Wednesday, February 11, 2015

போஸ்ட் ஆஃபீஸ்

99 நாள் ஃப்ரீடம் என்றொரு சமாச்சாரத்தில் இருக்கிறேன். 99 நாட்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் குழுக்களிலெல்லாம் இல்லை. “ஓ.. அதான் ப்ளாக்ல அப்டேட்ஸா?” என்று புருவமுயர்த்துபவர்களுக்கு ஒரு புன்னகை. படிக்க சேர்ந்துவிட்ட புத்தகங்களின் மிரட்டலும், இங்கே அதிகமாக எழுதவேண்டுமென்றும்தான் இந்த விரதமே.

இந்த 99 நாட்களுக்காக மட்டுமல்லாமல் ரொம்ப நாள் ஆசையாக, ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறேன். கடிதமெழுதுவது. எழுதுவது என்றால் எழுதுவது. மின்னஞ்சல் அல்ல.

ஏற்கனவே ஆரம்பித்து, சிலபேருக்கு எழுதியும் ஆயிற்று. வித்யாசமான க்ராஃப் ஷீட், கலர் கலர் பேனாக்கள் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

***

ரண்டு நாட்கள் முன்னர் போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நண்பருக்கு ஒரு புக் பார்சல் அனுப்ப வேண்டியிருந்தது. முன் அறையில் பார்வைச்சவால் நிறைந்த ஒருவரும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

”ஸ்பீட் போஸ்ட் பண்ணணும்”

“உள்ள ரெண்டாவது கவுண்ட்டர்” - என்றார் அந்தப் பெண்.

உள்ளே ஐந்து கவுண்ட்டர்கள் இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் நான்கு பேர் இந்த வருடத்திற்குள் ரிட்டயர்டாக இருப்பவர்களாக இருக்கலாம். இரண்டாவது கவுண்ட்டரில் விசாரித்தபோது, “இங்க ஸ்டாம்ப் மட்டும்தான். ஸ்பீட் போஸ்ட் அடுத்த கவுண்ட்டர்” என்றார்.

நான்கடி நகர்ந்து பின்னுக்கு வந்து நின்றேன். மொத்தம் எத்தனை கவுண்டர்கள் என்று மீண்டும் எண்ணினேன்.

ஐந்து.

ஆக, எந்தப் பக்கத்திலிருர்ந்து எண்ணினாலும் ஸ்பீட்போஸ்ட் இரண்டாவது கவுண்டரில்லை. மூன்றாவது. அல்லது நட்டநடு கவுண்டர் என்று சொல்லியிருக்கலாம் அந்த முன்னறைப் பெண். சரி, அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.

புத்தகத்தைக் கொடுத்து, எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்ப் என்று கேட்டேன். அவர் எடை பார்த்துவிட்டு, சுற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, டிரங்க் பெட்டியின் பூட்டை சரிபார்த்துவிட்டு, கணினியில் எதையோ பார்த்துவிட்டு

-101 ரூபாய் என்றார்.

இந்த நேரத்திற்குள், முன்னறையில் இருந்த பார்வைச் சவால் நிறைந்த அந்த நபர் வந்தார்.  குறிப்பிட்ட சில இடங்களில் நடையை எண்ணி, சரியாக அந்தப் பெண்மணிக்கு சற்றுப் பின்னால் வந்து நின்றார்.

“சித்ரா” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றார்.

ஸ்பீட்போஸ்ட் பெண்மணி ஒன்றும் பேசவில்லை.

“சித்ரா”

அப்போதும் இந்த அம்மணியிடமிருந்து பேச்சேதும் இல்லை.

“ஓ.. அம்மாங்களா” என்றார் அவர். “சித்ரா இல்லீங்களா?”

“இல்ல” என்றார் இவர். அந்த நபர் நூறுரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்து, நூறு ரூபாயா என்று தடவித் தடவி சரி பார்த்து “சித்ராகிட்ட குடுக்கணும்” என்றார்.

ஸ்பீட்போஸ்ட் அம்மணி பக்கத்து கவுண்ட்டரி்ல் கொடுக்கச் சொல்ல அந்த நபர் “சரிங்க.. நான் நாளைக்கே குடுத்துடறேன்” என்று திரும்பி ஸ்டெப் வைத்து நடந்துபோனார்.

