை என்ற வதந்திதான் அது.

அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்...

அப்படியெதுவுமே இல்லை. யாரும் யாரைப்பற்றியும் எதுவும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதை நம்பிவிடவும் நான் தயாரில்லை. எதுவானாலும் அழைத்துப் பேசி சரி செய்து கொள்வேன். அன்பும், நட்பையும்தவிர வேறெதுமில்லாத உலகில் அவையிரண்டையும் எதன் காரணமாகவும் இழக்க நான் தயாரில்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான்!

பி.கு. 1: ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் சொல்ல நினைத்தது.. அவரிடம் இருந்த கேள்வி, பிறரிடமுமிருக்குமென்பதால் விளக்கத்தை பொதுவில் வைக்க வேண்டியதாயிற்று.

பி.கு. 2: சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் புரிந்து கொண்டு ‘போடா மச்சான்.. விடு..' என்றுவிட்டுப் போகவும். மற்றவர்கள் புன்னகையோடு கடந்துவிடலாம்!



.

Monday, September 7, 2009

பாலுமாமா

“கிருஷ்ணகுமார்.. ஒன்னப் பாக்க உங்க மாமா வந்திருக்காரு” – என் க்ளாஸ்மாஸ்டர் என்னை அழைக்கும்போதே எனக்கு கால்கள் தந்தி அடித்தது.

அது தெரிந்திருக்குமோ..

போய்ப் பார்த்தேன். பாலுமாமா நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் தோளில் கைபோட்டு, ‘ஏண்டா இப்படிப் பண்ணின?’ என்று கேட்டார். நான் மௌனமாய் தலைகுனிந்தேன்.

விஷயம் இதுதான்....

அதற்கு முன்தினம் அவர் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்து, நாலைந்து காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி, படித்து அதை என் புத்தகங்கள் வைக்கும் சிறிய பெட்டியொன்றில் மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ அந்த காமிக்ஸ் புத்தகங்கள் இவர் கண்ணில் பட்டிருக்கிறது. உடனே ஒன் ப்ளஸ் ஒன் டூ என கணக்குப் போட்டு வந்து பிடித்துவிட்டார்.

ஆறாவது படிக்கும்போது இது நடந்ததா, எட்டாவது படிக்கும்போதா என்று சிறு குழப்பம் இந்த சம்பவத்தை ஃப்ளாஷ்பேக்கும்போது வந்துபோகிறது. ஆம். இது கதையல்ல. நிஜம்.

அன்றைக்கு என்னை கன்னாபின்னாவென்று திட்டி அறிவுரையெல்லாம் சொல்லவில்லை அவர். தோள்மீது கைபோட்டபடி, ‘என்கிட்ட சொன்னா வாங்கித்தரமாட்டானேடா?’ என்றுதான் கேட்டார். (அந்தப் புத்தகங்களை என் அப்பா கடைசிவரை தனது ட்ரங்க் பெட்டியொன்றில் வைத்திருந்தார். இப்போதும் இருக்குமென நினைக்கிறேன். அவர் எப்போது பெட்டியைத் திறந்து எதையாவது தேட, அந்தப் புத்தகங்களை ஓரமெடுத்து வைக்கையிலும் எனக்கு உறுத்தும்)

பாலுமாமா என் அன்னையின் அண்ணன். ஸ்டேட்பாங்கில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் பேரும் என் அப்பா பேரும் பாலசுப்ரமணியன்தான். இனிஷியல்கூட K.R.தான் இருவருக்கும்! என் அப்பா லேட் மேரேஜ் என்பதால் மாமாவுடன் நான் போகும்போது அவரிடம் ‘இது உங்க பையனா’ என்று கேட்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் வசித்ததால், என் மாமாவுடன்தான் அதிக நேரமிருப்பேன்.