ஒரு பார்வையற்ற நபரின் குரலுக்கு முதல்தடவையிலேயே பதில் சொல்ல என்ன வந்தது இவருக்கு? இவர் அமைதியாக பதில் சொல்லாமல் இருப்பது கண்டு, அந்த நபரே “ஓ.. நீங்களா” என்று கேட்கிறார். உள்ளே பணிபுரியும் சக அலுவலருக்கே ரெஸ்பான்ஸ் இல்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஸ்பீட் போஸ்ட் வேலையை முடித்ததும் - திடீரென்று ஒன்று தோன்றியது.

85க்குப் பின் அல்லது 90களில் பிறந்தவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதில் கடிதம் சென்றிருக்குமா அவர்களுக்கு?

பக்கத்து கவுண்ட்டரில் கேட்டேன்.

“இன்லாண்ட் லெட்டர் இல்லீங்க”

“ஓ... நாளைக்கு வரும்களா?”

“தெரியலைங்க”

“இல்ல மேடம்.. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் கடிதம் எழுதறதுன்னு நாலைஞ்சு பேர் முடிவு பண்ணீருக்கோம். அதுக்காக..”

“நல்ல விஷயம். பண்ணுங்க. இன்லாண்ட் இல்லை”

நான் வெளியில் வந்துவிட்டேன்.

**

நேற்றைக்கு வேறொரு போஸ்ட் ஆஃபீஸில் விசாரித்தபோதும் “இன்லாண்ட் இல்லை” என்ற பதிலே வந்தது.

“ஏப்ரலுக்கப்பறம்தான் வரும் சார். எந்த போஸ்ட் ஆஃபீஸ்லயும் இல்லை” என்றார்.

வெளியில் வந்தபோது, கையில் பேப்பர்களுடன் ஒருத்தர் நின்றிருந்தார். கோடுபோட்டப்பட்ட பேப்பரில் பலரின் கையெழுத்துகள். என்னவென்று கேட்டேன்.


“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”

*******

Monday, February 9, 2015

சாருவுடன் ஒரு சந்திப்பு

12வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் இனிதே நிறைவுற்றது. திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியமாகிறது. எந்நேரமும் தொழில் குறித்த சிந்தனையும், கொஞ்சமும் ஓய்வில்லாத மனவோட்டமும் கொண்ட மனிதர்களிடையே வாசிப்பு குறித்த உணர்வை, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மூலம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பின்னல் புத்தக நிலையத்திற்கு பாராட்டுகளும், அன்பும்.

***

நாசர், மனுஷ்யபுத்திரன், பூமணி, சாருநிவேதிதா என்று இந்த வருடம் விஐபிக்களின் வருகையால் மகிழ்வுற்றனர் வாசகர்கள்.
“நாம மீட் பண்றது இதான் மொத டைம்ல?” என்றார் சாருநிவேதிதா, என்னை நண்பர் அவரிடம் அறிமுகப்படுத்தியபோது. நான் ஏதேதோ உளறினேன் என்றாலும் இதுதான் முதல்முறை அவரை சந்திப்பது. ஆனால் அப்படி நினைக்காமல் இருக்க வைத்தது அவருடன் உரையாடிய நிமிடங்கள்.



நான் அப்படி ஒன்றும் பெரிய ஆளில்லையெனினும்,
“ஓ.. நீங்கதான் அவரா?” என்று ஒரு கெத்தாகக் கேட்டுவிட்டு போய்விடாமல், ஞாபகம் வைத்திருந்து உரையாடிய சாரு நிச்சயம் வித்தியாசப்பட்டுக் கவர்ந்தார்.


***



திருப்பூரின் எழுத்தாளர் லெனினின் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஸ்டால் போட குழி தோண்டிய நாளிலிருந்து, முடியும் நாள் வரை அவர் வீட்டுக் கல்யாணம் போல பாவித்துக் கொண்டிருந்தார். அறிந்த முகங்களை வரவேற்பது, விருந்தினர்களை உபசரிப்பது, கூட்டம் எத்தனை என்று அவ்வப்போது மேடை முன்னிருக்கும் பார்வையாளர்களை எண்ணிப் பார்த்துக் கொள்வது, யாருக்காவது ஏதாவது உதவி என்றால் முகத்தைப் பார்த்தே, ‘என்னாச்சுங்க’ என்று ஓடிப் போய்க் கேட்டு உதவுவது என்று அனைத்தனையும் புன்னகை மாறாத முகத்தோடு செய்து கொண்டிருந்தார்.