ஸ்டேட்பாங்கில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நல்ல கேரம் ப்ளேயர். என்னையும் பல சமயம் வங்கிக்கு அழைத்துச் சென்று அங்கே இருக்கும் போர்டில் விளையாடச் சொல்லிக்கொடுப்பார். எனக்கு கேரம் மீது ஆர்வம் வரவும், ஓரளவு நன்றாக விளையாடுவதற்கும் அவர்தான் காரணம். காலையில் குளித்ததும் சந்தனப் பொட்டும், குங்குமும் வைத்துக் கொள்வார். அவரைப் பார்த்துதான் சந்தனம் வைக்கும் பழக்கம் எனக்கு வந்தது என்பதை இதுவரை பலரிடமும் சொல்லியதுண்டு.

கோயில் குளங்களுக்கு தவறாமல் செய்வார். யாருக்கும் எந்தத் துன்பமும் தர விரும்பமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். இரண்டு மூன்று மாதங்களாக கால் வலியாலும், சரியாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.

கார் வாங்கிவிட்டேன் என்ற சந்தோஷச் செய்தியை அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவரை உட்கார வைத்து ஒரு ரவுண்டு வரலாமென்றும் ரொம்பவும் ஆசைப்பட்டு ஊருக்குப் (உடுமலைப்பேட்டை) போனேன். என் வீட்டுக்குச் சென்று எல்லாருமாய்க் கிளம்பும்போது என் மாமா மகனிடமிருந்து மாமாவை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் செய்திவந்தது. 'ரொம்ப முடியாம இருக்கார்டா.. யாரைப் பார்த்தாலும் அழறாரு’ என்றார் அம்மா. எனக்கு அவரை அந்தக் கோலத்தில் பார்க்கும் திராணி இருக்கவில்லை. ஆகவே போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று வெள்ளி இரவு அவர் இறந்துவிட்டார் என்றார்கள்.

செய்தியைக் கேட்ட சிலநிமிடங்களுக்கு மௌனமானேன். சனி காலை ஊருக்குப் போனபோது உள்ளே கிடத்தியிருந்த அவருடலைப் பார்க்கச் செல்லத் தோன்றவேயில்லை. முற்றத்தில் அமர்ந்து ஆகவேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.

‘ஆஸ்பத்திரில கட்டின வேட்டியை கழட்டி, இதைக் கட்டிவிடுங்க’ என்று யாரோ என்னிடம் புது வேட்டியைத் திணித்தபோது உள்ளே போனேன்.’

“வாடா.. குமார். கொழந்தைக எங்க” என்று எப்போதும் கேட்கும் பாலுமாமா கண்மூடிப் படுத்திருந்தார். ஒரே செகண்ட் நின்று பார்த்துவிட்டு, நானும் இன்னிருவரும் வேட்டியை மாற்றிவிட்டோம். விபூதியைப் பூசிவிட்டோம். ‘மாமா எப்பவுமே சந்தனமும், குங்குமும் வைப்பாரு. வெச்சுவிடுடா’ என்றார்கள். சந்தனம் வைக்கும்போது மட்டும் ஒருமாதிரி இருந்தது. வைத்துவிட்டேன்.

பூஜைகள் எல்லாம் முடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி, எரியூட்டிவிட்டு வந்தோம்.

இரண்டு நாட்களாகிவிட்டது. இதுவரை ஏனோ அழத் தோன்றவில்லை. அழுகை வரவுமில்லை.

யாரையும் அழவைத்துப் பார்க்காத மனுஷன் அவர். அவருக்காக அழாததும் அவருக்காகத்தானே.

மாமா, ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ. உங்களுக்கு என் அஞ்சலிகள்.

:-(


.

Saturday, September 5, 2009

நினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்



னது கல்லூரி நண்பன் சக்தியின் தந்தை பாக்யராஜ் வைக்கும் கெட்-டுகதருக்காக எட்டு வருடங்களுக்குப் பிறகு தன் கல்லூரி நண்பர்களைக் காண மும்பையிலிருந்து வருகிறார் பிருத்விராஜ். வரும்போதே ஃப்ளாஷ்பேக்கில் தனக்கும் ப்ரியாமணிக்குமான காதல், கார்த்திக்குக்கும் தனக்குமான தீராப்பகை, எல்லாருக்கும் நண்பனான சக்தி என்று தன் கல்லூரிக் காலத்தை நினைவுகூர்கிறார். கெட்-டுகெதருக்கு வந்த இடத்தில் ப்ரிதிவிராஜைக் கொல்ல முயற்சி நடக்கிறது. சக்தியின் தந்தையாக வரும் பாக்யராஜ் ஒவ்வொருவரிடமாகப் பேச, கொலை செய்ய முயற்சித்தது யாரென்று தெரிகிறது.