சனிக்கிழமை சாருவை காரில் அனுப்பிவிட்டபிறகு,  எழுத்தாளர்கள் பாரதி சுப்பராயன், செல்வகுமார் பழனிச்சாமி மற்றும் லெனினுடன் டின்னர். சுவையான அரட்டையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், லெனின் மட்டும் கொஞ்சம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு கேட்டேன்:

“என்னாச்சுங்க.. என்னமோ மாதிரி இருக்கீங்க?”

“ஆமா பரிசல். கொஞ்சம் வருத்தமா இருக்கு”

“ஏன்?”

“கூட்டம் கொஞ்சம் கம்மி இன்னிக்கு. என்னான்னு தெர்ல. அதுபோக நாளையோட கண்காட்சி வேற முடியுது. இனி அடுத்த வருஷம்தான்” என்றார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கண்காட்சி குறித்த சிந்தனையோடேதான் திரிந்தார்.

**

ண்பர் கவின் ஆசிரியராய் இருக்கும், “பாஷோ’ ஹைக்கூ இதழை திங்களன்று மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். போலவே சனிக்கிழமை ட்விட்டர் நண்பன் “செல்வு எஃபெக்ட்” புகழ் செல்வா அழைத்தான்.

“அண்ணே.. எங்கிருக்கீங்க?”

“ஆஃபீஸ்ல. என்னாச்?”

“என்னோட எலி நாவலை சாரு கொஞ்ச நேரம் முந்தி வெளியிட்டுட்டார். இங்க வருவீங்களா?”

“கொஞ்சநேரத்துல அங்கிருப்பேன்” என்று சென்றேன்.

வெளியிட்ட உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. முன்னுரையை எழுதிக் கொடுத்திருந்தேன். என் புத்தகத்திற்கும், இதற்கும் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாய்ப் பட்டது. முக்கியமான ஒற்றுமை எழுத்துப் பிழைகள். கிருஷ்ணகுமாரை, கிருஷ்ணக்குமாராக்கியது உட்பட சில. இதை ஜாலியாகத்தான் சொல்கிறேன் என்பதற்காக இங்கே ஒரு ஸ்மைலியை கற்பனை செய்துகொள்ளுங்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் புத்தகத்தைப் பார்த்ததும் ஏற்கனவே வேறொருவர் மூலமாக இந்தப் புத்தகம் குறித்து அறிந்ததையும், புத்தகத்தின் ஃபாண்ட் உட்பட சிலது குறித்தும் அவர் உரையாடியது செல்வாவுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என அவதானிக்கிறேன்.

விஜய்யின் அடுத்தபடம் புலி. வடிவேலுவின் அடுத்தபடம் எலி என்கிற சூழலில் இந்த நாவல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாங்கி, ஊக்குவிக்குமாறு கே.கொ.

**

னவரி 30லிருந்து ஃபிப்ரவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெற்றாலும், நாசர் வந்த - கடந்த - ஞாயிறுதான் கூட்டம் என்றார்கள். சினிமா பிரபல்யம். இது குறித்து லெனினுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘சினிமால மாஞ்சு மாஞ்சு புக் படிக்கற ஆளுக நிறைய இருக்காங்க. அடுத்தவாட்டி அவங்களையெல்லாமும் கூப்டணும்’ என்று பேச்சு வந்தது. ராஜேஷ், கரு. பழனியப்பன், கிட்டி, மிஷ்கின் என்று பல பேர் அடிபட்டது.

அடுத்தவருடத்திற்கு இன்னும் 365 நாட்களிருக்கிறது. அதற்குள் எப்படியாவது நயன்தாராவோ, நமீதாவோ நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லவில்லை.

**

Saturday, February 7, 2015

சென்னை!

“ஜப்பான், அமெரிக்கா, சீனா மூணு பேரும் இவனுக ஒருத்தனையும் விட்றாதீங்க. எல்லாவனையும் சாவடிங்க. ஒரு தமிழனும் இருக்கக்கூடாது. இவனுகள்ல ஒருத்தனுக்கும் அறிவில்ல. சுயநலம் பிடிச்சவனுக. எல்லாத்தையும் அழிக்கணும்.. விடக்கூடாது” - காந்திசிலைக்குக் கொஞ்சம் தள்ளி நடந்தபோது கையில் பிரம்புடன் ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார். கலைந்த, அழுக்கு உடை. பழுப்பான கண்களில் ஏதோ வெறி. குரல்மட்டும் அத்தனை தீர்க்கம். அதுவும் வாகன இரைச்சல்களற்ற அந்த அதிகாலை ஆறுமணிக்கு தெளிவாக நூறு அடிவரை அவர் குரல் கேட்ட இடம் மெரினா. 

**
த்தனையாவது  முறை என்று தெரியவில்லை. ஜனவரி 30-31 சென்னை சென்றிருந்தேன். சென்னையைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அது என் ஊர் என்கிறாற்போல ஒரு நெருக்கத்தை உணர்கிறேன். சனிக்கிழமை காலையில், மெரினா சென்று இரண்டு மணிநேரங்களை செலவிட்டேன். மக்கள். மக்கள். மக்கள். “நைட் கொஞ்சம் ஏறிடுச்சு மாமூ” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அருகம்புல் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். யுவன் - யுவதிகள் காதில் இயர்ஃபோன். அங்கங்கே சின்னஞ்சிறார்கள், கோச்சுடன் வந்திருந்தார்கள். ஒரு கோச், ‘லேட்டா வந்தியில்ல, அவன் பேக்கையும் நீ தூக்கீட்டு ஓடு’ என்று தண்டனையாய்ச் சொன்னதை லேட்டாய் வந்த பையன் உற்சாகமாய் செய்ததைக் காணமுடிந்தது.





‘கைவிரல் தரைல தொடணும். அப்டியே இடதுபக்கம் தலையை மட்டும் திருப்புங்க. அப்டியே நிமிந்து, மறுக்கா விரல் தொட குமிஞ்சு வலது பக்கம் திரும்புங்க. டென் டைம்ஸ்’ என்ற குரல் கேட்ட இடத்தில் குழுவாக நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனுக்கு வலதும் இடதுமாய் இளைஞிகள் இருக்க, முழு உற்சாகமாய் இருபுறமும் திரும்பிக் கொண்டிருந்தான். 


“அம்பது கிலோ மூட்டை. அப்டியே இப்டிக்கா தூக்கி, அப்டிக்கா அடுக்குவேன். இன்னா நென்ச்ச நீயி?” இளநீர்க் கடையொன்றின் முன் நான்கைந்து பெருசுகள் அமர்ந்திருக்க, ஒருவர் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் அத்தனை ஒல்லி. ‘ஒடம்பு இருந்தா பலம் இருக்குன்னு அர்த்தமாக்கும்?’ என்றார் அவர். ‘சரி சரி போ.. ஒனக்கு ஆள் வந்துடுச்சு’ என்று அமர்ந்திருந்தவர் சொல்ல. கிட்டத்தட்ட அவர் சைஸுக்கு ஐந்து மடங்கிருந்த ஒரு பெண்மணி மூச்சிரைக்க நடந்து வந்து, ‘என்னாங்குது ஓமக்குச்சி?’ என்று இவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு ‘வாய்யா போலாம்’ என்று நடந்தார்.