முடிவு வழக்கம்போல சுபம்.

சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம். ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும்போதே ஜிவ்வென்று டேக் ஆஃப் ஆகிவிடுகிறது படம். அங்கங்கே வரும் ஃப்ளாஷ்பேக்கை, ஒவ்வொருவர் கோணத்தில் சொல்லியிருக்கும் விதமும் அருமை.



படம் முழுவதும் வியாபித்து நடித்திருக்கிறார் ப்ரித்விராஜ். ஆனால் கல்லூரி மாணவர் என்பதைக் கொஞ்சம் ஏற்க மறுக்கிறது. ப்ரொஃபசர் கேரக்டருக்கு சரியாக இருப்பார். ப்ரியாமணிக்கும் சொல்லிக் கொள்ளும்படியான படம். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சக்திக்கும் நல்ல கேரக்டர்.


பாலு

பாலு கேரக்டரில் நடித்திருக்கும் இவர் யாரென்று கேபிள்சங்கர்தான் சொல்ல வேண்டும். வழக்கமாய் ஸ்ரீமன் செய்யும் கேரக்டர். கொஞ்சமும் மிகைப் படுத்தாத இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கார்த்திக், லொள்ளுசபா ஜீவா(ஒடம்பைக் குறைங்க சாமி!), பாக்யராஜ், இளவரசு, மனோபாலா, ஷாலி கேரக்டரில் வரும் பெண் என்று எல்லாருக்கும் அருமையான ஸ்கோப் உள்ள படம்.

படத்தில் ப்ளஸ் பாய்ண்ட் கேமரா. பாலசுப்ரமணியெம்!



முதல் பாடலிலேயே (நண்பனைப் பார்த்த தேதி மட்டும்) யாருய்யா கேமரா மேன் என்று கேட்க வைத்துவிடுகிறார். எல்லா காட்சிகளிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான டோன். அழகாய்ப் பூத்ததே பாடலும், படமாக்கிய விதமும் டாப்!

பாடல்கள் கேட்டுச் சலிக்காததால் உட்கார வைத்துவிடுகிறது. என் பேரு உல்லாவும், செக்ஸி லேடியும் சன் டிவிக்காரர்களின் உபயத்தால் மகா மெகா ஹிட்டாகப் போவது உறுதி.

கடைசி காட்சியில் பாக்யராஜ் தன் வழக்கமான கை ஆட்டி கை ஆட்டிப் பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள். முடிவு சினிமாத்தனமானதுதான் என்றாலும், வேறு வழியில்லை. நிச்சயமாக பாக்யராஜுக்கு, ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவுதரும் படம்.

வசனம் ஓரிரு இடங்களில் க்ளாப்ஸை அள்ளுகிறது. முக்கியமாக கால்பந்துப் போட்டியில் பாக்யராஜ், சக்தி-ப்ரித்விராஜைப் பார்த்துச் சொல்லும் டயலாக்!

நிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் - நினைத்தாலே இனிக்கும்.


பி.கு: கேபிள் சங்கருக்கு இன்னொரு கேள்வி: செக்ஸி லேடி பாடலில் வரும் அம்மிணி யாருங்க??? (ஹி.. ஹி... ஹி..)


.



Thursday, September 3, 2009

அவியல் 03.09.2009


நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.

மிக எரிச்சலுற்ற படம் கீ....ழே..