**

ஃபீனிக்ஸ் மால் LUXE திரையரங்கு. 150 ரூபாய் டிக்கெட். நிச்சயமாகக் கொடுக்கலாம், அந்தத் திரையரங்குக்கு. ஒவ்வொரு அடியிலும் உங்களைக் கவர ஏதோ ஒன்றை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தில், சத்யராஜ் சுருட்டு பற்ற வைக்கும்போதெல்லாம் சுருட்டின் பேப்பர் கருகும் ஓசை காதுக்கருகில் கேட்கிறது. ஒலி அத்தனை துல்லியம். இந்தத் தியேட்டரில், நாயகி சாவித்திரியின் தொப்புளைக் காண்பித்த சைஸில்தான் சி செண்டர் டூரிங் டாக்கீஸ்களின் மொத்தத் திரையே இருக்கும்போல. (ஒரு குறிப்பு: தொப்புள் ரசிகரான கே.எஸ்.ரவிகுமாருக்கு சரியான போட்டி எஸ்.ஜே.சூர்யா என்றால் அது.... அதென்னது... ஆங்.. மிகையாகாது!)

வ்வொரு கடையையும் சுற்றிவரவே, நேரம் சரியாக இருக்கிறது. யார் போனாலும் HIDESIGN கடைக்குச் செல்ல மறக்காதீர்கள். ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் தோத்தார்கள்!

**
ருகாலத்தில் மந்திரமாய் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ஸ்பென்சர் ப்ளாஸா’ மார்க்கெட் இழந்த நடிகையாக (படு மொக்கையான, பல பேர் சொன்ன உதாரணம்) பொலிவிழந்து நிற்க, அதைத் தாண்டி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. இதைப் போன்ற மால்களை மக்கம் ஈக்களாய் மொய்க்க, சுத்தமும், சுதந்தரமும்தான். போலவே, கஸ்டமர் கேர். எந்தக் கடையிலாவது ‘இது என்ன விலையிருக்கும்?’ என்று உங்கள் மனதுக்குள் நினைத்தால் ‘நைன் ஹண்ட்ரண்ட் சார்’ என்று தோளுக்கருகே குரல் கேட்கும். வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவர்கள் முகம் அஷ்டகோணலாவதுமில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு கடை விடாமல் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்று கூட வாங்காமல். ஒரு கடையிலும் அவரை தடுக்கவோ, வேண்டாமென்று சொல்லவோ இல்லை.

**

த்தனை முறை  சென்றாலும் இடங்கள், வழிகள் என்றால் எனக்கு தடுமாற்றம்தான். முகவரி கேட்டால் ஆட்டோகாரர்கள் அத்தனை பாந்தமாக உதவுகிறார்கள். "உட்லண்ட்ஸ்னா நியூ உட்லண்ட்ஸா? நேரா போங்க. யாரையும் கேட்கவேணாம். ஒண்ணு, ரெண்டு, மூணு... நாலாவது சிக்னலாண்ட லெஃப்ட். அங்கிருந்து நேரப்போனீங்கன்னா.. ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சாவது சிக்னலாண்ட லெஃப்ட் எடுங்க. ஃப்ளை ஓவர் வரும். அதுல போகக்கூடாது. கீழ போனீங்கன்னா... ஆமா எங்கிருந்து வர்றீங்க?"

"திருப்பூர்"

"அப்ப வேணாம். கஷ்டம்.. நீங்க என்ன பண்றீங்க.. நேராப் போய்ட்டேஏஏஏஏ இருங்க. நாலாவது சிக்னல்ல லெஃப்ட் எடுங்க. யாரையும் கேட்கவேணாம்... " என்று தொடர்ந்தார்.

வழி சொல்கிற அனைவரின் வாயிலும் "யாரையும் கேட்கவேணாம்" தவறாமல் வருகிறது. 

சனிக்கிழமை காலை மெரினா வாக்கிங் போனேன் அல்லவா? அன்று மாலை நண்பர் அப்துல்லாவைச் சந்தித்தபோது “அண்ணே.. நாளைக்கு சாந்தோம் பீச் போலாம்னிருக்கேன். எப்டிப் போறதுண்ணே?” என்றேன். 

“இன்னைக்கு எங்க போனீங்க?”

“வீரமா முனிவர் சிலைக்குப் பக்கத்துல காரை நிறுத்தீட்டு, ஒரு கிலோ மீட்டர் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போனேன்”

“அதாண்ணே சாந்தோம் பீச்”

ஓஹோ என்று வழிந்துவிட்டு வந்தேன். 

ஞாயிறு திரும்பும்போதுதான் ஞாபகம் வந்தது. நான் கேட்க நினைத்தது பெசண்ட் நகர் பீச். 

****