******************************************

லைப்பதிவர்களில் நான் முதல் முதல் சந்திந்த பதிவர் என்கிற பெருமையைப் பெறும்-மன்னிக்க - பெருமை எனக்கு!- ஆகவே, பதிவர்களில் நான் முதலின் சந்தித்த பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமையை எனக்குத்தந்த (கரெக்டா நன்னன் சார்?) வெயிலானை திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் தலைவர் என்று நான் சொல்வதுண்டு. நாளாக நாளாக அது நிஜமாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. (அப்போ இவ்ளோ நாள் சும்மாதான் சொல்லிகிட்டிருந்தியா நீ?) ஒரு தலைவருக்கே உரிய பொறுப்புணர்ச்சியோடு வலைப்பதிவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருப்பூர் வலைப்பதிவர்களுக்கென தனித்திரட்டி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பார்த்ததும் நானே மிரண்டு விட்டேன். திருப்பூரில் இத்தனை வலைப்பதிவர்களா என்று பிரமிப்பாக இருந்தது.

http://tiruppur-bloggers.blogspot.com

(அந்தப் பக்கத்தில் போனால் வலதுபக்கம் உரையாடல் சிறுகதைப் பட்டறைக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறார். ஒரு வார்த்தையை மாற்றிப் படித்து பயந்துவிட்டேன்... ‘என்னடா இப்படி மிரட்டிக் கூப்பிடுகிறார்?’ என்று. பிறகு பொறுமையாய்ப் பார்த்தபோதுதான் புரிந்தது!)

***************************************

ண்பர் தங்கமணி பிரபுவின் ஹிட் கவுண்டரில் அவர் எழுதியிருந்த கேப்ஷன் குபுக்கென சிரிக்க வைத்தது. ஹிட்-64 மனை தெலுங்கு செட்டியார் என்று எழுதி ‘நாங்க கவுண்டர் இல்லீங்க’ என்றிருக்கிறார். வில்லங்கமான மனுஷன்!

அதேபோல நான் மிக ரசித்த ஒரு வலைப்பூ பெயர் ‘என் எழுத்து இகழேல்’.

எழுத்துப் பிழையெல்லாம் இல்லை.. ‘என்’ எழுத்துதான்!

*****************************************

போனவாரம் நான் ‘இந்த வாரப் பதிவர்’ என்று போட்டிருந்த கார்ல்ஸ்பெர்க்கிடமிருந்து அலையழைப்பு. ‘என்ன பாஸ்.. நான் அவ்ளோ நல்லா கதை எழுதுவேன்னு நீங்க நினைக்கறீங்களா?’ என்று கேட்டார். ‘நானெங்கப்பா அப்படிச் சொன்னேன்’ என்று கேட்டதற்கு ‘நீங்கதானே எப்படிக் கதை எழுதன்னு என் படத்தைப் போட்டு க்ளிக்கிப் போய்ப் பாருங்கன்னு சைடு பார்ல (ச்சே.. அங்க இல்லீங்க.. வலைப்பூவோட சைடு பார்!) போட்டிருக்கீங்க..” என்று கலவரப்படுத்தினார்.

பார்த்தால் அவரது படத்துக்கு கீழே உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறைக்கான விளம்பரம் கொடுத்திருந்ததை அப்படி எடுத்துக் கொண்டு சந்தோஷப்பட்டிருக்கிறார் மனுஷன்!

அவர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல!

******************

ரொம்ப நாளைக்கு முன்னாடி எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் ஒருத்தர் அலைபேசினாரு. வழக்கமான பேச்சுகளுக்கு நடுவுல ‘நாளைக்கு என்ன நாள்னு தெரியுமா ஒனக்கு?’ன்னு கேட்டாரு. நான் வேற ஏதேதோ பேசிட்டிருக்க, ‘அதெல்லாம் விடு’ன்னு மறுபடி அதையே கேட்டாரு. தெரியலண்ணா’ன்னு சொன்னேன்.

“வாலண்டைன்ஸ் டேயெல்லாம் ஞாபகம் வெச்சுக்குவீங்கடா. இத மறந்து போகும் உங்களுக்கு..”

“ண்ணா.. அப்படி என்ன நாள்ணா?”

“வள்ளலார் தினம்டா”

“ஓஹோ... உங்களுக்கு எப்படி ஞாபகமிருக்கு?”

“இன்னைக்கு கடைக்காரன் சொன்னான்.. நாளைக்கு கடை லீவுன்னு.. அப்படி ஞாபகம் வந்தது..”

“எந்தக் கடை?”

“டாஸ்மாக்”

டொக்.

*******************************

Body Language என்றொரு விஷயம் இருக்கிறது. இண்டர்வ்யூவில் கலந்து கொள்ள வருபவர்களிடம் இந்த விஷயத்தைப் பார்ப்பது என் வழக்கம். பலரின் வழக்கமாகவும் இருக்கும். நிற்க. (அட.. உட்காருங்க..)

திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். டூவீலர் ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் எல்லாம் போடமாட்டார்கள். சிக்னல் காட்டமாட்டார்கள். வண்டி ஓட்டும்போதே, எந்தப் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கமாய் அவர்கள் உடல் ஒரு மாதிரி திரும்பும். திறமையிருந்தால் நீங்கள் அந்த ‘உடல்மொழி’யறிந்து, விபத்தைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான்!

***********************************

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்....




தினமலரில் வந்தது இது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைக்கு முன் பீரால் அபிஷேகம் செய்கிறார் ஒரு பக்தர்! காதலர் தினத்துக்கு, Pubக்கு எதிர்ப்பு தெரிவித்த கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? ‘நாங்க செஞ்சா சரி, நீங்க செஞ்சாதான் தப்பு’ என்று சொல்வார்களோ?

பாலகணேஷ் போல பீர் கணேஷோ?

********************

இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’


எப்படி இப்படியெல்லாம்?



ஒகேவா? (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)



.

Tuesday, September 1, 2009

அதிர்ஷ்டம்



திர்ஷ்டம் என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்து வரும்?

எனக்கு ஒரு சம்பவம்தான் எப்போதும் நினைவிலிருக்கும்.

கரத்து சந்தடிகள் இல்லாத ஒரு கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவன் பாண்டி. (இது உண்மையான பெயரல்ல) 34, 35 வயது. திருமணமாகவில்லை. ‘இப்படி வேலையெதுவும் பார்க்காம வெட்டியா ஊரைச் சுத்தறியே’ என்ற பெற்றோரின் ஏச்சு. ஒருமாதிரி பித்துப் பிடித்தவனைப் போலத்தான் திரிந்து கொண்டிருந்தான் அவன்.

ஊர் பிரசிடெண்டைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்று போனான். அவரோ வேறொரு கவலையில் இருந்தார்..

ஊர் பிரசிடெண்டுடைய பெண்ணை, திருமணத்துக்காக வந்து பார்த்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டார்கள், பெண் பிடித்திருப்பதாய் சொன்னாலும், இவரால் முடியாத தொகை + நகையை வரதட்சிணையாகக் கேட்டிருக்கிறார்கள். நல்ல இடம். ஆனால் அவ்வளவு பணம் புரட்ட வாய்ப்பில்லை என்பதால் அந்த வரனையே மறந்துவிடலாமா என்ற கவலையிலிருக்கிறார் அவர்.

இவன் வேலை கேட்கப்போக ‘கட்டிங்குக்கு அம்பது ரூவா வெச்சுக்க’ என்று சொல்லி காசைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார் அவர். (கட்டிங் என்றால் மது அருந்துதல் என்பதறிக!)

டாஸ்மாக்குக்கு இரண்டு கிலோ மீட்டர் தள்ளிப் போக வேண்டும். வெறுப்போடு முக்கியச் சாலையிலுள்ள திட்டு ஒன்றின் மீது அமர்கிறான். ஏதேனும் டூ வீலர், வேன், லாரி வந்தால் தொற்றிக் கொள்ளலாம் என்று.

ஒன்றிரண்டு டூவீலர்கள் அவன் கைகாட்டியும் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் வருகிறது ஒரு டாடா சுமோ. இவன் கைகாட்டாமலே இவனருகே வந்து நிற்கிறது.

“பக்கத்துல ஒயின் ஷாப் எங்க இருக்கு?” - காரிலிருந்து எட்டிப்பார்த்த ஒரு தலை கேட்கிறது.

‘ஆஹா’ என மனசுக்குள் மகிழ்ந்தவனாய் - வழிந்தபடி - “நானும் அங்கதான் போகணும்க” என்கிறான் இவன். எட்டிப்பார்த்த தலைக்குச் சொந்தக்காரர் திரும்பி மற்றொரு தலையைப் பார்க்க அவர் சரியென்பதுபோல ஆமோதிக்க ஏற்றிக் கொள்கிறார்கள்.

“நீங்க இந்த ஊரா?” - காரில் இருந்த ஒருவர் கேட்கிறார்.

“ஆமாங்க” என்கிறான் இவன்.

“இந்தப் பக்கம் இப்படித்தான் எப்பயுமே காத்து இவ்ளோ வேகமா வீசிகிட்டே இருக்குமா?”

“ஆமாங்க... எல்லாமே பொட்டக்காடு. சுத்தியும் ஒரு கட்டடமும் இல்ல, ஒண்ணுமில்ல. வெறும் காத்துதான் அடிக்கும்”

கார் டாஸ்மாக் போய் நின்று சரக்கோடு பேச்சு ஆரம்பமானபோதுதான் இவனுக்குத் தெரிகிறது.. அவர்கள் காற்றாடி ஆலை வைக்க நிலம் தேடிக் கொண்டு வந்தவர்கள் என்று.

அடித்தது ஜாக்பாட் என்று நினைத்துக் கொள்கிறான். இவன் வருந்தியபோதெல்லாம் கட்டிங்குக்கு காசு கொடுத்த ப்ரசிடெண்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி அவரில்லாமல் இது சாத்தியமுமில்லை என்பதால் அவரையும் ஆள்விட்டு அழைத்து வருகிறான்.

எந்த எந்த இடம் யார் யாருடையது, அந்த நிலத்தின் வில்லங்கங்கள், மூலப் பத்திரங்கள் எல்லாம் சேர்க்கும் பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக் கொள்கிறான். ஊரில் எல்லாரிடமும் பேசி, நிலத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதிலிருந்து இந்த வேலையை முடித்துக் கொடுக்கும் பொறுப்பை ப்ரசிடெண்ட் ஏற்றுக் கொள்கிறார்.

ஏக்கர் இரண்டாயிரத்துக்குக் கூட போகாது என்று நினைத்திருந்த நிலங்கள் எல்லாம் தாறுமாறான விலைக்குப் பேசப்பட்டது. இரண்டே மாதத்தில் கடகடவென வேலைகள் நடந்தேறின. செண்ட் ஒன்றுக்கு இவ்வளவு என இருவருக்கும் கமிஷன்!

இப்போது அவன், அவனல்ல. அவர்.

சொந்த வீடு கட்டி, கார் வாங்கி, சொந்தக்காரர்கள் ‘35 எல்லாம் வயசா என்ன மாப்ள? உம்னு சொல்லு எம்பொண்ணத் தாரேன்’ என்று இரண்டு காலிலும் நிற்கிறார்கள். இவன் அதையெல்லாம் சிரி்ப்போடு - வேண்டாமென்று மறுத்து - தான் சுற்றித் திரிந்தபோது தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட பெற்றோரைப் பார்த்துக் கொள்வதே போதுமென இருக்கிறான். இருக்கிற பணத்தில் ஒரு பகுதியை குறைந்த வட்டிக்கு விட்டும், தன் விவசாய நிலத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.

பிரசிடெண்ட் வரதட்சிணை அதிகம் கேட்ட அந்த மாப்பிள்ளையைப் புறந்தள்ளி நகரத்தில் மிகப் பெரிய பிரமுகர் ஒருவரது மகனை மாப்பிள்ளையாக்கிக் கொண்டார். தடபுடலாக ஊரே வியக்கும் வண்ணம் திருமணம்.

‘அன்றைக்கு அவன் அங்கு வந்து உட்காராமல் இருந்தால் இதெல்லாம் கிடைக்குமா.. அதிர்ஷ்டக்காரண்டா அவன்’ என்கிறார்கள்.

அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது.

ஞாயிறு் ஊருக்கு அந்த வழியாகப் போகும்போது சாலையோரம் இருக்கும் அந்தத் திட்டைப் பார்த்தேன்.

யாரோ ஒருவன் பீடியோடு அமர்ந்திருந்தான்.



.